கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடியை முன்னாள் அதிமுக அமைச்சரும் தொண்டாமுத்தூர் சட்டமன்ற உறுப்பினருமான எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட 8 சட்டமன்ற உறுப்பினர்களும் சந்தித்தனர். தொகுதி வாரியாக உள்ள பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதும், சட்டமன்ற உறுப்பினர் நிதியை முறையாக பங்கீடு செய்து கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் அடங்கிய மனுவை அவர்கள் ஆட்சியரிடம் அளித்தனர். அதில் கிணத்துக்கடவு சட்டமன்ற உறுப்பினர் தாமோதரன், வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமி, மேட்டுப்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் ஏ.கே.செல்வராஜ், கோவை வடக்கு சட்டமன்ற உறுப்பினர் அம்மன் அர்ச்சுனன், கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.ஜி அருண்குமார், சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் ஜெயராமன், சூலூர் சட்டமன்ற உறுப்பினர் கந்தசாமி ஆகியோர் வந்திருந்தனர்.




மாவட்ட ஆட்சியரிடம் மனுக்களை அளித்த பிறகு எஸ்.பி வேலுமணி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், திமுக ஆட்சியில் கோவைக்கு கடந்த 3 ஆண்டுகளாக எந்த திட்டமும் நடைபெறவில்லை. அதிமுக காலத்தில் கோவைக்கு பல்வேறு திட்டங்களை கொண்டு வந்தோம். சிறுவாணி தண்ணீர் பிரச்சனைக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும். பல்லடம் தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் தாக்கப்பட்ட சம்பவத்தில் முன்கூட்டிய காவல் துறையிடம் பாதுகாப்பு கேட்டு தரவில்லை. கனிமவளம் கொள்ளை அதிகமாக நடந்து வருகிறது. ஊருக்குள் வனவிலங்கு வருவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பெரும்பாலான சாலைகள் குண்டும் குழிகளாகவும் உள்ளது. அதை சீரமைக்க வேண்டும் எனவும் குப்பைகள் தேங்காமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.


கோவை மாவட்டத்தில் அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தில் விடுபட்ட பகுதிகளான தொண்டாமுத்தூர், மேட்டுப்பாளையம், பெரியநாயக்கன்பாளையம், அவிநாசி, சுல்தான்பேட்டை, சூலூர் ஆகிய பகுதிகளை இணைத்து அத்திக்கடவு அவிநாசி திட்டம் 2 திட்டத்தை செயல்படுத்தப்பட அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும். கோவை மாவட்டத்தில் அ...தி.மு.கழகம் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு அதிகாரிகள், வேண்டுமென்றே அரசியல் காழ்புணர்ச்சியோடு, பழிவாங்கும் நடவடிக்கையாக பல்வேறு இடையூறுகளை அளித்து வருகிறது. குறிப்பாக ஊராட்சி மன்ற தலைவருக்கு குற்றச்சாட்டு குறிப்பானைகளை வழங்கி Section 205யை பயன்படுத்தி ஊராட்சி மன்ற தலைவருக்கான அதிகாரங்களை பறிக்கின்றனர். இதுபோன்ற நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்தி, மக்களால் தேர்ந்தேடுக்கப்பட்ட ஊராட்சி மன்ற தலைவர்கள், சுதந்திரமாக செயல்பட அனுமதிக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.