நீலகிரி மாவட்டம் கூடலூர் சுற்றுவட்டார பகுதிகளில் டி 23 எனப் பெயரிடப்பட்ட ஆண் புலி ஒன்று கால்நடைகளை வேட்டையாடி வந்த நிலையில், மனிதர்களையும் தாக்கி வருகிறது. உடலில் ஏற்பட்டுள்ள‌ காயத்துடன் காட்டை விட்டு வெளியேறிய அந்த புலி, தேயிலைத் தோட்டங்களில் நடமாடி வந்தது. இந்நிலையில் கடந்த வாரம் தேவன் எஸ்டேட் பகுதியைச் சேர்ந்த சந்திரன் என்ற நபர் புலி தாக்கியதில் உயிரிழந்தார். இதையடுத்து சிங்காரா பகுதிக்கு புலி இடம் பெயர்ந்த நிலையில், குறும்பர் பாடி என்ற இடத்தில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த மங்கள பசவன் என்றவரை புலி கடித்து கொன்றது.




புலி நடமாட்டம் காரணமாக கூடலூர் சுற்றுவட்டார பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். புலியை பிடிக்கக் கோரி உள்ளூர் மக்கள் தொடர் போராட்டங்களை நடத்தினர். இதையடுத்து புலியை பிடிக்கும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். டி 23 புலி இதுவரை 4 மனிதர்களையும், 30 க்கும் மேற்பட்ட கால்நடைகளையும் தாக்கி கொன்றுள்ளதாக கூறும் உள்ளூர் மக்கள், புலியை சுட்டுக் கொல்ல வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். இதனிடையே ஆட்கொல்லி புலியை சுட்டுக் கொல்ல தமிழ்நாடு முதன்மை வன அதிகாரி சேகர் குமார் நீரஜ் உத்தரவிட்டார். புலியை சுட்டுக் கொல்ல ஆதரவாகவும் எதிராகவும் கருத்துக்கள் பகிரப்பட்டு வருகின்றன. இதனிடையே புலியை சுட்டுக் கொல்ல எதிர்ப்பு தெரிவித்து, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதனால் புலியை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க வனத்துறையினர் முயற்சித்து வருகின்றனர். புலியை சுட்டுக் கொல்வதா அல்லது மயக்க ஊசி செலுத்திப் பிடிப்பதா என்பது சூழலுக்கு ஏற்ப முடிவு செய்யப்படும் என வனத்துறை அமைச்சர் ராமசந்திரன் தெரிவித்துள்ளார்.




எப்படி நடக்கிறது ஆப்ரேசன் டி 23?


தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் வழிகாட்டுதல் படி, புலியை பிடிக்கும் பணிகள் நடைபெறுகின்றன. வனப்பகுதியில் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை புலியை தேடும் பணியில் வனத்துறையினர் ஈடுபடுகின்றனர். பல்வேறு பகுதிகளில் புலியை பிடிக்க கூண்டுகள் வைத்து கண்காணித்து வருகின்றனர். புலியைத் தேடும் பணியில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா ஆகிய 3 மாநில வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். கால்நடை மருத்துவர்கள், சிறப்பு அதிரடிப்படையினர், கேரளா புலிகள் பிடிக்கும் நிபுணர்கள் உள்ளிட்டோரும் புலியை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். முதுமலை மட்டுமின்றி தேவன் எஸ்டேட், மே பீல்ட் ஆகிய பகுதிகளிலும் கண்காணிப்பு பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.




புலி தேடுதல் வேட்டையில் 2 கும்கி யானைகள், 4 மோப்ப நாய்கள் களமிறக்கப்பட்டுள்ளன. அடர்ந்த வனப்பகுதிக்குள் புலி தென்பட்டால், கும்கி யானைகள் மீது அமர்ந்து சென்று மயக்க ஊசி செலுத்த திட்டமிட்டுள்ளனர். இதற்காக சீனிவாசன், உதயன் ஆகிய இரண்டு கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டுள்ளன. 3 ட்ரோன்கள் மூலம் புலி இருப்பிடத்தை தேடும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதேபோல புலி நடமாட்டத்தை கண்காணிக்க பல்வேறு பகுதிகளில் அதி நவீன கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. துப்பாக்கிகள், மயக்க ஊசி துப்பாக்கிகள் உள்ளிட்டவை உடன் மருத்துவக்குழுவினரும், வனத்துறையினரும் வனப்பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.




புலி தொடர்ந்து தனது இருப்பிடத்தை மாற்றிக் கொண்டே இருப்பதால், புலியின் இருப்பிடத்தை கண்டறிவதில் சிரமங்கள் ஏற்பட்டுள்ளன. கடந்த 9 நாட்களாக வனத்துறையினர் எடுத்த முயற்சிகள் தோல்வியில் முடிவடைந்தன. இந்நிலையில் இன்று பத்தாவது நாளாக புலியை தேடும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.