வருகின்ற 19 ஆம் தேதி நடைபெறும் நகர்புற உள்ளாட்சி தேர்தலில், கோவை மாவட்டத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தலில் ஒரு மாநகராட்சி, 7 நகராட்சிகள், 33 பேரூராட்சிகளில் உள்ள 811 பதவிகளுக்கான தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் சமூக வலைதளங்களிலும், வீடு வீடாக சென்றும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று காணொலி காட்சி மூலம் கோவையில் உள்ள திமுகவினர் மற்றும் பொது மக்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இதனைத் தொடர்ந்து இன்று மின்சாரம் மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கோவை மாவட்டத்தில் தேர்தல் பரப்புரையை தொடங்கினார். 




இருகூர் பகுதியில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அவர், தொடர்ந்து சூலூர், சோமனூர் உள்ளிட்ட பகுதிகளில் பரப்புரை மேற்கொண்டார். சோமனூரில் கருமத்தம்பட்டி நகராட்சிக்கு உட்பட்ட வார்டுகளில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி செந்தில்பாலாஜி மக்களிடையே உரையாற்றினார். அப்போது பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, ”திமுக அரசு பெண்கள் இலவசமாக பயணம் செய்யும் திட்டத்தை கொண்டு வந்தது. உடல்நலம் பாதிக்கப்பட்டால் வீட்டிலேயே மருத்துவம் பார்த்துக்கொள்ள மக்களை தேடி திட்டத்தையும் முதலமைச்சர் கொண்டு வந்தார். மக்களின் தேவையை அறிந்து முதல்வர் செயல்பட்டு வருகிறார். உள்ளாட்சியில் நிலவும் பிரச்சனைகளை தீர்க்க திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டும்” என அவர் தெரிவித்தார்.




பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் செந்தில் பாலாஜி, ”திமுக தலைமையிலான கூட்டணி சார்பில்  போட்டியிட கூடிய வேட்பாளர்கள் மகத்தான வெற்றியைப் பெறுவார்கள். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கோவை மாவட்டத்தில் முதல் தேர்தல் பரப்புரையை காணொலி வாயிலாக முதல்வர் துவக்கியுள்ளார். கோவை மாவட்டத்தில் 300 இடங்களில் மூன்று லட்சத்துக்கும் மேற்பட்ட பொது மக்கள் பங்கேற்ற கூட்டத்தில் முதல்வர்  உரையாற்றினார். 8 மாதங்களில் செய்த சாதனைகள் குறித்தும், எதிர்காலத்தில் அரசு செய்ய வேண்டிய பணிகள் குறித்தும் பிரச்சாரத்தில் முதல்வர் பேசினார். 




கோவை மாவட்டத்தை பொறுத்தவரை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகள், 7 நகராட்சிகள் என 811 வார்டு உறுப்பினர்களுக்கான தேர்தல் நடைபெறும் நிலையில், முதல்வரின் நல்லாசியுடன் மாவட்டம் முழுவதும் திமுக கூட்டணி வேட்பாளர்கள் 811 வார்டுகளிலும்  மகத்தான வெற்றியைப் பெறுவார்கள். பொதுமக்களிடையே திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது. இந்த உள்ளாட்சித் தேர்தலில் 100% திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணி வெற்றி பெறும். தமிழக முதல்வருக்கு இந்த வெற்றியை தர பொதுமக்கள் தயாராக உள்ளனர்” என அவர் தெரிவித்தார். கூலி உயர்வை அமல்படுத்தக் கோரி கோவை, திருப்பூர் மாவட்டங்களில் விசைத்தறி உரிமையாளர்கள் போராட்டம் மேற்கொண்டு வருவது குறித்த கேள்விக்கு, ”விசைத்தறி உரிமையாளர்கள் வேலை நிறுத்த போராட்டம் குறித்து அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் பேசி வருகின்றனர். போராட்டத்தை முடிவிற்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கை விரைந்து எடுப்பார்கள்” என அவர் பதிலளித்தார்.