கோவை மாவட்டம் கருமத்தம்பட்டியை சார்ந்தவர் கனகராஜ். இவர் திருப்பூர் மாவட்டம் எம்.நாதம்பாளையம் அரசு துவக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். பாரம்பரிய கலைகளின் மீது அதிக ஆர்வம் கொண்ட இவர், கொங்கு மண்டலத்தின்  பாரம்பரியக் கலைகளை மீட்டெடுக்க 2012 ஆண்டு சங்கமம் கலைக் குழுவை ஏற்படுத்தினார். அதில் ஒயிலாட்டம், வள்ளி கும்பி, காவடி ஆட்டம் ஆகிய கிராமிய கலைகளை கிராமப்புற இளைஞர்கள், இளம் பெண்கள், பள்ளி மாணவர்கள் என அனைத்து தரப்பினருக்கும் இலவசமாக கற்றுக் கொடுத்து வருகிறார். இதுவரை 40 கிராமங்களை சார்ந்த 2000க்கும் அதிகமானோருக்கு கற்றுக் கொடுத்து அரங்கேற்றம் செய்துள்ளார். 




இது குறித்து கனகராஜ் கூறும் போது, ”சங்கமம் கலைக் குழுவால் கொங்கு மண்டலத்தில் அழிந்து போன பல நாட்டுப்புற கலைகள் உயிர் பெற்று வருகின்றது. நாட்டு புற கலைகள் உயிர்ப்போடு இருந்தால் தான் அந்த நாட்டின் பாரம்பரியம் காப்பாற்றப்படும். இதற்காக ஒவ்வொரு கிராமத்திற்கும் சென்று கலை ஆர்வம் உள்ளவர்களை தேர்வு செய்து 6 மாதம் பயிற்சி வழங்கி கலைக் குழுவை உருவாக்கி வருகிறோம். தமிழகத்தில் 120 பாரம்பரிய கலைகள் உள்ளதாக அரசு அறிவித்துள்ளது. அதில் கொங்கு மண்டலத்தில் ஒயிலாட்டம், காவடி ஆட்டம் வள்ளி கும்மி, சலங்கை ஆட்டம் ஆகியவை முக்கியமானவை. இவை ஒரு சில இடங்களில் மட்டுமே ஆடப்பட்டு வருகிறது. 




அழிவின் விளிம்பில் உள்ள இந்த கலைகளை மீட்டெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம். கோவை மட்டுமல்ல அண்டை மாவட்டங்களிலும் இக்கலையை இலவசமாக கற்றுக் கொடுத்து வரும் நிலையில், கொங்கு மண்டலத்தின் பாரம்பரிய கலைகளை வெளிநாட்டினரும் அறிந்து கொள்ளும் வகையில் மலேசியா, இலங்கை ஆகிய பகுதிகளுக்கு சென்று ஒயிலாட்டத்தையும் காவடியாட்டத்தையும் அரங்கேற்றம் செய்ய உள்ளோம். அழிந்து வரும் பாரம்பரிய கலைகளை கொங்கு நாட்டில் மீட்டெடுக்க வேண்டும் என்பதற்காக சங்கமம் கலைக்குழு கோவை மாவட்டத்தின் பல பகுதிகளில் பல்வேறு இடங்களில் அரங்கேகேற்றத்தை நடத்தியுள்ளது. இதன் மூலம் பல்வேறு விழிப்புணர்வுகளையும் மக்களிடம் ஏற்படுத்தி வருகிறோம்” எனத் தெரிவித்தார்.




இது குறித்து ஒயிலாட்டம் பயின்ற கல்லூரி மாணவர்கள் கூறுகையில், ”அழகு, ஒய்யாரம் என பொருட்படும் ஒயில் என்பது, ஆட்டத்துடன் இணைந்து ஒயிலாட்டமாக பெயர்படும் இக்கலை, ஒரே நிற துணிகளை கைகளில் வைத்து கொண்டு இசைக்கேற்ப வீசி ஆடும் குழு ஆட்டம். ஒயிலாட்டம் பழகும் போது பல அசைவுகளை ஞாபகத்தில் வைத்திருக்க வேண்டும். ஒவ்வொரு முறையும் பல்வேறு அசைவுகளை ஞாபகம் வைத்துக் கொள்வதால் ஞாபகத் திறன் அதிகரிக்கிறது. இதன் காரணமாக கல்வியிலும் தங்களுக்கு ஞாபகத் திறன் அதிகமாகிறது. அதே சமயம் மனதை ஒருமுகப்படுத்தி கல்வியில் வெற்றி பெறுவதுடன் நம்முடைய பாரம்பரிய கலைகளை கற்பது பெருமையாக உள்ளது. அதுமட்டுமின்றி இசையும், நடனமும் இணைந்து இருப்பதால் உடலும், உள்ளமும் வலுப்பெறும்” எனத் தெரிவித்தனர். 




ஒயிலாட்டத்தில் அதிக அளவில் பெண்களும் பங்கெடுத்து வருகின்றனர். இது குறித்து குடும்ப பெண்கள் கூறுகையில், “வீட்டிலேயே முடங்கி இருக்கும் தங்களுக்கு ஒயிலாட்ட பயிற்சிக்கு வரும் போது பல்வேறு அறிமுகங்கள் கிடைப்பதால் நட்பு வட்டம் அதிகமாகிறது. உடலை அசைத்து ஆடுவதன் மூலம் பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு ஏற்படுகிறது. அதே சமயம் பாரம்பரிய கலைகளை மீட்பதில் தங்களுக்கும் ஒரு பங்கு இருப்பதை நினைத்து பெருமை படுகிறோம்” எனத் தெரிவித்தனர். சங்கமம் கலைக்குழுவின் முயற்சிக்கு கிராமப்புற மக்களிடையே அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண