கோவை கொடிசியா மைதானத்தில் நாளை மறுதினம் தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்கும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற உள்ளது. இந்நிலையில் அரங்கு அமைக்கும் பணிகளை  அமைச்சர் செந்தில் பாலாஜி, கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன், மாநகராட்சி மேயர் கல்பனா உள்ளிட்டோர் பார்வையிட்டனர். இதனைத் தொடர்ந்து  அமைச்சர் செந்தில்பாலாஜி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ”இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வரும் ஞாயிற்று கிழமை காலை பத்து மணிக்கு நேரு விளையாட்டரங்கில் ஆய்வு மேற்கொள்ள உள்ளார். பின்னர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விளையாட்டு, இளைஞர் நலன் மற்றும் சிறப்பு திட்டங்கள் குறித்து ஆய்வு செய்ய உள்ளார். பின்னர் கொடிசியா மைதானத்தில் பொதுமக்களுக்கு நலத்திட்டங்கள் வழங்கி சிறப்புரை வழங்க உள்ளார். 




முதலமைச்சர் கோவை மாவட்டத்தில் இதுவரை 1.32 லட்சம் பயனாளிகளுக்கு நலத்திட்டங்கள் வழங்கியுள்ளார். தற்போது இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் முடிவடைந்த பணிகளை துவக்கி வைத்தும் புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டவும் இருக்கிறார். இதுவரை 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயனாளிகள் பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது. தற்போது இது தொடர்பாக நடைபெற உள்ள ஆய்வு கூட்டத்தில் பயனாளிகளின் எண்ணிக்கை கூட வாய்ப்புள்ளது. குறைந்தபட்சம் 25 ஆயிரம் பயனாளிகளுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கரங்களால்  நலத்திட்டங்கள் வழங்கப்படும்.


இலவச திட்டங்களுக்கு எதிராக சிலர் உச்ச நீதிமன்றம் வரை செல்கின்றனர். அதேகட்சிகள் தமிழக அரசின் திட்டங்களை தேர்தல் வரும் போது வாக்குறுதிகளாக கொடுத்து வாக்காளர்களை சந்திக்கும் காட்சிகள் அரங்கேறி வருகிறது. நீதிமன்றங்களில் ஒரு கருத்தையும் தேர்தல் களத்தில் மக்களை சந்திக்கும் போது திட்டங்களை அறிவிப்பதில் ஒரு கருத்தையும் என இருவேறு கருத்துக்களை கொண்ட அரசியல் இயக்கங்கள் இருக்கின்றன. குறிப்பாக அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரம் மேம்பட வேண்டும் என தமிழக முதலமைச்சர் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். மகளிர் இலவச பேருந்து மகளிர் பலர் பயனடைந்துள்ளனர். மகளிர் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தும் உன்னதமான திட்டத்தை முதலமைச்சர் செயல்படுத்தி வருகிறார்” எனத் தெரிவித்தார்.




வருகின்ற 31ம் தேதிக்குள் மின் இணைப்பு எண்ணுடன், ஆதார் எண் இணைக்கவில்லை எனில் இலவச மின்சாரம் இரத்து செய்யப்படும் என்ற தகவல் பரவி வருவது குறித்தான கேள்விக்கு, ”சிலருக்கு அவதூறு பரப்ப வேண்டும். ஆனால் அவதூறு கருத்துக்கு ஒன்றும் கிடைப்பதில்லை. நல்ல முயற்சி என்பதால் நீதிமன்றமே ஆதார் எண்ணை இணைக்க உத்தரவிட்டுள்ளது. 31ம் தேதி வரை மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க கால அவகாசம் உள்ளது. இதுவரை 50 விழுக்காட்டிற்கும் மேல் மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைத்துள்ளனர். 31 ம் தேதி வரை எவ்வளவு பேர் முழுவதுமாக இணைத்துள்ளனர் என்ற கணக்கீடு வந்த பிறகு  முதல்வரின் கவனத்திற்கு எடுத்துச் சென்று அடுத்தகட்ட அறிவிப்பு வெளியிடப்படும். மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைப்பு தொடர்பாக சில அரசியல் இயக்கங்கள் அரசியல் சூழலுக்காக சமூக வலைதளங்களில் பரப்பும் தவறான கருத்துகளை நம்ப தேவையில்லை” எனப் பதிலளித்தார்.


தொடர்ந்து பேசிய அவர், “பொங்கல் பரிசாக ஆயிரம் ரூபாய் நிதி மற்றும் பொருட்களை மக்கள் சந்தோசமாக இருக்க வேண்டுமென முதல்வர் வழங்க உத்தரவிட்டுள்ளார். அதிலுள்ள குறைகள் தொடர்பாக அந்த துறை சார்ந்த அமைச்சர் பதிலளிப்பார். ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் நலத்திட்டங்கள் வழங்கும் விழாவில் இளைஞர் நலன் சார்ந்த திட்டங்கள் அதிகம் இடம் பெறும்” என்றார்.