வடகிழக்கு பருவமழை வலுபெற்று வரும் நிலையில் தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை சற்று தாமதமாக தொடங்கிய நிலையில், நவம்பர் மாதம் துவங்கியது பல்வேறு பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது. தென் இந்தியப்பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும், கேரள கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.  இதன் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.




இதனிடையே கோவை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. குறிப்பாக இரவு நேரங்களில் கன மழை பெய்து வந்தது. இந்நிலையில் கோவை மாவட்டத்தில் நேற்றிரவு பரவலாக கனமழை பெய்தது. இதன் காரணமாக நீர் நிலைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. மேலும் பல்வேறு சாலைகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடியது. லங்கா கார்னர், அவிநாசி சாலை மேம்பாலங்களில் அடியில் மழைநீர் தேங்கியதால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதேபோல கோவை செல்வபுரம் சுண்டக்காமுத்தூர் சாலையில் மழைநீர் வடிகால் வழிந்து சாலையில் மழைநீர் ஓடி வருகிறது. இந்த பகுதியில் உள்ள செல்வ சிந்தாமணி குளம் நிரம்பி, மழைநீர் வடிகாலில் நீர் வழிந்து சாலையில் ஓடுகிறது.  மேலும், செட்டி வீதி அசோக் நகர் பகுதிகளில் வீடுகளிலும் நீர் புகுந்துள்ளது. 50க்கும் மேற்பட்ட குடியிருப்புகளுக்குள் மழைநீர் சாக்கடை நீருடன் கலந்து புகுந்துள்ளது.




செல்வ சிந்தாமணி குளம் நிரம்பி அடுத்து உக்கடம் பெரியகுளம் குளத்திற்கு செல்ல வேண்டிய நிலையில், உக்கடம் குளம் முகத்துவாரம் அடைப்பு காரணமாக மழைநீர் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடுவதுடன், குடியிருப்புகளிலும் புகுந்துள்ளது. கடந்த ஒரு வார காலமாக கோவையில் மழை பெய்து வரும் நிலையில், அவ்வப்போது குளத்திலிருந்து நீர் வெளியேற்றப்பட்டிருந்தால் மழைநீர் வழிந்து ஏற்படும் பாதிப்புகளை தவிர்த்திருக்கலாம் என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.  இந்த பகுதியில் மழை பாதிப்புகள் தொடர்பாக கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார், மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன், மாநகராட்சி மேயர் கல்பனா, பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அம்மன் அர்ச்சுணன் உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர்.




செல்வ சிந்தாமணி குளம் நிரம்பியதை அடுத்த ஊருக்குள் தண்ணீர் புகாமல் இருக்க தண்ணீர் திறக்கப்பட்டது. அதிகமாக தண்ணீர் வந்ததால், கால்வாய் உடைக்கப்பட்டு தண்ணீர் வெளியேற்றும் பணி நடைபெற்றது. இதனால் உக்கடத்தில் பைபாஸ் வழியாக செல்வபுரம் செல்லும் சாலையில் வெள்ளம் கரை புரண்டு ஓடி வருவதால் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.


குளத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட தண்ணீர் அசோக் நகர் பகுதிக்குள் புகுந்தது. மேலும் அப்பகுதியில் உள்ள வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்தது. இதையடுத்து பாதிக்கப்பட்ட மக்கள் அப்பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் உணவுகளை வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. உடனடியாக வெள்ள நீரை வெளியேற்ற மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.