நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டு அவ்வுத்தரவு நிறுத்தி வைக்கப்பட்ட பிறகு முன்னாள் காங்கிரஸ் கட்சி தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல்காந்தி இன்று முதல் முறையாக வயநாடு தொகுதிக்கு செல்ல உள்ளார். இன்று காலை டெல்லியில் இருந்து விமானம் மூலம் கோவைக்கு ராகுல்காந்தி வருகை தந்தார். அப்போது கோவை விமான நிலையத்தில் காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் கார் மூலம் சாலை மார்க்கமாக நீலகிரிக்கு ராகுல் காந்தி செல்ல உள்ளார். கேத்தி பகுதியில் விண்வெளி வீரர் ராகேஷ் ஷர்மா உடன் கலந்துரையாடும் ராகுல்காந்தி, சாக்லேட் தயாரிப்பை பார்வையிட உள்ளார்.


இதனைத்தொடர்ந்து முத்துநாடுமந்து என்ற தோடர் பழங்குடியின கிராமத்திற்கு செல்லும் ராகுல் காந்தி, பழங்குடியின மக்களுடன் கலந்துரையாட உள்ளார். மதியத்திற்கு பின்னர் கூடலூர் வழியாக கேரள மாநிலத்திற்குள் உள்ள வயநாடுவிற்கு ராகுல் காந்தி செல்ல உள்ளார். அங்கு நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் ராகுல் காந்தி பங்கேற்க உள்ளார். இதையொட்டி கோவை மற்றும் நீலகிரியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது..


கடந்த 2019ம் ஆண்டு தேர்தல் பரப்புரையின் போது கர்நாடகாவில் மோடி எனும் சமூகப் பெயரை இழிவுபடுத்தும் விதமாக, அப்போதைய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேசியதாக சூரத் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. பாஜக எம்எல்ஏவும் குஜராத் முன்னாள் அமைச்சருமான பூர்ணேஷ் மோடி தொடர்ந்த வழக்கில், ஒட்டுமொத்த மோடி சமூகத்தையும் ராகுல் காந்தி இழிவுபடுத்தியுள்ளதாக குற்றம் சாட்டினார். வழக்கை விசாரித்த நீதிமன்றம் 2023ஆம் ஆண்டு மார்ச் 23ஆம் தேதி ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இதையடுத்து அவர் மக்களவை உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். அவரது அரசு இல்லத்தில் இருந்தும் வெளியேற்றப்பட்டார். தண்டனைக்கு ஆட்சேபம் தெரிவித்த ராகுல் காந்தி, சூரத் செஷன்ஸ் நீதிமன்றத்தை அணுகி, தனது தண்டனைக்கு தடை விதிக்கக் கோரினார். இது ஏப்ரல் 20 அன்று நிராகரிக்கப்பட்டது. தொடர்ந்து, குஜராத் உயர்நீதிமன்றமும் ராகுல் காந்தியின் கோரிக்கையை கடந்த 7ம் தேதி தள்ளுபடி செய்தது. இறுதியாக உச்சநீதிமன்றத்த நாடியபோது தான், அவரது தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டது.


ராகுல் காந்திக்கு எதிரான அவதூறு வழக்கில் சூரத் நீதிமன்றம் விதித்த இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனையை, கடந்த 5ம் தேதி உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்தது. இதனை தொடர்ந்து அவரது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ரத்து செய்த நடவடிக்கையை திரும்பப் பெறுவதாக, மக்களவை செயலகம் அறிவித்தது. இதனால், 136 நாட்களுக்குப் பிறகு மீண்டும் எம்.பி. ஆனார் ராகுல் காந்தி. மக்களவை செயலகத்தின் அறிவிப்பை தொடர்ந்து ராகுல் காந்தி அடுத்தடுத்து அதிரடியான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறார். முன்னதாக அவரது எம்.பி பதவி பறிக்கப்பட்டபோது, நாடாளுமன்ற உறுப்பினர் என இருந்த தனது டிவிட்டர் பயோவை தகுதி நீக்கம் செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் என மாற்றினார். இந்நிலையில், அவர் மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினராக அங்கீகரிக்கப்பட்டு உள்ளதால், தனது டிவிட்டர் பயோவி மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினர் என குறிப்பிட்டார். பின்னர் நாடாளுமன்றத்தில் நடந்த நம்பிக்கையில்லாத தீர்மானம் குறித்து மக்களவையில் ராகுல் காந்தி உரையாற்றியது குறிப்பிடத்தக்கது.