நீலகிரி மாவட்டம் உதகை அருகே உள்ள வாழைத்தோட்டம் மற்றும் மாவனல்லா பகுதியில் சுமார் 40 வயது மதிக்கதக்க காட்டு யானை சுற்றி திரிந்து வந்தது. இந்த யானை அப்பகுதி மக்களால் 'ரிவால்டோ' என அழைக்கப்பட்டது. யானைகள் ஒரிடத்தில் இல்லாமல் வேறு இடங்களுக்கு செல்வது வழக்கம். ஆனால் இந்த யானை வாழைத்தோட்டம் முதல் மசினகுடி வரையிலான பகுதியில் சுற்றி வந்தது.  இந்த யானைக்கு தும்பிக்கையில் காயம் ஏற்பட்டு இருப்பதால், உணவு எடுத்து செல்வதில் சிரமம் இருந்து வந்தது. மேலும் வலது கண் பார்வை குறைவும் உள்ளது. பெரும்பாலும் அந்த யானை அதிக நேரம் குடியிருப்பு பகுதிகளுக்குள் நடமாடியதுடன், விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தியும் வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அந்த யானையை பிடிக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.




இதனையடுத்து ரிவால்டோ யானையை கரோலில் அடைக்க வனத்துறையினர் முடிவு செய்தனர். இந்த யானை மனிதர்களுடன் பழக்கப்பட்ட யானை என்பதால், வாழைத்தோட்டம் பகுதியில் அமைக்கப்பட்ட கரோலில் பழங்களை வைத்து வரவழைத்து அதற்குள் அடைத்தனர். கரோலில் அடைக்கப்பட்ட அந்த யானைக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கபட்டு வந்தது.




இந்நிலையில் ரிவால்டோ யானையை கரோலில் இருந்து விடுவிக்க வேண்டும் என விலங்கு நல ஆர்வலர்கள் கோரிக்கை வைத்தனர். இதுகுறித்து ஆய்வு செய்து அந்த யானையை வன பகுதியில் விடுவதா? அல்லது முதுமலை வளர்ப்பு யானைகள் முகாமிற்கு அழைத்து சென்று பராமரிப்பதா? என்பது குறித்து முடிவு செய்ய 8 பேர் கொண்ட வல்லுனர் குழு ஒன்று மாவட்ட நிர்வாகம் சார்பாக அமைக்கப்பட்டது. அக்குழுவினர் ஆய்வு செய்த பின்னர் ரிவால்டோ யானையை வனப் பகுதிக்குள் விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.




இதனைத் தொடர்ந்து யானையின் உடல் நிலை தேறியதை அடுத்து, வனப்பகுதிக்குள் விடுவிக்க முடிவு செய்தனர். யானையின் நடமாட்டத்தை கண்காணிக்கும் வகையில் வனத்துறையினர் யானையின் கழுத்தில் ரேடியோ காலர் பொருத்தினர். இதையடுத்து கடந்த 2 ம் தேதி 85 நாட்களுக்கு பிறகு கரோலில் இருந்து ரிவால்டோ யானையை வெளியே அழைத்து வரப்பட்டது. லாரி மூலம் கர்நாடகா எல்லையில் முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட சிக்ஹல்லா வனப்பகுதியில் ரிவல்டோ யானை விடுவிக்கப்பட்டது. தமிழ் நாட்டில் கரோலில் அடைக்கப்பட்ட யானை, வனப்பகுதியில் விடுவிக்கப்பட்டது இதுவே முதல் முறையாகும்.  இதையடுத்து ரேடியோ காலர் மூலம் யானையின் நடமாட்டத்தை வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.



இந்நிலையில் அடர்ந்த செழிப்பான வனப்பகுதியான சிக்ஹல்லாவில் நல்ல தீவன உணவுகள் கிடைக்கக் கூடிய இடம் என்பதால், அந்த யானை தனது வாழிடத்தை மாற்றி அப்பகுதியில் தங்கும் என வனத்துறையினர் எதிர்பார்த்தனர். ஆனால் காட்டில் விடுவிக்கப்பட்ட மறுநாளே, ரிவால்டோ யானை மீண்டும் தனது வாழிடமான வாழைத்தோட்டம், மாவனல்லா பகுதிகளை நோக்கி நடைபோட துவங்கியது. ரிவால்டோ யானை சுமார் 35 கிலோ மீட்டர் தூரத்தை நடந்து கடந்து, மசினகுடி பகுதிக்கு நேற்று வந்தடைந்தது.




தொடர்ந்து யானை நடந்து சென்று கொண்டிருப்பதால், மீண்டும் தனது வழக்கமான வாழிட பகுதிகளுக்கு சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. வாழிட மாற்றம் செய்யப்பட்ட மீண்டும் தனது வாழிடம் நோக்கி வருவதால், வனத்துறையின் திட்டம் தோல்வியடைந்துள்ளது. அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து உயரதிகாரிகளிடம் ஆலோசனை செய்து முடிவு எடுக்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். 


Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X