கோடநாடு கொலை, கொள்ளை தொடர்பான வழக்கு விசாரணை இன்று நீலகிரி மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெறுகிறது. முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு கோடநாடு கொலை, கொள்ளை தொடர்பு இருப்பதாக முக்கிய குற்றவாளியான சயன் கூறியிருந்தார்.


இன்று, இந்த வழக்கில் என்ன எதிர்பார்க்கப்படுகிறது?    


தடவியல் நிபுணர் மற்றும் கோத்தகிரி மின்வாரிய பொறியாளர், கோடநாடு பங்களா மேலாளர் நடராஜன் ஆகியோரை விசாரிக்க வாய்ப்புள்ளது. இவர்கள் புதிதாக விசாரணைக்கு ஆஜர்படுத்தப்படும் மூன்று நபர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கூடுதல் விசாரணைக்கு தடை கேட்டு, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளதால், கூடுதல் விசாரணைக்கு அனுமதி கிடைக்குமா என்பது கேள்விக்குறியாக உள்ளது. சயனிடம் கைப்பற்றப்பட்ட செல்போன்களை நீதிமன்றத்தில் ஒப்படைக்க கோரி, சயன் தரப்பில் முறையிட வாய்ப்புள்ளது.


விசாரணைத் தீவிரம் அடைந்தது:  இந்நிலையில் இந்த வழக்கில் கூடுதல் விசாரணை தேவையுள்ளது என நீதிமன்றத்தில் தெரிவித்த நீலகிரி காவல் துறையினர், சயானை விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியது. இதையடுத்து கடந்த 17-ஆம் தேதி ஆஜரான சயனிடம் 3 மணிநேரம் காவல் துறையினர் விசாரணை நடத்தினர். இதையடுத்து கடந்த 24-ஆம் தேதி விபத்தில் உயிரிழந்த கனகராஜ் அண்ணன் தனபாலிடம் ஒரு மணிநேரம் விசாரணை நடத்தினர். இதனால் வழக்கு விசாரணை தீவிரமடைந்துள்ளது.




ஆகஸ்ட் 27 அன்று நடந்த விசாரணை:  இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் 27-ஆம் தேதி  கோடநாடு வழக்கு விசாரணை தொடர்பான வழக்கு  உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்றது. சயன், தனபால் ஆகியோரிடம் காவல் துறையினர் நடத்திய விசாரணைக்கு பின் நடைபெறும், முதல் நீதிமன்ற விசாரணை என்பதால் புதிய திருப்பங்கள் ஏற்படும் என எதிர்பார்க்கப்பட்டது. சயன் காவல் துறையினரிடம் அளித்த வாக்குமூலம் தொடர்பான அறிக்கை தாக்கல் செய்யப்படும், கூடுதல் நபர்களிடம் விசாரணை நடத்த அனுமதி கோரப்படும் என எதிர்பார்க்கப்பட்டது


கூடுதல் விசாரணைக்கு தடை கேட்டு தாக்கல் செய்யப்பட்ட வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால், வழக்கு விசாரணையை ஒத்தி வைக்க வேண்டுமென அரசு தரப்பு வழக்கறிஞர் கோரிக்கை வைத்தார். இதனை ஏற்று வழக்கின் மீதான விசாரணை இன்று (செப்டம்பர் 2 ம் தேதி) நீதிபதி சஞ்சய் பாபா ஒத்திவைத்தார். கோட நாடு வழக்கில் சாட்சிய விசாரணையில் விடுபட்ட தடவியல் நிபுணர் ராஜாகோபால், கோத்தகிரி மின்வாரிய பொறியாளர் மற்றும் கோடநாடு பங்களா மேலாளர் நடராஜன் ஆகியோரை விசாரிக்க வேண்டுமென குற்றவாளிகள் தரப்பு வழக்கறிஞர் விஜயன் கோரிக்கை வைத்தார். அதனை ஏற்ற நீதிபதி வருகின்ற செப்டம்பர் 2-ஆம் தேதி முதல் விசாரிக்க அனுமதி அளித்து உத்தரவிட்டார். அதே சமயம் சயன் வாக்குமூலம் தொடர்பான அறிக்கையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படவில்லை.