கோவை பீளமேடு பகுதியில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலில் திமுக நாடாளுமன்ற தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு கூட்டம், நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தலைமையில் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கோவை, நீலகிரி மாவட்டத்திற்கு உட்பட்ட தொழில் துறையினர், கல்வியாளர்கள், மீனவர்கள், சிறு,குறு தொழில் முனைவோர்கள், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், மாணவர் சங்கங்கள், சூழலியலாளர்கள், மருத்துவர்கள், தொண்டு‌ நிறுவனங்கள், அரசு மற்றும் தனியார் துறை ஊழியர்கள், பொதுமக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரையும், நேரடியாகச் சந்தித்து மனுக்களை பெற்றனர். 


மாவட்ட வாரியாக கோரிக்கை:


இக்கூட்டத்திற்கு பின்னர் கனிமொழி எம்.பி. செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ”முதலமைச்சரின் கட்டளைக்கு இணங்க கன்னியாகுமரியில் தொடங்கி மாவட்ட வாரியாக மக்களை சந்தித்து கோரிக்கைகளையும் பெற்று வருகிறோம். அதே சமயம் தொழில அமைப்புகள், விவசாயிகள், பல்வேறு சங்கங்கள் உள்ளிட்டவர்களின் கருத்துக்களை கேட்டறிந்து தேர்தல் அறிக்கை உருவாவதற்கான பணியை மேற்கொண்டு வருகிறோம். மக்களும், தொழில் அமைப்பினரும் எங்களை சந்தித்து வருகின்றனர். மீதமுள்ள பகுதிகளுக்கும் விரைவில் சென்று கோரிக்கைகளை பெற இருக்கிறோம்.


மேலும் கோவையில் மட்டுமல்ல தமிழ்நாடு முழுவதும் தொழில அமைப்பினர் குறிப்பாக, சிறு குறு தொழில் செய்பவர்கள் கடந்த காலகட்டத்தில் இருந்து பிரச்சனை சந்தித்து வருகின்றனர். பண மதிப்பு இழப்பு,  ஜிஎஸ்டி, கொரோனா போன்ற காலங்களிலும் பிரச்சனைகள் தொடர்கிறது. சிறுகுரு தொழில் அமைப்பினர் மிகப்பெரிய பாதிப்புகளுக்கு உள்ளாகியுள்ளனர். குறிப்பாக ஜி.எஸ்.டி.யில் நிறைய சிக்கல்கள் உள்ளது. அதை கட்ட முடியாமல் சிறு குறு அமைப்பினர், தொழில் செய்ய முடியாத சூழ்நிலைகளில் இருப்பதாகவும் கோரிக்கைகளில் குறிப்பிட்டுள்ளனர். இவை அனைத்தும் தேர்தல் அறிக்கையில் கொண்டு வருவதற்கான பணிகளை மேற்கொள்வோம்.


ஏற்க முடியாது:


ஜி.எஸ்.டி.யில் இருக்கும் குழப்பங்கள் தீர்க்க வேண்டும். தொழில் துறையினர் தொழில் செய்வதற்கான உள்கட்டமைப்பு போன்ற வசதிகள் அடங்கிய கோரிக்கைகள் அதிக அளவில் இருந்தது. மேலும் மின் கட்டணம் உயர்வை செவி சாய்க்காமல் இல்லை. பலமுறை அவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம். 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலுக்கு தேர்தல் அறிக்கை தயாரிக்க நான் வரவில்லை. திமுக தேர்தல் அறிக்கையில் வைத்துள்ள வாக்குறுதிகளை தொடர்ந்து நிறைவேற்றி வருகிறது. கோவைக்கான எந்த திட்டத்தையும் செய்யவில்லை என்பது ஏற்றுக்கொள்ள முடியாது.  கடந்த நாடாளுமன்ற தேர்தலில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை செய்ய முடியாமல் போனதற்கு மத்திய அரசு பாரபட்சமாக செயல்பட்டதன் காரணம். ரயில்வே துறையில் கூட திட்டங்களை நிறைவேற்ற முடியவில்லை. நிதி குறைவாகவே ஒதுக்கியதால் திட்டங்களை செய்ய முடியவில்லை.


தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டு வருகிறது.  நாளை விளையாட்டு துறை அமைச்சர் ஆயிரம் கோடி மதிப்புள்ளான குடிநீர் திட்டத்தை திறந்து வைப்பதற்காக வருகிறார். கோவையை புறக்கணிக்கவில்லை. பல தொழிற்சாலைகளுக்கு கோவை மையமாக உள்ளது. முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி தான் இங்கு தொழில் கூடங்கள் உருவாக்கினார். பல பன்னாட்டு நிறுவனங்கள் கோவை வருவதற்காக முதல்வர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டும், முதலீடுகளை கொண்டுவருக்கு பணி செய்து வருகிறார்.  மேலும் தொழிலாளர்கள்  வைக்கக்கூடிய கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்காக தொடர்ந்து முயற்சிகள் நடைபெற்று வருகிறது.


தேர்தல் அறிக்கையில் என்ன வரும்?


தேர்தல் அறிக்கையில் என்ன வரும் என்பதை முதல்வர் தான் முடிவு செய்வார். அதில் என்னென்ன வரும் என்பது என்னால் அறிவிக்க முடியாது. இருக்கிற மருத்துவ கல்லூரிகளில் நம்முடைய பிள்ளைகள் படிக்க முடியாத அளவிற்கு நீட் என்கிற ஒரு தேர்வை வைத்துள்ளனர். சாதாரண குடும்பத்தில் இருக்கும் பிள்ளைகள் படிப்பதற்கு,  இந்தியாவிலேயே அதிகமான மருத்துவ கல்லூரிகள் இருக்கும் மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. மாநிலம் தோறும் மாவட்டந்தோறும் கல்லூரி வேண்டுமென திட்டங்களை கொண்டு வந்தவர் கருணாநிதி. இந்த கல்லூரியில் யாருக்காக கொண்டுவரப்பட்டதோ அந்த கல்லூரியிடம் பிள்ளைகள் படிக்க முடியாத நிலை உள்ளது. அதை விமர்சிக்க முடியாதவர்கள் ஏன் இதைப் பற்றி பேச மறுக்கிறார்கள்.


கோவை மெட்ரோ திட்டத்திற்கு ரூ.900 கோடியும், சாலைகளுக்கு 300 கோடியும், குடிநீருக்கு 790 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது. மேற்கு புறவழிச் சாலைக்கு 250 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதையெல்லாம் செய்து வருகிறோம். அதிமுக ஆரம்பித்த திட்டங்கள் கிடையாது. மருத்துவமனை, நூலகங்கள் போன்ற கோரிக்கைகள் முதல்வரிடம் கொண்டு செல்கிறேன்” என்றார். திமுக ஆட்சியில் கோவை மாவட்டத்திற்கு எந்த திட்டங்களையும் செய்யவில்லை எனவும்,  எதிர்க்கட்சிகள் ஆரம்பித்து வைத்த திட்டங்கள் தான் முடிக்கப்பட்டு வருவதாக எழுப்பிய கேள்விகளுக்கு பதில் அளிக்காத சூழலில் செய்தியாளர்களுக்கும் கனிமொழியம்பிக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் செய்தியாளர்களை சந்திப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு அவர் புறப்பட்டு சென்றார்.