Pongal Package : கோயம்புத்தூர் மாவட்டம், அன்னூர் பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்ற 'நமது லட்சியம் வளர்ச்சி அடைந்த பாரதம்' நிகழ்ச்சியில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். மாவட்ட முன்னோடி வங்கியான கனரா வங்கி சார்பில் நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சியில், பல்வேறு வங்கிகளின் சார்பில் 1 கோடியே 15 லட்சம் ரூபாய் மதிப்பில் சிறு தொழில்களுக்கான கடன் உதவி, கிசான் கடன் உதவி, நெசவாளர் கடன் அட்டை, சாலையோர வியாபாரிகளுக்கான பி.எம்.ஸ்வநிதி திட்டம் ஆகியவை பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது.


இந்நிகழ்வில் சிறப்புரையாற்றிய மத்திய இணை அமைச்சர் பேசுகையில், மத்திய அரசின் பல்வேறு கடன்கள் மகளிருக்கும், சுய உதவி குழுவினருக்கும், விவசாயிகளுக்கும், தொழில் முனைவோருக்கும் எந்தவித பிற பிணையும் இல்லாமல் பாரத பிரதமரின் உத்தரவாதத்தோடு வழங்கப்படுவதாக கூறினார். ஏழை எளிய மக்களின் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு பிரதமரின் வீட்டு வசதி திட்டம், உஜ்வாலா திட்டம், வீடு தோறும் குடிநீர் ஆகிய திட்டங்களை வழங்கி உள்ளதாகவும், இதனால் தேசம் வளர்ச்சி அடைந்த பாதையில் சென்று கொண்டிருப்பதாகவும் குறிப்பிட்டார். இந்நிகழ்வில், உஜ்வாலா கேஸ் இணைப்புக்கான சிறப்பு முகாம் நடத்தப்பட்டு பொதுமக்கள் திட்டத்தில் சேர்க்கப்பட்டனர். இதனை மத்திய இணை அமைச்சர் பார்வையிட்டார். தொடர்ந்து வளர்ச்சியடைந்த பாரதத்திற்கான உறுதிமொழி ஏற்கப்பட்டது.


இதனைத் தொடர்ந்து, விழிப்புணர்வு வாகனத்தின் மூலம் பிரதமர் கலந்து கொண்ட நமது லட்சியம் வளர்ச்சி அடைந்த பாரதம் நிகழ்ச்சியின் நேரடி ஒளிபரப்பை பொதுமக்களோடு சேர்ந்தமர்ந்து மத்திய இணை அமைச்சர் பார்வையிட்டார். பின்னர் மத்திய அரசின் திட்டங்கள் அடங்கிய காலண்டர்களை பொதுமக்களிடம் வழங்கினார். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கூறியதாவது, ”2047 ஆம் ஆண்டில் இந்தியாவை வல்லரசு நாடாக உருவாக்கும் நோக்கில் மத்திய அரசு செயல்படுத்தி வரும் மக்களுக்கான வளர்ச்சித் திட்டங்களை பொதுமக்களிடம் கொண்டு செல்லும் வகையில் நமது லட்சியம் வளர்ச்சி அடைந்த பாரதம் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இதில் மத்திய அரசின் திட்ட பயனாளிகளை நேரில் சந்தித்து கருத்து பெறப்படுவதோடு, பல்வேறு திட்டங்களில் புதியதாக பயனாளிகளும் இணைக்கப்பட்டு வருகின்றனர்.


சபரிமலையில் பக்தர்களுக்கு வசதிகள் இல்லாதது குறித்து பாராளுமன்றத்தில் பாஜக சார்பிலும், உயர்நீதிமன்றத்திலும், பல்வேறு அமைப்புகளின் சார்பிலும் வலியுறுத்தப்பட்டு வருகிறது. சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதில் கேரளா அரசு நேரடியாக தலையிட்டு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் மாதந்தோறும் ஐந்து கிலோ அரிசி ஒரு கிலோ பருப்பு இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டம் மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அனைவருக்கும் பாரத பிரதமரால் ஜன்தன் வங்கி கணக்குகள் துவங்கப்பட்டுள்ளன. அதில் தமிழக அரசு வழங்கும் பொங்கல் பரிசுத் தொகையை செலுத்தினால் அது நேரடியாக மக்களைச் சென்று பயனளிக்கும்.


தேசத்தின் உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவது என்பது அவசியமாகும். தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்கும்போது நிலம் கையகப்படுத்தப்படுகிறது. அப்போது சந்தை விலையை விட மூன்று மடங்கு அதிகமாக கொடுத்து மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லாமல் உள்கட்டமைப்புகளை உருவாக்க வேண்டும். தொழில் முதலீட்டாளர்கள் நமது மாநிலத்திற்கு வருவது வரவேற்கத்தக்க விஷயமாகும். அதே நேரத்தில் அரசாங்கம் அவர்களுக்கு தேவையான வெளிப்படை தன்மையான நடவடிக்கைகளை மேற்கொண்டு, அவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கி தொழில்துறையினரை ஊக்குவிக்க வேண்டும். மேலும் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு மின் கட்டண உயர்வை அமல்படுத்தியதால் பாதிப்படைந்து வருகின்றனர். அதனை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்” என தெரிவித்தார்.