பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த இறந்தவரின் உடலை பொது மயானத்தில் புதைக்க எதிர்ப்பு வந்ததையடுத்து காவல் துறை உதவியுடன் புதைக்கப்பட்டது உடல்.

 

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த மதுரவள்ளி கிராமத்தில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர் இந்நிலையில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர்(அருந்ததியர்) உடல்களை பொது மயானத்தில் அடக்கம் செய்வதற்கு கடந்த சில மாதங்களாகவே அதே கிராமத்தைச் சேர்ந்த பிற சமூகத்தினர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இது தொடர்பாக அந்த குறிப்பிட்ட சமூகத்தினர் நீதிமன்றம் மற்றும் தமிழக அரசுக்கும் பொது மயானத்தில் அடக்கம் செய்ய அனுமதி அளிக்க வேண்டும் என கோரிக்கை வைத்து இருந்தனர். இதனை அடுத்து விருத்தாச்சலம் சார் ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற விசாரணையில் குறிப்பிட்ட சமூகத்தினரின் உடல்களை பொது மயானத்தில் அடக்கம் செய்ய அனுமதி அளித்து உத்தரவிட்டு இருந்தார்.


 

 

இந்நிலையில் நேற்று குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த கலியமூர்த்தி என்பவர் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார், இதனை அடுத்து அவரது உடலை அடக்கம் செய்வதற்கு அவரது உறவினர்கள் பொது மயானத்தில் குழி தோண்டி உள்ளனர், இதனை அறிந்த பிற சமூகத்தினர் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தது மட்டும் இன்றி தோண்டிய குழியை மூடி உள்ளனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பதற்றம் நிலவியது.

 

பின்னர் இதை அறிந்த காவல்துறையினர் மற்றும் வருவாய் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்தனர், சிறிது நேர பேச்சுவார்த்தைக்கு பிறகு அதிகாரிகள் முன்னிலையில் கலியமூர்த்தியின் உடலை பொது மயானத்தில் அடக்கம் செய்வதற்கு கொண்டு செல்லப்பட்டது. அப்பொழுது பொது மயானத்தில் திரண்டு இருந்த பிற சமூகத்தினர் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து காவல்துறையினர் மற்றும் அதிகாரிகளிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர், பின்னர் காவல்துறையினர் அனைவரையும் கலைந்து செல்லுமாறு பலமுறை எச்சரித்தும் அவர்கள் அங்கு இருந்து கலைந்து செல்லாமல் அனைவரும் மயானத்திலேயே அமர்ந்து கொண்டனர்.

 



 

பின்னர் காவல்துறையின் பல முறை எச்சரித்தும் அங்கு இருந்து அவர்கள் கலைந்து செல்லாத காரணத்தினால் எதிர்ப்பு தெரிவித்த அனைவரையும் காவல் துறையினர் கைது செய்தனர், இதனை அடுத்து கலியமூர்த்தி உடலை காவல்துறையினர் உதவியுடன் பொது மயானத்தில் அடக்கம் செய்தனர். கடலூர் மாவட்டம் திட்டக்குடி, விருத்தாசலம் போன்ற பகுதிகளில் தொடர்ந்து சாதி ரீதியாக பல தரப்பட்ட பிரச்சனைகள் தொடர்ந்து கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது இதனை தடுக்க மாவட்ட நிர்வாகமும் காவல்துறையும் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்து உள்ளனர்.