கோவையை தலைமையிடமாக கொண்டு மைவி3 ஏட்ஸ் என்ற செயலியை சக்தி ஆனந்தன் என்பவர் நடத்தி வருகிறார். மேலும் யூ டியூப் சமூக வலைதளத்தில் இந்த செயலியின் சேனலும் இயங்கி வருகிறது. இதில் தினமும் 2 மணி நேரம் விளம்பரம் பார்ப்பதன் மூலமும், புதிய நபர்களை சேர்ப்பதன் மூலமும் அதிக வருமானம் பார்க்கலாம் என விளம்பரம் செய்யப்பட்டுள்ளது.


மைவி3 ஏட்ஸ்:


அதில் 360 ரூபாய் முதல் ஒரு இலட்சத்து 21 ஆயிரம் ரூபாய் வரை உள்ள பல்வேறு பிரிவுகளில் பணம் செலுத்தி உறுப்பினராக சேர முடியும் எனவும், தினசரி மொபைல் போனில் விளம்பரம் பார்ப்பதன் மூலம் 5 ரூபாய் முதல் 1800 ரூபாய் வரை சம்பாதிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் செலுத்தும் பணத்திற்கு ஏற்ப ஆயுர்வேத கேப்சூல்கள் வழங்கப்படும் எனவும், புதிய நபர்களை சேர்க்கும் நபர்களுக்கு தனியாக பணம் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதனை நம்பி ஆயிரக்கணக்கானோர் இலட்சக்கணக்கில் முதலீடு செய்துள்ளனர். தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா உட்பட நாடு முழுவதும் லட்சகணக்கானோர் இதில் உறுப்பினர்களாக இருக்கின்றனர். முதலீட்டாளர்களுக்கு கூறியபடி அந்நிறுவனம் மாதம்மாதம் பணம் வழங்கி வருகிறது.


உரிமையாளர் புகார்:


இதனிடையே மருத்துவர்களின் பரிந்துரையின்றி மாத்திரைகளை வழங்குவது சட்டத்திற்கு புறம்பானது எனவும், தினசரி விளம்பரம் பார்ப்பதால் அதிக வருமானம் பார்க்கலாம் என ஆசைகாட்டி பொதுமக்களை ஏமாற்றி பெரும் தொகையை வசூலித்து வரும் அந்நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோவை மாநகர சைபர் கிரைம் காவல் துறை உதவி ஆய்வாளர் முத்து புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் அந்நிறுவனத்தின் மீது சைபர் க்ரைம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதேபோல அந்நிறுவனம் வி3 ஆன்லைன் டிவி என்ற பெயரில் மோசடி செய்ததாக பாதிக்கப்பட்டவர்கள் ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர்.




இந்த நிலையில் மைவி 3 ஏட்ஸ் நிறுவனம் குறித்து அவதூறாக பேசி வருபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி, அந்நிறுவன உரிமையாளர் சக்தி ஆனந்தன் தலைமையில் 200க்கும் மேற்பட்டோர் கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.


 


இதுகுறித்து பேசிய சக்தி ஆனந்த், ”கடந்த 31 மாதமாக முறையாக நிறுவனம் நடத்தி வருகிறேன். இதுவரை யாரும் பாதிக்கப்பட்டதாக புகார் அளிக்கவில்லை. சிலர் அளித்த பொய்யான புகார் குறித்து காவல் துறையினர் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளித்து வருகிறேன். சில யூடிபர்ஸ்  20 ஆயிரம் கோடி ரூபாய் மோசடி செய்ததாக பொய் செய்திகளை பரப்பி வருகின்றனர்.


வருகின்ற திங்கட்கிழமை அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களிலும் புகார் மனு அளிக்க உள்ளோம். தவறான செய்தி வெளியிடும் யூ டிபர்ஸ் வீடுகளை முற்றுகையிடுவோம். விசாரணையில் நல்லவன் என நிரூபிப்பேன். முகாந்திரம் இல்லாமல் மோசடி செய்ததாக பேசக்கூடாது. இதனால் 60 இலட்சம் பேர் வாழ்க்கை பாதிக்கப்படும். என் மீதான குற்றம் நிரூபிக்கும் வரை அவதூறு பேசக்கூடாது” எனத் தெரிவித்தார்.


கைது:


இதையடுத்து கோவை மாநகர காவல் ஆணையாளரை சந்தித்து மனு அளித்த பிறகே, கலைந்து செல்வோம் என மை வி3 ஏட்ஸ் ஆதரவாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். காவல் துறையினர் அவர்களை கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தியும், கலைந்து செல்லாததால் போராட்டத்தில் ஈடுபட்ட சக்தி ஆனந்த் உள்ளிட்ட 200 க்கும் மேற்பட்டோரை காவல் துறையினர் கைது செய்தனர். அப்போது மைவி 3 நிறுவனத்திற்கு ஆதரவாக போராட்டக்காரர்கள் முழக்கங்களை எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.