கோடநாடு கொலை கொள்ளை வழக்கு தொடர்பாக இன்று உதகையில் உள்ள நீலகிரி மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த விசாரணைக்கு சிபிசிஐடி ஏ.டி.எஸ்.பி. முருகவேல் தலைமையிலான காவல் துறையினர், அரசு வழக்கறிஞர் கனகராஜ் ஆகியோர் ஆஜராகினர். குற்றம்சாட்டபட்டவர்கள் தரப்பில், சயான், வாளையாறு மனோஜ் ஆகியோர் ஆஜராகினர். வழக்கு விசாரணையின் போது, கடந்த வழக்கு விசாரணையின் போது எதிரிகள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் விஜயன் சம்பவம் நடைபெற்ற கோடநாடு பங்களாவை நீதிபதி நேரில் சென்று ஆய்வு செய்ய வேண்டும் என தாக்கல் செய்த மனுவிற்கு அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் கேட்கப்பட்டது.


மேலும் கோடநாடு பங்களாவை நீதிமன்றத்தின் மூலம் ஆய்வு செய்ய எந்த ஆட்சேபனையும் இல்லை என தெரிவித்த அரசு வழக்கறிஞர், சி.பி.சி.ஐ.டி காவல் துறையினர், பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் மின்வாரியத் துறை அதிகாரிகள் அடங்கிய நிபுணர் குழு கோடநாடு பங்களாவை ஆய்வு செய்ய அனுமதிக்குமாறு கேட்டுக் கொண்டனர். அதனை ஏற்றுக் கொண்ட மாவட்ட நீதிபதி நிபுணர் குழு கொடநாடு பங்களாவை ஆய்வு செய்யலாம் என்றும், அதனை முழுவதுமாக வீடியோ எடுத்து நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்றும், சாட்சியங்களை அழிக்கக் கூடாது என்றும் உத்தரவிட்டார். பின்னர் கோடநாடு வழக்கு விசாரணையை வருகின்ற மார்ச் 8ம் தேதிக்கு ஒத்தி வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.


முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு சொந்தமான நீலகிரியில் உள்ள கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017ஆம் ஆண்டு ஏப்ரல் 23 ஆம் தேதி கொள்ளை சம்பவம் நடைபெற்றது. பாதுகாவலராக இருந்த ஓம்பகதூர் என்பவரை கொலை செய்து விட்டு, சில மதிப்புமிக்க பொருட்கள் திருடப்பட்டது. இது தொடர்பாக சயான், சதீசன், உதயகுமார், ஜம்சிர் அலி, தீபு, சந்தோஷ், திலிப் ஜாய், வாளையார் மனோஜ், மனோஜ்  உள்ளிட்ட 10 பேர் மீது கைது செய்யப்பட்டனர். இவ்வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஓட்டுநர் கனகராஜ், சேலம் மாவட்டத்தில் நடந்த கார் விபத்தில் உயிரிழந்தார். இது தொடர்பான வழக்கு நீலகிரி மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.


இதனிடையே கோடநாடு வழக்கில் கூடுதல் விசாரணையை துவக்கிய நீலகிரி காவல் துறையினர், 5 தனிப் படைகள் அமைத்து கூடுதல் விசாரணை தீவிரப்படுத்தினர். சாட்சிகள், குற்றம் சாட்டப்பட்டவர்கள், அவர்களின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என கூடுதல் விசாரணை நடத்தப்பட்டது. இவ்வழக்கில் குற்றவாளியாக சேர்க்கப்பட்ட சயன், ஜம்சிர் அலி, சந்தோஷ் சாமி, மனோஜ் சாமி, சதீசன், பிஜின் குட்டி, தீபு உள்ளிட்டோரிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தி ரகசிய வாக்குமூலம் பெற்றனர். இதனிடையே கோடநாடு கம்யூட்டர் ஆப்ரேட்டர் தினேஷ்குமார் தற்கொலை வழக்கு மற்றும் கனகராஜ் விபத்து வழக்குகளை காவல் துறையினர் மறு விசாரணை நடத்தினர். இதனிடையே கோடநாடு கொலை கொள்ளை வழக்கு சிபிசிஐடி விசாரணை மாற்றப்பட்டது. இதையடுத்து ஏ.டி.எஸ்.பி முருகவேல் தலைமையில் மூன்று தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. பல்வேறு நபர்களிடம் விசாரணை நடத்தி சிபிசிஐடி அதிகாரிகள், செல்போன் தரவுகளை ஆராய்ந்து வருகின்றனர்.