தமிழ்நாடு அரசு பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க கோரி, கோவை கீரணத்தம் பால் உற்பத்தியாளர்கள் பாலை சாலையில் ஊற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர். 


கோவை எஸ்.எஸ்.குளம் ஒன்றியத்திற்கு உட்பட்ட கீரணத்தம் ஊராட்சியில் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் செயல்பட்டு வருகிறது. இந்த சங்கத்தில் கீரணத்தம் சுற்று வட்டார பகுதியில் இருந்து சுமார் 50 க்கும் மேற்பட்ட விவசாயிகள் உறுப்பினர்களாக உள்ளனர். இந்நிலையில் விவசாயிகள் தங்கள் வளர்க்கும் மாடுகளில்  உற்பத்தி செய்யப்படும் பாலை கொண்டு வந்து இந்த சங்கத்தில் விற்பனை செய்கின்றனர். அதனை இப்பகுதி உள்ள பொதுமக்கள் வாங்கி செல்கின்றனர். மேலும் மீதமுள்ள பாலை ஆவின் நிலையத்திற்கு அனுப்பி வைக்கின்றனர். 


இந்த நிலையில் பால் கொள்முதல் விலை தங்களுக்கு போதுமானதாக இல்லைவும் கொள்முதல் விலையை தமிழ்நாடு அரசு உயர்த்தி தர வேண்டும் எனவும் கீரணத்தம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தினர் வலியுறுத்தி வந்தனர். தமிழ்நாடு அரசின் பட்ஜெட்டில் பாலுக்கு உண்டான கொள்முதல் விலை உயர்த்தி வழங்கப்பட எந்த ஒரு அறிவிப்பும் வராத நிலையில், பால் உற்பத்தியாளர்கள் இன்று ஒரு நாள் பாலை சங்கத்தில் ஒப்படைக்காமல் சாலையில் கொட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். 


மாடுகளை பராமரிக்க தேவையான வேலையாட்கள், புண்ணாக்கு, பசும் தீவனம், மருத்துவ செலவு உள்ளிட்டவை கடுமையாக விலை உயர்ந்துள்ளதால் எங்களால் மாடுகளை பராமரிக்க இயலவில்லை எனவும், கூட்டுறவு சங்கங்களில் கொடுக்கும் பாலுக்கான கொள்முதல் விலை கட்டுப்படி ஆகவில்லை எனவும் அவர்கள் தெரிவித்தனர். மேலும் பாலின் கொள்முதல் விலையை உயர்த்தி தர வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தினர்.
தமிழ்நாடு அரசின் கீழ் செயல்படும் ஆவின்  நிறுவனத்தால்  கொள்முதல் செய்யப்படும் பாலுக்கு, கொள்முதல் விலையை லிட்டருக்கு 7 ரூபாய் உயர்த்தி வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நலச்சங்கம் வலியுறுத்தியது. அவ்வாறு உயர்த்தாத பட்சத்தில் பால் நிறுத்த போராட்டம் நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதன்படி பால் நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 


தற்போது பசும்பால் 35 ரூபாய்க்கும், எருமைப்பால் 44 ரூபாய்க்கும் கொள்முதல் செய்யப்பட்டு வரும் நிலையில், 10 ரூபாய் உயர்த்தி தர வேண்டுமென கோரிக்கை விடுக்கபட்டது. அதனை தொடர்ந்து 3 ரூபாய் உயர்த்தப்பட்ட நிலையில் மீதமுள்ள 7 ரூபாயையும் உயர்த்த வேண்டுமென கோரி  ஆர்ப்பாட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாடுகளுக்கான தீவனம், பாலுக்கான உற்பத்தி செலவை ஒப்பிடும்போது தற்போது கொள்முதல் செய்யப்பட்டு வரும் விலை குறைவு என்பதால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே பால் கொள்முதல் விலையை உயர்த்தித் தராததை கண்டித்து, பால் உற்பத்தியாளர்கள் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண