சென்னை சவுகார்பேட்டையை சேர்ந்தவர் முகேஷ் குமார் புரோகித். இவர் சென்னை மற்றும் கோவை ஆகிய பகுதிகளில் ஓட்டல் வைத்து நடத்தி வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவருக்கு ஆந்திராவைச் சேர்ந்த ராஜகுரு (வயது 32) என்பவர் அறிமுகம் ஆகியுள்ளார். தன்னை ஐபிஎஸ் அதிகாரி என அறிமுகம் செய்து கொண்ட அவர், ஐபிஎஸ் அதிகாரி ஒருவர் தனது உறவினர் எனவும் கூறியுள்ளார். மேலும் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கஃபே வைத்து நடத்துவதற்கு அனுமதி பெற்று தர உதவி செய்வதாக முகேஷ் குமார் புரோகிதிடம் கூறியுள்ளார். கோவை மாவட்ட ஆட்சியர் சமீரனின் எண் என போலியான ஒரு எண்ணை கொடுத்துள்ளார். அந்த எண்ணில் கோவை மாவட்ட ஆட்சியரின் புகைப்படத்தையும், பெயரையும் வாட்ஸ் அப்பில் போலியாக பயன்படுத்தி, அவரிடம் சாட் செய்து வந்துள்ளார்.




போலியான வாட்ஸ் அப் சாட்டினை உண்மை என நம்பிய முகேஷ் குமார் புரோகித்திடம், ஆட்சியர் அலுவலகத்தில் கபே திறக்க அனுமதி வாங்க அதிகாரிகளுக்கு பணம் கொடுக்க வேண்டும் எனவும், நேரடியாக அதிகாரிகள் லஞ்சம் வாங்கமாட்டார்கள் என்பதால் தன்னிடம் பணம் கொடுத்தால் அவர்களுக்கு கொடுத்து அனுமதி பெற்று தருவதாகவும் கூறியுள்ளார்.




இதன் பேரில் சென்னையில் இருந்து முகேஷ் குமார் புரோகித் கோவைக்கு புறப்பட்டு வந்தார். கடந்த ஜூன் 12ம் தேதியன்று நீலாம்பூர் பகுதியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் அரை எடுத்து தங்கி இருந்த ராஜ குருவை முகேஷ் குமார் புரோகித் சந்தித்து பேசியுள்ளார். அப்போது ஒன்றரை இலட்ச ரூபாய் பணத்தை ஆட்சியர் அலுவலகத்தில் கபே திறக்க அனுமதி வாங்குவதற்காக கொடுத்துள்ளார். இதையடுத்து மீண்டும் 13ம் தேதியன்று பந்தய சாலை பகுதியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் வைத்து 1 லட்ச ரூபாய் பணத்தையும், ஒரு லட்சத்து 53 ஆயிரம் மதிப்பிலான செல்போன் மற்றும் நட்சத்திர ஓட்டலுக்கான வாடகை 50 ஆயிரம் மற்றும் கோவையில் இருந்து சென்னை செல்ல விமான கட்டணம் என மொத்தம் சேர்த்து 6 லட்ச ரூபாய் பண செலவு செய்துள்ளார்.




அதன் பின்னர் ராஜகுருவை முகேஷ் குமார் புரோகித்தால் தொடர்பு கொள்ள முடியவில்லை. பின்னர் ஐபிஎஸ் அதிகாரியாக நடித்து ராஜகுரு தன்னை ஏமாற்றி 6 இலட்ச ரூபாய் மோசடி செய்து விட்டு தலைமறைவாகி இருப்பது முகேஷ் குமார் புரோகித்க்கு தெரியவந்தது. இது குறித்து முகேஷ் குமார் புரோகித் பந்தய சாலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் ஐபிஎஸ் அதிகாரி எனக் கூறியும், ஆட்சியர் பெயரை பயன்படுத்தியும் 6 லட்ச ரூபாய் மோசடி செய்த நபரை தேடி வருகின்றனர்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண