1952 ம் ஆண்டு முதல் கோவை மக்களவை தொகுதி 17 தேர்தல்களை சந்தித்துள்ளது. அதில் காங்கிரஸ் கட்சி 5 முறையும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 4 முறையும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 3 முறையும், திமுக மற்றும் பாஜக தலா 2 முறையும், அதிமுக ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளன. கோவை மக்களவை தொகுதியை திமுக, அதிமுக ஆகிய கட்சிகள், கூட்டணியில் அங்கம் வகிக்கும் தேசிய கட்சிகளுக்கு விட்டுக் கொடுப்பதை வழக்கமாக கொண்டிருந்தன. அதன் காரணமாக இதுவரை கோவை மக்களவை தொகுதியில் திமுகவும், அதிமுகவும் ஒரே ஒரு முறை மட்டுமே நேரடியாக மோதியுள்ளன. இந்த நிலையில் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் இரண்டாவது முறையாக திமுகவும், அதிமுகவும் நேரடியாக மோத உள்ளன.


கோவை தொகுதியை விட்டுத்தராத திமுக


கடந்த சட்டமன்ற தேர்தலில் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்ட நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தார். இதற்கு பழிதீர்க்கும் மீண்டும் கோவையில் போட்டியிட்டு வெற்றி பெற கமல்ஹாசன் திட்டமிட்டு இருந்தார். அதற்கேற்ப கமல்ஹாசனும், மநீமவினரும் கோவை தொகுதியில் கவனம் செலுத்தி வந்தனர். திமுக கூட்டணியில் இணைந்த கமல்ஹாசன் யாரும் எதிர்பாராத வகையில் கமல்ஹாசன் எந்த தொகுதியிலும் போட்டியிடாமல், திமுக கூட்டணியை ஆதரித்து பரப்புரை செய்ய உள்ளதாக அறிவித்தார். இதனால் மக்கள் நீதி மய்ய தொண்டர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.




2019 தேர்தலில் கோவையில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மீண்டும் இதே தொகுதியில் போட்டியிட விரும்பியது. அதற்கேற்ப அக்கட்சி தேர்தல் பணிகளிலும் ஈடுபட்டு வந்தது. கமல்ஹாசன் கோவையில் போட்டியில்லை என்பதால், அக்கட்சிக்கு கோவை தொகுதி கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மார்க்சிஸ்ட் கட்சிக்கு திண்டுக்கல் தொகுதி ஒதுக்கிய திமுக, கோவையை தர மறுத்தது. இதனால் கோவை தொகுதியில் போட்டியிடுவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட மநீம, சிபிஎம் ஆகிய இரண்டு கட்சிகளுக்கும் திமுக தொகுதியை விட்டுத்தரவில்லை.


வேட்பாளராக களமிறங்கப்போவது யார்?


திமுக கூட்டணி கட்சிகளுடனான தொகுதி பங்கீடு முடிவடைந்த நிலையில், கோவை மக்களவை தொகுதியில் திமுக போட்டியிடுவது உறுதியாகியுள்ளது. கடந்த சட்டமன்ற தேர்தலில் கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளிலும் திமுக தோல்வி அடைந்த நிலையில், அதற்கு பழிதீர்க்கும் வகையிலும், கட்சியை பலப்படுத்தும் வகையிலும் கோவை மக்களவை தொகுதியில் போட்டியிடுகிறது. இதனால் திமுக சார்பில் வேட்பாளராக களமிறங்கப் போவது யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.


கோவை தொகுதியில் போட்டியிட திமுக ஐடி விங்க் இணை செயலாளர் மகேந்திரனுக்கு அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. கோவை மக்களுக்கு நன்றாக அறிமுகமானவர் என்பதாலும், கடந்த தேர்தலில் மநீம சார்பில் போட்டியிட்டு கணிசமான வாக்குகளைப் பெற்று கவனம் ஈர்த்ததாலும், தொழிலதிபர் என்பதால் தேர்தலில் தாராளமாக செலவு செய்ய வாய்ப்பு உள்ளதாலும் மகேந்திரன் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், மாநகர மாவட்ட செயலாளருமான நா.கார்த்திக் போட்டியிட வேண்டுமென திமுகவினர் சிலர் விருப்ப மனு அளித்துள்ளனர்.




அதேசமயம் இருவரும் நாய்க்கர் சமுதாயத்தை சேர்ந்தவர்களாக உள்ளதால், இருவரையும் தவிர்த்து இப்பகுதியில் அதிக வாக்கு வங்கியை கொண்ட கவுண்டர் சமுதாயத்தை சேர்ந்த ஒருவருக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது. அதன்படி திமுக மருத்துவ அணி மாநில இணை செயலாளர் டாக்டர் கோகுலுக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது. முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிசாமியின் தம்பி மருமகனான இவர், தனியார் மருத்துவமனையில் குடல் அறுவை சிகிச்சை நிபுணராக பணிபுரிந்து வருகிறார். உக்ரைன் போரில் சிக்கிய தமிழக மாணவர்களை மீட்டு வருவதிலும், புயல், வெள்ள பாதிப்புகள் நிவாரண பணிகளிலும் இவர் முக்கிய பங்காற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


கோவையில் திமுக சார்பில் மகேந்திரன் அல்லது டாக்டர் கோகுல் இருவரில் ஒருவர் போட்டியிட அதிக வாய்ப்பு இருப்பதாக திமுகவினர் தரப்பில் கூறப்படுகிறது.