Lok Sabha Election 2024: பா.ஜ.க. வேட்பாளர் அண்ணாமலை மீது வழக்குப்பதிவு - பின்னணி என்ன?

தேர்தல் விதிமுறைகளை மீறி பொதுக்கூட்டங்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக பாஜக வேட்பாளர் அண்ணாமலை மீது மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Continues below advertisement

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அனைத்து அரசியல் கட்சியினரும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கோவை மாவட்டம் சூலூர் பகுதியில் நேற்று பா..க வேட்பாளர் அண்ணாமலை பிரச்சாரம் மேற்கொண்டார். இதேபோல திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் பல்லடம் பகுதியிலும், அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன் சூலூர் பகுதியிலும் என புறநகர் பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டனர்.

Continues below advertisement

இதனிடையே சூலூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மாதப்பூர் ஊராட்சியில் தொட்டிபாளையம் பகுதியில் பரப்புரை மேற்கொண்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட பாஜகவினருக்கு பிற்பகலிலும், அதிமுகவினருக்கு மாலையிலும் அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன் மற்றும் சூலூர் எம்.எல்.ஏ கந்தசாமி உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் குறித்த நேரத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

அ.தி.மு.க. வேட்பாளர் போராட்டம்

அப்போது அதே பகுதியில் பிரச்சாரத்துக்காக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பிரச்சாரம் மேற்கொள்ளும் வாகனம் வந்தது. மாநில தலைவர் அண்ணாமலை வேறு வாகனத்தில் வந்த நிலையில், பரப்புரை வாகனம் மட்டும் தனியாக வந்தது. அதிமுகவினர் பரப்புரை மேற்கொண்டு இருந்த நிலையில், பா..க பரப்புரை வாகனம் மேற்கொண்டு செல்ல முடியாத நிலை இருந்தது.

இந்த நிலையில் ஒரு இடத்தில் அ..தி.மு.க.வினரின் வாகனங்களை ஓவர் டேக் செய்து பா...வின் பரப்புரை வாகனம் முன்னால் செல்ல முயன்றது. அப்போது லேசாக அ.தி.மு.க.வினரின் வாகனத்தில் உரசியதால் பரபரப்பான சூழல் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து, அப்பகுதியில் இருந்த அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க. ஆகிய இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், பரப்புரை வாகனத்தில் இருந்து இறங்கிய அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன் மற்றும் எம்.எல்.ஏ கந்தசாமி உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் அண்ணாமலையின் பரப்புரை வாகனத்தை சிறை பிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.


அண்ணாமலை பிரச்சார வாகனம் சிறைபிடிப்பு:

தாங்கள் சரியான நேரத்தில் பிரச்சாரத்திற்கு வந்துள்ளதாகவும், பாஜக தரப்பு அனுமதிக்கப்பட்ட நேரத்தை கடந்து மாதப்பூர் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதியில் பிரச்சாரத்திற்கு காவல் துறையினர் அனுமதித்துள்ளதாகவும் குற்றம் சாட்டினர். உடனடியாக அங்கு வந்த காவல் துறையினர் இரு தரப்பையும் சமாதானம் செய்து அங்கிருந்து கலைந்து போக செய்தனர். அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க. வேட்பாளர்கள் தேர்தல் பிரச்சாரத்தின் போது ஒரே இடத்தில் சந்தித்துக் கொண்ட நிலையில், அதிமுக வேட்பாளர் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் பிரச்சார வாகனத்தை சிறைபிடித்த சம்பவத்தால் அப்பகுதியில் சுமார் அரை மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

அண்ணாமலை மீது வழக்குப்பதிவு

இந்த நிலையில் பாஜக வேட்பாளர் அண்ணாமலை தேர்தல் பரப்புரை மேற்கொள்ள விடாமல் இடையூறு செய்ததாக அதிமுகவினர் கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இது குறித்து அப்பகுதியில் பணியிலிருந்த தேர்தல் பறக்கும் படை பொறுப்பு அதிகாரி வினோத்குமார் கொடுத்த புகாரின் மீது கருமத்தம்பட்டி காவல் துறையினர் பாஜக வேட்பாளர் அண்ணாமலை மீது வழக்குப்பதிவு செய்தனர். தேர்தல் விதிமுறைகளை மீறி பொதுக்கூட்டங்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக பாஜக வேட்பாளர் அண்ணாமலை மீது மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோல வாகனத்தை சிறைபிடித்து போராட்டம் நடத்திய அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன் மீது இரண்டு பிரிவுகளில் கருமத்தம்பட்டி காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். பாஜகவினர் அளித்த புகாரின் பேரில் அனுமதி இன்றி ஒன்று கூடுதல், முறையற்ற தடுப்பு ஆகிய இரண்டு பிரிவுகளின் கீழ் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Continues below advertisement