கோவையில் உள்ள இந்திய  விமானப் பயிற்சி கல்லூரியில் பெண் விமானப்படை  அதிகாரி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக புகார் அளித்த விவகாரத்தில் சக அதிகாரி கைது செய்யப்பட்டார்.


கோவை பந்தய சாலை பகுதியில் விமானப் படை பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மைரத்தில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 30 பேர் பயிற்சிக்காக வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த செப்டம்பர் 10 ஆம் தேதி தன்னை சக அதிகாரி பாலியல் வன்கொடுமை செய்ததாக, 29 வயதான பாதிக்கப்பட்ட பெண் அதிகாரி ஒருவர் விமானப்படை பயிற்சி கல்லூரி அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளார். விளையாட்டின் போது காயமடைந்த அவர், தனது அறைக்கு சென்ற போது பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் இரண்டு வாரங்களான பின்னரும் நடவடிக்கை எடுக்க தாமதம் ஆகி வந்ததால், பாதிக்கப்பட்ட பெண் அதிகாரி கோவை காவல் துறையிடம் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் காந்திபுரம் அனைத்து மகளிர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.


இந்த நிலையில் கோவை விமானப் படை கல்லூரியில் பயிற்சியில் இருந்த  லெப்டினல் அமிர்தேஷ் என்ற விமானப் படை அதிகாரியை கோவை காவல் துறையினர்  கைது செய்தனர். அதிகாரி லெப்டினல் அமிர்தேஷ்  நீதிபதி இல்லத்திற்கு அழைத்து செல்லப்பட்டு ஆஜர் செய்யப்பட்டார். விமான படை அதிகாரி மீது கோவை காவல் துறையினர் நடவடிக்கை எடுக்க முடியாது என அமிர்தேஷ் தரப்பு வழக்கறிஞர் அபிடவிட் தாக்கல் செய்தார். கோவை காவல் துறை பதில் அபிடவிட் தாக்கல் செய்ய அவகாசம் கேட்ட நிலையில், விமானப் படை அதிகாரி லெப்டினல் அமிர்தேஷை ஒரு நாள் மட்டும் ரிமாண்ட் செய்ய நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.


இதனையடுத்து லெப்டினல் அமிர்தேஷை உடுமலை கிளை சிறையில் காவல் துறையினர் அடைத்தனர். இது குறித்து காவல்துறையினர் கூறும்போது, லெப்டினல் அமிர்தேஷ் மீது 376 என் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் நாளை நீதிமன்ற உத்தரவுப்படி  வழக்கின் தன்மை இருக்கும் என தெரிவித்தார்.


இதனிடையே இந்திய விமானப்படை கல்லூரியில் பெண் அதிகாரி  பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக புகார் அளித்த விவகாரத்தில்,  கோவை மாநகர காவல்துறையின் நடவடிக்கைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கப்படும் எனவும், தவறிழைத்த அதிகாரி மீது குழு அமைத்து விசாரணை நடத்தி துறை ரீதியான நடவடிக்கை எடுக்கும் பணிகள் தொடங்கியுள்ளது என விமான படை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விமான படை பயிற்சி கல்லூரியில் பெண் விமானப்படை  அதிகாரி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் சக அதிகாரி கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.