கோவை மாவட்டத்தில் வனத்தையொட்டிய 1049 ஹெக்டேர் நிலத்தை வனப்பகுதிகளில் சேர்க்க மாவட்ட ஆட்சியர் நாகராஜன் உத்தரவிட்டார். இதன்மூலம் மாவட்டத்தின் மொத்த வனப்பரப்பளவு  1,23,264. 87 ஹெக்டராக உயர்ந்துள்ளது.


கோவை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையடிவார பகுதியில் உள்ள வனப்பகுதிகள் வனவிலங்குகளின் புகலிடமாக விளங்கி வருகிறது. கோவை மாவட்டத்தில் கோவை வனக்கோட்டம் மற்றும் ஆனைமலை புலிகள் காப்பகத்தின் கீழ் வனச்சரகங்கள் உள்ளன. இங்கு யானை, புலி, மான், கரடி, சிறுத்தை உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் உள்ளன. காடுகள் சுருங்குதல், வழித்தட ஆக்கிரமிப்பு, உணவு, தண்ணீர் பற்றாக்குறை உள்ளிட்ட காரணங்களால் வனவிலங்குகள் கிராமப்பகுதிக்குள் நுழைவது நடந்து வருகிறது. இதனால் மனித - வனவிலங்கு மோதல்கள் அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டில் கோவை வன மண்டலம் அதிக மனித - வனவிலங்குகள் மோதல்கள் நடக்கும் பகுதியாக உள்ளது.




இந்நிலையில் கோவை மாவட்டத்தில் மேட்டுப்பாளையம், ஆனைமலை, பொள்ளாச்சி ஆகிய பகுதிகளில் வனத்தை ஒட்டிய பகுதிகளை வனப்பகுதிகளுடன் இணைக்க மாவட்ட ஆட்சியர் நாகராஜன் உத்தரவிட்டுள்ளார். இந்த நடவடிக்கை காரணமாக வனப்பகுதியின் பரப்பு 1049 ஹெக்டேர் விரிவடைந்துள்ளது.


இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், ’கோயம்புத்தூர் மாவட்டத்தில் வனப்பகுதி இப்போது அதிகாரப்பூர்வமாக அதிகரித்துள்ளது. 1882 ஆம் ஆண்டு தமிழ்நாடு வனச் சட்டத்தின் பிரிவு 26-இன் கீழ் வருவாய் மற்றும் வனத்துறைக்கு சொந்தமான சுமார் 1049 ஹெக்டேர் நிலங்களை  வன நிலங்களாக அறிவித்துள்ளார். அதேபோல 1949-ஆம் ஆண்டு தமிழ்நாடு தனியார் வன நிலங்கள் பேணுகைச் சட்டம் கீழ் மாநிலத்தில் மிக முக்கியமான கல்லார் யானை வலசைப் பாதையை பாதுகாக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அப்பகுதியில் வனத்துக்கு நடுவே அமைந்து இருக்கும் சுமார் 50.79 ஹெக்டேர் தனியார் நிலங்களை தனியார் வனமாக்க உத்தரவிட்டுள்ளார். இச்சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்ட மாநிலத்தின் முதல் யானைகள் வலசைப்பாதை இதுவாகும் என்பது சிறப்பு.


ஏற்கனவே கோவை மாவட்டத்தின் வனப்பரப்பு 1,22,215.13 ஹெக்டர் ஆக இருந்தது. தற்போது கூடுதலாக 1049.74 ஹெக்டர் வனப்பரப்பு சேர்க்கப்பட்டுள்ளது. இதனால் மாட்டத்தின் தற்போதைய மொத்த வனப்பரப்பளவு - 1,23,264. 87 ஹெக்டர் ஆக உயர்ந்துள்ளது’ எனக் கூறப்பட்டுள்ளது.




இதுகுறித்து கோவை மாவட்ட வன அலுவலர் வெங்கடேசன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘கோயம்புத்தூர் மாவட்டத்தில் காடுகள் மற்றும் பல்லுயிர் பாதுகாப்பை பேணும்வகையில் மிகக் குறுகிய காலத்தில் பல ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைகள் அனைத்தையும் ஒரே மாதத்திற்குள் கோவை மாவட்ட ஆட்சியர் நாகராஜன் எடுத்துள்ளார். இதற்காக கோவை கோட்டம் மற்றும் ஆனைமலை புலிகள் காப்பகத்தை சேர்ந்த வன அதிகாரிகள் மற்றும் வனப் பணியாளர்கள், சார்பில் ஆட்சியர் நாகராஜனுக்கு மனமார்ந்த நன்றி மற்றும் பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறோம்” எனத் தெரிவித்தார்.


வனப்பரப்பை அதிகரித்த கோவை மாவட்ட ஆட்சியர் நாகராஜனின் நடவடிக்கைக்கு வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், கோவை மாவட்ட ஆட்சியர் நாகராஜனுக்கு புத்தகம் வழங்கி பாராட்டு தெரிவித்துள்ளார். இதேபோல சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். அதேசமயம் வன ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுப்பது மனித - வனவிலங்கு மோதல்களுக்கு தீர்வாக அமையும் என சூழல் செயற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.