நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு மாநிலங்களுக்கு சென்று பிரச்சாரம் செய்து வருகிறார். இந்த நிலையில் பிரதமர் மோடி இன்று, இந்தாண்டில் ஆறாவது முறையாக தமிழ்நாட்டிற்கு வருகை தந்தார். கர்நாடகா மாநிலத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை கோவை விமான நிலையத்திற்கு வருகை தந்தார். அப்போது பாஜகவினர் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் விமான நிலையத்தில் இருந்து காரில் சாலை மர்க்கமாக பிரதமர் மோடி, சாய்பாபா காலனி பகுதிக்கு சென்றார்.




சாய்பாபா காலனி பகுதியில் பிரதமர் மோடியின் ரோடு ஷோ எனப்படும் வாகன அணிவகுப்பு பேரணி துவங்கியது. சாய்பாபா காலனி பகுதியில் இருந்து ஆர்.எஸ்.புரம் வரை 2.5 கி.மீ. தூரத்திற்கு நடந்த ரோடு ஷோ நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றார். சாலையின் இரு புறமும் தடுப்புகள் அமைக்கப்பட்டு, கட்சிக்கொடிகள் நடப்பட்டு இருந்தது. அப்போது திறந்த வாகனத்தில் வந்த பிரதமர் மோடி பொதுமக்களை சந்தித்தார். அப்போது பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மற்றும் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் ஆகியோர் அவரது வாகனத்தில் உடன் இருந்தனர். வழிநெடுக இருபுறமும் திரண்டிருந்த பாஜகவினர், கூட்டணி கட்சியினர் மற்றும் பொதுமக்கள் மலர் தூவி பிரதமர் மோடியை உற்சாகமாக வரவேற்றனர். அப்போது திரண்டிருந்த பொதுமக்களை பார்த்து பிரதமர் மோடி கையசைத்தும், வணக்கம் வைத்தும் உற்சாகப்படுத்தினார்.




வழிநெடுக திரண்டிருந்த மக்களில் பலர் மோடியை வரவேற்கும் வகையில் பதாகைகளையும், அவரது உருவப்படங்களையும் ஏந்தியபடி வரவேற்பு அளித்தனர். மேலும் மேளதாளங்கள் முழக்க, நடனமாடி பிரதமருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். அதேபோல பிரதமர் மோடியை வரவேற்கும் வகையில் பழங்குடியின மக்கள் நடனம் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. ஆர்.எஸ்.புரம் பகுதியில் அமைக்கப்பட்டு இருந்த திருவள்ளுவர் சிலைக்கு காவி துண்டு அணிவித்த பாஜகவினர், புகைப்படங்களை எடுத்துக் கொண்டனர்.


மலரஞ்சலி செலுத்திய மோடி


ஆர்.எஸ்.புரம் பகுதியில் பிரதமர் மோடியின் ரோடு ஷோ நிகழ்ச்சி நிறைவடைந்தது. அங்கு கடந்த 1998ம் ஆண்டு கோவை குண்டு வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் புகைப்படங்களுக்கு பிரதமர் மோடி மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். இதனைத்தொடர்ந்து பிரதமர் மோடி பந்தய சாலை பகுதியில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் இன்று இரவு தங்குகிறார். பின்னர் நாளை காலை கோவை விமான நிலையத்திற்கு கார் மூலம் சாலை மார்க்கமாக செல்லும் அவர், அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் பாலக்காடு செல்கிறார். பாலக்காட்டில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கும் பிரதமர் மோடி, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் சேலத்திற்கு செல்ல உள்ளார். அங்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொள்ள உள்ளார். இந்தக் கூட்டத்தில் பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.




பிரதமர் மோடியின் கோவை வருகையை முன்னிட்டு கோவை மாநகர பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. மாநகர காவல் துறையோடு இணைந்து மத்திய பாதுகாப்பு குழுவினரும் பிரதமரின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டனர். 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டு இருந்தனர். மோடியின் பேரணி நடைபெறும் பகுதிகளில் வாகனங்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டு, போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு இருந்தது. இதன் காரணமாக பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.