கோவை நகரத்தில் மெட்ரோ ரயில் திட்டங்களுக்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. ஜூலை 15ல், தமிழக அரசிடம் சமர்ப்பிக்கப்பட உள்ளது. இந்நிலையில், இத்திட்டத்தில் மெட்ரோ ரயில் செயல்படுத்துவது குறித்தும் முன்னேற்பாடுகள் உள்ளிட்டவை தொடர்பாக ஆலோசனைக் கூட்டம், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூடுதல் தலைமை செயலாளர் ரமேஷ் சந்த் மீனா, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் சித்திக் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், கோவை மெட்ரோ ரயில் திட்டத்துக்கான திட்ட அறிக்கை குறித்து விவாதிக்கப்பட்டது. இதில் மாவட்ட ஆட்சியர் கிராந்திக்குமார் பாடி, மாநகராட்சி ஆணையர் பிரதாப் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


கூட்டத்துக்கு பின்னர் சென்னை மெட்ரோ ரயில் நிர்வாக இயக்குனர் சித்திக்  செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “கோவையில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்த நிதி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில்  திட்டம் செயல்படுத்துவது குறித்து ஆலோசிக்கபட்டுள்ளது. கோவை மெட்ரோ ரயில் திட்ட அறிக்கை தயாரிப்பு பணிகள் இறுதி கட்டத்தை அடைந்துள்ளது. வரும் ஜூலை15 ம் தேதி திட்ட அறிக்கை தமிழக அரசிடம் வழங்கப்படுகின்றது. கோவை அவினாசி சாலை, சக்தி சாலை என இரு சாலைகளில் முதல்கட்டமாக திட்டம் செயல்படுத்தப்படுகிறது. மொத்தம் 39 கி.மீ தூரத்தில் 32 நிலையங்கள் அமைக்கப்பட இருக்கின்றன.




அவினாசி சாலையில் 17 ரயில் நிலையங்களும், சத்தி சாலையில் 14  ரயில் நிலைங்களும் அமைய இருக்கின்றது.  இந்த பாதையில்  3 பெட்டிகள் கொண்ட மெட்ரோ ரயில் இயக்க திட்டமிடப்பட்டு இருக்கின்றது. திட்ட அறிக்கை தமிழக அரசிடம் கொடுத்த பின்னர், ஒன்றிய அரசின் ஒப்புதல், பன்னாட்டு நிறுவன நிதி பெற்று இந்த திட்டம் செயல்படுத்தப்பட இருக்கின்றது. கோவை அவினாசி சாலையில் பாலம் கட்டப்பட்டு வரும் நிலையில், பாலத்தின்  இடது புறத்தில் மெட்ரோ ரயில் பாதைக்கான பணிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. முதல்கட்டமாக இரு பாதைகளும் உயர்மட்ட பாலமாக செயல்படுத்தபடுகின்றது.


நீலாம்பூரில் இருந்து உக்கடம் வரை அவினாசி சாலையிலும், காந்திபுரத்தில் இருந்து வளையம்பாளையம் வரை சத்தியமங்கலம்  சாலையிலும் அமைக்கப்பட உள்ளது. மெட்ரோ பணிகள் துவங்கியதில் இருந்து  3.5 ஆண்டுகளில் பணிகளை முடிக்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. மெட்ரோ ரயிலில் மூன்று பெட்டிகள் இருக்கும் நிலையில் ஒவ்வொரு பெட்டியிலும்  250 பேர் பயணிக்க முடியும். மெட்ரோ ரயில் திட்டம் 150 ஆண்டுகள் வரை பயன்பாட்டில் இருக்கும். அடுத்த 30 ஆண்டுகளுக்கு பயன்பாட்டை அடிப்படையாக கொண்டு திட்டமிடப்பட்டுள்ளது. திட்டம் முழுவதும் உயர்மட்ட பாலமாகவே திட்டமிடப்பட்டுள்ளது. சுரங்க பாதைகள் எதுவும்  திட்டமிடப்படவில்லை. ஒரு சில இடங்களில் நில எடுப்பு இருக்கும். இந்த திட்டத்திற்காக சுமார் 75 ஏக்கர் வரை அரசு மற்றும் தனியார் நிலம் கையகப்படுத்தப்பட இருக்கின்றது” எனத் தெரிவித்தார். இதனைதொடர்ந்து டவுன்ஹால் பகுதியில் அதிகாரிகள் சித்திக், ரமேஷ் சந்த் மீனா ஆகியோர் மெட்ரோ ரயில் திட்டம் அமைய இருக்கும் இடங்களை நேரில் ஆய்வு செய்தனர்.


ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.





ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண