கோவை பீளமேடு பகுதியில் வீட்டில் இருந்த 5 பேரை கட்டிப்போட்டு கத்தியைக் காட்டி மிரட்டி 40 இலட்ச ரூபாய் மதிப்பிலான நகை, பணத்தை அடையாளம் தெரியாத நபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கோவை உப்பிலிபாளையம் பகுதியில் ஹார்டுவேர் கடை நடத்தி வருபவர் முகமது. இவர் பீளமேடு புராணி காலனி பகுதியில் தனது தந்தை, மனைவி மற்றும் இரண்டு மகன்கள் உடன் வாசித்து வருகிறார். இந்த நிலையில் இன்று அதிகாலை சுமார் 5 மணி அளவில் அவரது வீட்டில் முன்பக்க கதவை உடைத்து உள்ளே நுழைந்த நான்கு பேர் கொண்ட அடையாளம் தெரியாத ஒரு கும்பல் கத்தியை காட்டி மிரட்டி உள்ளது. மேலும் வீட்டில் இருந்த ஐந்து பேரையும் கட்டி போட்டு அங்கிருந்த நகை, பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து விட்டு, கண்ணிமைக்கும் நேரத்தில் தப்பி ஓடி உள்ளனர்.


மெக்கா செல்வதற்காக 10 லட்சம் ரூபாய் பணத்தை அவர் பீரோவில் வைத்திருந்த நிலையில் அந்த பணத்தை கொள்ளையடித்த கும்பல், பிரோவிலிருந்த சுமார் 20 சவரன் தங்கம், வைர நெக்லஸ், வெளிநாட்டு கரன்சி நோட்டுகள் மற்றும் விலை உயர்ந்த கைகடிகாரம் உட்பட சுமார் 40 லட்சம் மதிப்பிலான நகைகள் மற்றும் பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து தப்பியோடினர். வீட்டின் காவலாளி விடுப்பில்  இருந்ததால் கடையில் வேலை பார்க்கும் நபரை காவலுக்கு அமர்த்திய நிலையில், அவர் வீட்டில் உள்ள ஒரு அறையில் தூங்கியதால்  சம்பவம் நடந்தது எதுவும் தெரியாமல் இருந்துள்ளது. மேலும் கடையில் பணியாற்றுபவர்களுக்கு ஊதிய தொகை கொடுப்பதற்காக வைத்திருந்த தொகையும் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்துள்ளது.


இதனைத்தொடர்ந்து கொள்ளையர்கள் அங்கிருந்து வெளியேறிய பிறகு வீட்டில் இருந்தவர்கள் சத்தம் மிட்டதால், அங்கு வந்த அருகில் இருந்தவர்கள் அளித்த தகவலின் பேரில் விரைந்து சென்ற பீளமேடு காவல் துறையினர் சம்பவ இட்டத்தில தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். மேலும் சம்பவத்தில் ஈடுபட்டவர்களை பிடிப்பதற்காக நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றி கொள்ளையர்களை காவல் துறையினர் தேடி வருகின்றனர். இந்த துணிகர கொள்ளை சம்பவம் குறித்து பீளமேடு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வீட்டில் இருந்தவர்களை கட்டிப்போட்டு நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதேபோல கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆர்.எஸ்.புரம் பகுதியில் வீட்டில் இருந்தவர்களை கட்டிப்போட்டு 13 இலட்ச ரூபாய் பணம், நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் நடந்தது குறிப்பிடத்தக்கது.