கோவை அவனாசிலிங்கம் மகளிர் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ள புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை செளந்தராஜன் விமானம் மூலம் கோவை வந்தார். கோவை விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ”புதுச்சேரி மாநிலம் வெளிச்சமாக தான் இருக்கின்றது. இருளில் முழ்கவில்லை. 4 மணி நேரம் மட்டுமே மின்சாரம் இல்லாமல்  பாதிப்பு ஏற்பட்டது. சிலர் செய்த பிரச்சினையால் மின தடை ஏற்பட்ட நிலையில், மாற்று நடவடிக்கை எடுத்து சரி செய்யப்பட்டது. மின் ஊழியர்கள் போராட்டம் வாபஸ் பெற்றது மகிழ்ச்சியளிக்கிறது. 


தனியார் மயமாக்கல் என்றதும், மின்துறையை முழுவதுமாக கொடு்த்துவிடுவதாக சிலர் நினைத்து சமூக வலைதளங்களில் எழுதி வருகின்றனர். ஆனால் அப்படி இல்லை. இதனால்  பொது மக்களுக்கு அதிக லாபம் கிடைக்கும். பல துணைநிலை மாநிலங்களில் மின்துறை தனியாருக்கு கொடுக்கப்பட்டு இருக்கின்றது. இதனால் மக்களுக்கு வேண்டிய அளவிற்கு மின்கட்டணம் குறைக்கப்படும். 24 மணி நேரமும் சிறப்பான செயல்பாடு இருக்கும். இதனால் மின் ஊழியர்கள், அதிகாரிகள் பணி எந்த விதத்திலும் பாதிக்கப்படாது. ஒரு சாராருக்கு பாதிப்பை ஏற்படுத்தி இந்த திட்டத்தை கொண்டு வர வேண்டும் என அரசுக்கு எண்ணம் கிடையாது. இது மக்கள் நலன் சார்ந்து எடுக்கப்பட்ட முடிவு தான்.


மின் திருட்டு  தடுக்கப்படுதால் சிலர் இந்த் போராட்டங்களை தூண்டி இருக்கலாம். இதனால் மின் துறை ஊழியர்கள், அதிகாரிகள் பணியிலோ, பதவி உயர்விலோ எந்த பாதிப்பும் ஏற்படாது. இது தொடர்பான முடிவுகள், முதல்வருடன் பேசித்தான் எடுக்கப்படுகின்றது. கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என சொன்னது கூட பொதுமக்கள் பாதிக்க கூடாது என்பதற்காக தான். இதை ஊழியர், அதிகாரிகள் புரிந்து கொண்டு இருப்பார்கள். புதுவை இப்போது நன்றாக இருக்கின்றது, புதுவை மாடல் இனி உயர்ந்த மாடலாக இருக்க போகின்றது.  மாடல் என்பதை விட புதுவை மாதிரி என்று தான் சொல்ல வேண்டும் , புதுமை மாதிரியாக இருக்கும் வகையில் பல நிகழ்வுகள் நடக்க இருக்கிறது. இதை மக்கள் உணர்வார்கள்.


மின்தடை பிரச்சினையால் சுற்றுலா பயணிகள் மத்தியில் அச்சம் ஏற்பட்டது உண்மைஎன்றாலும்,  உடனடியாக பிரச்சினை சரி செய்யப்பட்டது. எந்த போராட்டத்தாலும் பொதுமக்கள் பாதிக்கக்கூடாது. சுமூக பேச்சுவார்த்தை மூலம் உடன்பாடு ஏற்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. தனிபட்ட முறையில் இந்த திட்டம் மக்களுக்கு பலன் தரும். மின் ஊழியர்களின் போராட்டம் திரும்ப வருமா என இனிதான் பார்க்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.


ராஜ ராஜ சோழன் குறித்த இயக்குனர் வெற்றிமாறன் கருத்துக்கு  கமலஹாசன் ஆதரவு கொடுத்திருப்பது குறித்த கேள்விக்கு, “இதற்கு சிரிப்பதா என்ன செய்வது என தெரியவில்லை. தஞ்சை பெரிய கோவிலை பார்த்து வளர்ந்தவள் நான். இதில் அடையாளங்களை மறைக்க பார்க்கின்றனர். இந்து மதத்தின் கலாச்சார அடையாளங்களை மறைப்பதை, எல்லோரும் எதிர்த்து குரல் கொடுக்க வேண்டும். ஏற்கனவே பல அடையாளங்கள் மறைக்கபட்டு இருக்கின்றது. இந்து மதத்தின் கலாச்சார அடையாளத்தை தேவைக்காக திருப்பி கொண்டால் அதை ஏற்று கொள்ள முடியாது. தமிழர்களின்  அடையாளம் இறை வழிபாடு.  சைவம், வைணவமும் இந்து மதத்தின் அடையாளங்கள் தான். அவை இந்து மதத்தின் அடையாளங்கள் இல்லை என்பதை ஏற்க முடியாது. இந்து மதத்தின் அடையாளத்தினை மறைக்க முற்படுகின்றனர். அடையாளங்களை மறைக்க முற்பட்டால் அதுசரியாக இருக்காது” என அவர் பதிலளித்தார்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண