கோவை அவினாசி சாலையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் இந்திய வர்த்தக சபை, தொழில்துறை கூட்டமைப்பு மற்றும் கொங்கு கிலோபல் போரம் ஆகிய அமைப்புகள் சார்பில் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழ்நாட்டின் மேற்கு மாவட்டங்களை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், தொழில்துறையினர், மாவட்ட ஆட்சியர் சமீரன், பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ. வேலு மற்றும் வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் மேற்கு மண்டலத்தைச் சேர்ந்த தொழில் துறையினர் சந்திக்கும் சவால்கள் மற்றும் தொழில்துறை வளர்ச்சிக்கான நடவடிக்கைகள் குறித்து பல்வேறு தொழில் துறை அமைப்பைச் சேர்ந்த பிரதிநிதிகள் எடுத்துரைத்தனர். குறிப்பாக தொழில் துறை வளர்ச்சிக்காக சாலை விரிவாக்கம், நெடுஞ்சாலை கட்டமைப்பு மற்றும் கோவை விமான நிலைய விரிவாக்கம் போன்ற கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டது.


இந்த நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றிய அமைச்சர் எ.வ.வேலு, “தனிமனித பொருளாதாரம் வளர கிராமப்புற மற்றும் நகர வளர்ச்சிக்கு சாலைகள் முக்கிய பங்காற்றும். கோவை மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் ஏற்றுமதிக்கு சாலை கட்டமைப்பு முக்கிய பங்கு வகிப்பவை. தொழில் வளர்ச்சியை ஊக்குவிக்கும் அரசாங்கமாக தமிழ்நாடு அரசு செயல்பட்டு வருகிறது. இதனால் தொழில் வளர்ச்சி, பொருளாதார மேம்பாடு மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கம் அதிகமாகும். தமிழ்நாட்டின் மேற்கு பகுதிக்கான வளர்ச்சிக்கு தமிழக அரசு என்றென்றும் உறுதுணையாக இருக்கும். பல்லடம் முதல் கொச்சி வரையிலான சாலையை அகலப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பல்லடம் - சித்தூர் இரு வழி சாலையை நான்கு வழிச்சாலையாக மாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கோவை முதல் கரூர் வரை நெடுஞ்சாலை அமைப்பதற்கான ஆய்வுப் பணிகள் நிறைவு பெறும் தருவாயில் உள்ளன. 3140 கோடி மதிப்பீட்டில் 2024ம் ஆண்டுக்கு முன்பு இப்பணிகள் நிறைவு பெறும்.




இவை மட்டுமின்றி கோவை மாவட்டத்தில் கட்டப்பட்டு வரும் மேம்பாலங்களில், முக்கிய பகுதிகளில் இறங்கு தளம் அமைப்பதற்கான கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு அதன் அடிப்படையில் முக்கிய மேம்பாலங்களில் இறங்கு தளம் அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இக்கூட்டத்தின் மூலமாக தொழில்துறையினர் அளித்துள்ள கோரிக்கைகள் முதலமைச்சர் அவர்களின் பார்வைக்கு கொண்டு செல்லப்படும்” என அவர் தெரிவித்தார்.


இதையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் எ.வ‌.வேலு, ”கோவையின் வளர்ச்சிக்கு திமுக ஆட்சி உறுதுணையாக இருக்கும்.  கோவை விமான நிலைய விரிவாக்க பணிக்கு 1132 கோடி ஒதுக்கி முதலமைச்சர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.  நாளை மறுதினம் விமான நிலைய விரிவாக்கப் பணிகளுக்காக நிலம் கையகப்படுத்தும் பணிகள் தொடங்கும். 600 ஏக்கர் நிலம் விமானநிலைய விரிவாக்கத்திற்காக கையகப்படுத்தப்பட்ட உள்ளது. கோவை அவினாசி சாலையில் மேம்பால கட்டுமானப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், மெட்ரோ ரயில் கட்டுமான பணிகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டு வருகிறது. கொங்கு மண்டல வளர்ச்சி என்பது தனிப்பட்ட வளர்ச்சி அல்ல, ஒட்டுமொத்த மாநிலத்தின் வளர்ச்சி” என அவர் தெரிவித்தார்.