நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டு அந்த உத்தரவு நிறுத்தி வைக்கப்பட்ட பிறகு முன்னாள் காங்கிரஸ் கட்சி தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல்காந்தி இன்று முதல் முறையாக வயநாடு தொகுதிக்கு செல்ல உள்ளார். இன்று காலை டெல்லியில் இருந்து விமானம் மூலம் கோவைக்கு ராகுல்காந்தி வருகை தந்தார்.


அப்போது கோவை விமான நிலையத்தில் காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் கார் மூலம் சாலை மார்க்கமாக நீலகிரிக்கு ராகுல் காந்தி வருகை தந்தார். இதனிடையே கோத்தகிரி வழியாக வந்த ராகுல் காந்தி அரவேனு பகுதியில் தேயிலை தோட்ட தொழிலாளர்களை சந்தித்து பேசினார். அப்போது ‘வருங்கால பிரதமர் ராகுல்காந்தி’ என தேயிலை தோட்ட தொழிலாளர்கள் முழக்கமிட்டனர். மேலும் ராகுல் காந்தியுடன் புகைப்படங்களையும் எடுத்துக் கொண்டனர்.




எல்லநள்ளி பகுதியில் உள்ள ஒரு தனியார் ரிசார்ட்டில் விண்வெளி வீரர் ராகேஷ் ஷர்மா உடன் ராகுல்காந்தி கலந்துரையாடினார். பின்னர் அதேபகுதியில் சாக்லேட்கள் தயாரிக்கப்படும் முறையினை ராகுல் காந்தி பார்வையிட்டார். இதனைத்தொடர்ந்து முத்துநாடுமந்து என்ற தோடர் பழங்குடியின கிராமத்திற்கு ராகுல் காந்தி வருகை தந்தார். அவருக்கு தோடர் பழங்குடிகள் தங்களது பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளித்தனர். அப்போது பழங்குடியின மக்களுடன் ராகுல் காந்தி கலந்துரையாடினார். பின்னர் தேக்சீ அம்மன் முன்போ கோவிலை ராகுல் காந்தி பார்வையிட்டார். அப்போது அங்கிருந்த மக்கள் அக்கோவிலைப் பற்றி அவருக்கு எடுத்துரைத்தனர்.




பின்னர் இளைஞர்கள் தங்களது பலத்தை காட்டும் வகையில் இளவட்டக்கல் தூக்குவதையும், பழங்கால முறைப்படி நெருப்பு மூட்டும் முறையையும் ராகுல் காந்தி பார்வையிட்டார். தோடர்களின் பாரம்பரிய உடையணிந்து ஆண்கள் மற்றும் பெண்கள் உடன் இணைந்து ராகுல் காந்தி நடனமாடினார். அப்போது ஒரு பெண் குழந்தையை ராகுல்காந்தி தூக்கி கொஞ்சியபடி முத்தமிட்டார். அப்போது பேசிய ராகுல் காந்தி, “ஐ லவ் டிரைபல்ஸ்” என்றார். இதையடுத்து கூடலூர் வழியாக கேரள மாநிலத்திற்குள் உள்ள வயநாடுவிற்கு ராகுல் காந்தி சென்றார். அங்கு நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் ராகுல் காந்தி பங்கேற்க உள்ளார். இதையொட்டி கோவை மற்றும் நீலகிரியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.


கடந்த 2019ம் ஆண்டு தேர்தல் பரப்புரையின்போது மோடி எனும் சமூகப் பெயரை இழிவுபடுத்தும் விதமாக, ராகுல் காந்தி பேசியதாக சூரத் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இதையடுத்து அவர் மக்களவை உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். பின்னர் ராகுல் காந்திக்கு எதிரான அவதூறு வழக்கில் சூரத் நீதிமன்றம் விதித்த இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனையை, உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்தது. இதனால், 136 நாட்களுக்குப் பிறகு மீண்டும் எம்.பி. ஆனார் ராகுல் காந்தி. முன்னதாக அவரது எம்.பி பதவி பறிக்கப்பட்டபோது, நாடாளுமன்ற உறுப்பினர் என இருந்த தனது டிவிட்டர் பயோவை தகுதி நீக்கம் செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் என மாற்றினார். இந்நிலையில், அவர் மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினராக அங்கீகரிக்கப்பட்டு உள்ளதால், தனது டிவிட்டர் பயோவில் மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினர் என குறிப்பிட்டார். பின்னர் நாடாளுமன்றத்தில் நடந்த நம்பிக்கையில்லாத தீர்மானம் குறித்து மக்களவையில் ராகுல் காந்தி உரையாற்றினார். இதையடுத்து முதல் முறையாக ராகுல் காந்தி வயநாடு தொகுதிக்கு சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.