கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியில் ’பாகுபலி’ என அழைக்கப்படும் காட்டு யானையின் நடமாட்டத்தை கண்காணிக்க, அதற்கு ரேடியோ காலர் பொருத்தும் பணிகளில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.


கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியில் ‘பாகுபலி’  என அப்பகுதி மக்களால் அழைக்கப்படும் ஒரு ஆண் காட்டு யானை உலா வருகிறது. நீண்ட தந்தங்களுடன் ஆஜானுபாகுவான உருவத்துடன் இந்த காட்டு யானை இருப்பதால், பாகுபலி எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்த யானை மற்ற யானை கூட்டத்தோடு சேராமலும் அடர்ந்த வனத்தினுள் செல்லாமலும் மாதக்கணக்கில் குடியிருப்பு பகுதிகளில் தனியே சுற்றித் திரிகிறது. யானைகள் ஒன்றிரண்டு வாரங்களுக்கு மேல் ஓரிடத்தில் தங்காமல் இடம் விட்டு இடம் மாறிவிடும் வழக்கம் கொண்டது. ஆனால் இந்த யானை கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக ஒரே பகுதியில் இருந்து வருகிறது. வனப்பகுதியில் இருந்து வெளியேறி இரவு நேரங்களில் குடியிருப்பு பகுதியில் சுற்றித்திரிந்த வருகிறது. இந்த யானை தற்போது வரை மனிதர்கள் யாரையும் தாக்கவில்லை என்றாலும், தொடர்ந்து உணவுக்காக விளைநிலங்களை சேதப்படுத்தி வருகிறது. இதனால் யானையை அடர் வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என விவசாயிகள் வனத்துறையினருக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.




இந்த நிலையில் பாகுபலி யானையை பிடித்து, ஜி.பி.எஸ் தொழில்நுட்பம் கொண்ட ரேடியோ காலர் பொறுத்தி அதன் நடமாட்டத்தை கண்காணிக்க வனத்துறையினர் முடிவு செய்தனர். இதற்காக பொள்ளாச்சி டாப்சிலிப் பகுதியில் இருந்து கலீம், மாரியப்பன், வெங்கடேஸ் என்ற 3 கும்கி யானைகள் மேட்டுப்பாளையத்திற்கு  வரவழைக்கப்பட்டன. இந்த கும்கி யானைகளின் உதவியுடன் மருத்துவ குழுவினர் மற்றும் வனத்துறையினர் இணைந்து பாகுபலி யானைக்கு ரேடியோ காலர் பொருத்துவதற்கான நடவடிக்கையை வனத்துறையினர் இன்று தொடங்கியுள்ளனர். இதற்காக மேட்டுப்பாளையம் மரக்கிடங்கு பகுதியில் நேற்று வனச்சரகர்கள் பழனிராஜா, செந்தில்குமார் ஆகியோர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் ஒரு வனவர் மற்றும் 5 வனக்காவலர்கள் என தலா 6 பேர் கொண்ட 7 குழுக்கள் அமைக்கப்பட்டன. இந்தக் குழுவினர் மேட்டுப்பாளையம் வேடர் காலனியை ஒட்டியுள்ள வனப்பகுதியில் ’ஆபரேஷன் பாகுபலி’ என்ற பெயரில் தற்போது யானையை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.




உடன் வன கால்நடை மருத்துவர் சுகுமார் தலைமையில் 5 பேர் கொண்ட மருத்துவ குழுவினரும் தயார் நிலையில் உள்ளனர். பாகுபலி யானையை கும்கி யானைகளின் உதவியுடன் மேடு பள்ளங்கள் இல்லாத சமதள பரப்புக்கு வரவழைக்கப்பட்டு, மயக்க ஊசி செலுத்தி பிடிக்க வனத்துறையினர் முடிவு செய்துள்ளனர். பின்னர்  அதன் கழுத்தில் ரேடியோ காலர் பொருத்தப்பட உள்ளது. இதன் மூலம் யானையின் நடமாட்டத்தை கண்காணிக்க முடியும் எனவும் குடியிருப்பு மற்றும் விளை நிலங்களுக்குள் யானை வருவதை தடுத்து வனப்பகுதிக்குள் எளிதில் விரட்ட முடியும் எனவும் வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.