கோவை விமான நிலையத்தில் புதுச்சேரி மாநில துணை நிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கியதற்கு பிரதமருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். நாடு வேகமாக முன்னேறுவதற்கு இந்த இட ஒதுக்கீடு முதல் படியாக இருக்கும். இதனை இந்தியாவில் உள்ள பெண்கள் கொண்டாட வேண்டும். கடந்த 10 ஆண்டுகளில் இந்தியா முன்னேற்றம் அடைந்து வருகிறது. ஆனால் கடந்த பத்து ஆண்டுகளில் ஒன்றும் நடக்கவில்லை என தமிழ்நாடு முதலமைச்சர் சொல்லியிருப்பது சரியில்ல. உயர்கல்வி மருந்துவப்படிப்பில் சற்றேக்குறைய 70 ஆயிரம் இடங்கள் உள்ளன. அதில் 4 ஆயிரம் இடங்கள் காலியாக உள்ளது. ஜீரோ பர்சன்டைல் என்பது இந்தாண்டு காலியிடங்களை நிரப்ப ஒருமுறை மட்டுமே வழங்கப்படுகிறது. இதனை வைத்து நீட் தேவையில்லை என்பது தவறு.


மருத்துவக்கல்லூரிகள், மருத்துவ படிப்புகளுக்கான இடங்கள் அதிகமாகி ‌இருப்பதால் வாய்ப்புகள் அதிகம் கிடைக்கிறது. மருத்துவ உயர் கல்வி பயிற்றுவிக்க ஆசிரியர் கிடைக்கவில்லை. இதனால் இந்த ஜீரோ பர்சண்டைல் ஒருமுறை கொண்டு வரப்பட்டுள்ளது. இதனை வைத்து ஜீரோ ஜீரோ என சொல்லக்கூடாது. சிலர் ஜீரோ ஆட்சி நடப்பதால் ஜீரோ பர்சண்டைல் கொண்டு வரப்பட்டுள்ளது என்பது தவறானது. மருத்துவ உயர்கல்வியை சீரமைக்க மத்திய அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. கவுன்சிலிங் செல்லும் போது தகுதியான மருத்துவர்களுக்கு தான் வாய்ப்புகள் கிடைக்கும். இதனால் தனியார் மருத்துவ கல்லூரிகள் பலனடையும் என்பது சரியல்ல. அரசுக் கல்லூரிகளும் பலனடையும். தனியார் கல்லூரிகளும் பலனடையும். இதனை வைத்து அநாவசியமாக அரசியல் செய்யக்கூடாது.


சனாதனம் ஒழிப்பு என்றவர்கள் ஏன்‌ மத, சாதி வேறுபாடுகளை பேசுகிறார்கள்? நலம் பயின்ற பள்ளிகளில் மலம் கலக்கப்படுகிறது ஏன்?இதற்கு முன்பு எப்போது இப்படி நடந்தது? இந்துக்கள் படிக்க மற்றவர்கள் காரணம் என சபாநாயகர் சொல்வது நியாயமா என நீங்கள் தான் முடிவு செய்து கேட்க வேண்டும். இவர்கள் இப்படி பிரிவினையை ஏற்படுத்தி கொண்டே இருக்கிறார்கள். சனாதனம் குறித்து பேசியதற்கு உதயநிதி ஸ்டாலின் சட்டரீதியாக சந்தித்து தான் ஆக வேண்டும். அநாவசியமா சத்தம் போட்டால் சட்டரீதியாக சந்தித்து தான் ஆக வேண்டும். நாடாளுமன்றத்தில் பாஜக டெல்லி எம்.பி. பேசியது தவறு தான். இதற்கு ஏற்கனவே கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.


நாடாளுமன்றத்தில் குடியரசு தலைவர் உரை நிகழ்த்தும்போது, குடியரசு தலைவர் அழைக்கப்படுவார். உதயநிதி ஸ்டாலின் நடிகராக இருந்து விட்டு, நாடாளுமன்றத்திற்கு நடிகை வருவதை தவறு என சொல்வது சரியா? எதுதான் இவரது பொதுநோக்கு? இன்று குடியரசு தலைவருக்கு ஆதரவு தெரிவிப்பது பேசுபவர்கள், குடியரசு தலைவராக போட்டியிட்ட போது ஏன் ஆதரிக்கவில்லை? பெண்கள், பழங்குடியினர், கீழ்நிலையில் இருப்பவர்கள் முன்னுக்கு வர அங்கீகாரம் தர வேண்டும். நீங்கள் ஒட்டு போட்டு ஜனாதிபதி வெற்றி பெறவில்லை. அவர் ஜனாதிபதியாக பிரதமர் தான் காரணம். அதற்கு பதில் சொல்லுங்கள். வந்த பிறகு கேள்வி மட்டும் கேட்கக்கூடாது” எனத் தெரிவித்தார்.