வருகின்ற 30ம் தேதி பிரதமர் மோடி 3 நாட்கள் பயணமாக கன்னியாகுமரிக்கு வருகை தர உள்ளார். அதே போல் உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் மதுரைக்கு வருகிறார். இந்நிலையில் இருவரையும் கண்டித்து கருப்பு கொடி போராட்டம் நடத்த அனைத்து முற்போக்கு இயக்கங்கள் சார்பில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. இது குறித்தான செய்தியாளர் சந்திப்பு கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள தந்தை பெரியார் படிப்பகத்தில் நடைபெற்றது. இதில் செய்தியாளர்களை சந்தித்த தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கு.இராமகிருட்டிணன், பாராளுமன்றத் தேர்தலையொட்டி ஒரிசாவில் நடைபெற்ற பொதுக் கூட்டங்களில் பிரதமர் மோடி, அங்குள்ள பூரி ஜெகநாதர் ஆலயத்தில் உள்ள பொக்கிஷங்கள் அடங்கிய அறைகளின் சாவி காணாமல் போயுள்ளது அவற்றை தமிழ்நாட்டிற்கு கொண்டு சென்று விட்டார்கள் என்று அப்பட்டமாக தமிழ்நாட்டு மக்களின் மீது ஒரு பழி சுமையை சுமத்தி தமிழர்கள் திருடர்கள் களவாணிகள் என்பது போல ஒரிசா மாநில மக்களின் மத்தியில் பேசி இருப்பதாக தெரிவித்தார்.


பகையை ஏற்படுத்த முயற்சி


ஒரிசாவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பாண்டியன் ஐஏஎஸ் அதிகாரி ஒரிசா முதல்வர் பட்நாயக் உடன் இணைந்து பணியாற்றிய காரணத்தினால் பிரதமர் மோடி பாண்டியன் மீது பழி சுமத்துவது போல் ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களையும் களவாணிகள் திருடர்கள் என்று பிரச்சாரம் மேற்கொண்டு உள்ளதாக கூறினார். அதேபோல உள்துறை அமைச்சர் அமித்ஷா, வட மாநிலங்களில் நடைபெறும் தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில், வட மாநில மக்களை தமிழ்நாட்டில் கேவலமாக நடத்துகிறார்கள் இழிவாக பேசுகிறார்கள் என பொய்யான தகவலை பரப்பி வடமாநில மக்களுக்கும் தமிழ்நாட்டு மக்களுக்கும் பகையை உருவாக்குவது போல் தொடர்ந்து பேசி இருப்பதாக குறிப்பிட்டார். அதுமட்டுமின்றி பிரதமர் மோடி தமிழ்நாட்டை சார்ந்த பாண்டியன் ஐஏஎஸ் ஒரிசாவின் முதல்வர் ஆகலாமா? மண்ணின் மைந்தர்கள் தான் ஆக வேண்டும் என்று சொல்லி தமிழ்நாட்டை சார்ந்தவர்கள் ஒரிசாவில் பணியாற்றக் கூடாது என்ற கருத்தை ஒரிசா மக்களின் இடையே பரப்பியதாக விமர்சித்தார். இவ்வாறு தமிழ்நாட்டு மக்களை திருடர்கள் என்றும் தமிழக மக்கள் மீது அபாண்டமாக பொய்யான தகவல்களை பரப்பியும் வட மாநில மக்களுக்கும் தமிழ்நாட்டு மக்களுக்கும் பகையை ஏற்படுத்துகின்ற முயற்சியை மோடியும் அமித்ஷா வும் செய்திருப்பதாக கூறினார்.


கருப்பு கொடி போராட்டம்


தமிழ்நாட்டின் மீது இத்தனை வஞ்சகத்தை கக்கிவிட்டு பொய் செய்திகளை பரப்பி தமிழ்நாட்டு மக்களை இழிவு படுத்தி விட்டு தற்பொழுது மோடி வருகின்ற 30ஆம் தேதி கன்னியாகுமரிக்கு வருகிறார் அமிஷா வும் வருகிறார் என குறிப்பிட்ட அவர் தமிழ்நாட்டு மக்களை இழிவு படுத்தி தமிழ்நாட்டு மக்களை திருடர்கள் என்றும் களவாணிகள் என்றும் கூறிய மோடி, அமித்ஷா தமிழ்நாட்டிற்குள் வரக்கூடாது தமிழக மக்களிடம் மன்னிப்பு கேட்காமல் தமிழ்நாட்டிற்குள் நுழையக் கூடாது என்று அனைத்து கட்சிகள் சார்பில் அவர்களை எச்சரித்து அவர்களுக்கு எதிராக வருகின்ற 30ஆம் தேதி மதுரை கட்டபொம்மன் சிலையின் அருகில் மாலை 4:30 மணியளவில் கருப்பு கொடி போராட்டம் நடத்த இருக்கிறோம் என தெரிவித்தார். இந்தப் போராட்டத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம், விடுதலை சிறுத்தைகள், ஆதித்தமிழர் பேரவை, திராவிடர் தமிழர் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் மற்றும் அமைப்பினர் கலந்து கொள்ள இருப்பதாக தெரிவித்தார்.