கோவையில் இரவில் பரோட்டா சாப்பிட்டுவிட்டு உறங்கச் சென்ற கல்லூரி மாணவர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


பரோட்டா சாப்பிட்ட கல்லூரி மாணவர்:


திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஹேமச்சந்திரன். இவர் கோவை மாவட்டம் சூலூரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் படித்து வந்தார். மேலும் அப்பகுதியில் அறை எடுத்து தங்கியிருந்து, கல்லூரியில் படித்து வந்தார். இதனிடையே நேற்று இரவு ஹேமச்சந்திரன் தனது நண்பர்களுடன் சேர்ந்து கண்ணம்பாளையம் பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் பரோட்டா வாங்கியுள்ளார்.


பின்னர் தான் தங்கியிருக்கு அறைக்கு சென்று அந்த பரோட்டாவை ஹேமச்சந்திரன் சாப்பிட்டுள்ளார். இதனை தொடர்ந்து ஹேமச்சந்திரன் அறையில் உறங்கியுள்ளார். இந்த நிலையில் வாயில் நுரை தள்ளிய நிலையில், ஹேமசந்திரன் இன்று காலை அசைவின்றி இருந்துள்ளார்.


மாணவர் உயிரிழப்பு:


இதனால் அதிர்ச்சியடைந்த சக மாணவர்கள் அவரை எழுப்ப முயன்றுள்ளனர். ஆனால் எந்த அசைவும் இன்றி இருந்ததால், அருகில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஹேமச்சந்திரன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து சூலூர் காவல் துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. இந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்குச் சென்ற காவல் துறையினர் மாணவரின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.


மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காவல் துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில் மாணவருக்கு பரோட்டா சாப்பிட்டால் ஒவ்வாமை ஏற்படும் என்ற பிரச்சனை இருந்ததாகவும், அதிக காய்ச்சலில் இருந்த போது பரோட்டா சாப்பிட்டதால் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தாக தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து அவரது உயிரிழப்பிற்கு வேறு ஏதேனும் காரணம் இருக்கிறதா? எனவும் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். பரோட்டா சாப்பிட்ட மாணவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.