கோவை திருமலையாம்பாளையம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்ற ஆண்டு விழாவில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். இந்நிகழ்ச்சியில் ஆளுநர் மாணவர்களுக்கு பிரதமர் மோடி எழுதிய 'எக்ஸாம் வாரியர்ஸ்' புத்தகத்தினை அன்பளிப்பாக வழங்கினார். இதனைத் தொடர்ந்து பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, ”இன்று மகாத்மா காந்தி நினைவு தினம். இத்தருணத்தில் அவருக்கு மரியாதை செலுத்துவதை பெருமையாக கருதுகிறேன். மகாத்மா காந்தியடிகளை போல பலரும் இந்த நாட்டின் விடுதலைக்காக தங்களது வாழ்க்கையை அர்ப்பணித்துள்ளனர். அவர்களை நினைத்து பார்க்க வேண்டும்.
மகாத்மா காந்தி, சுவாமி விவேகானந்தர், ரிஷி அரவிந்தர் மற்றும் மகாகவி பாரதியார் ஆகியோரது கனவுகளை நினைவாக்குவதில் இந்தியாவின் இளம் தலைமுறையினருக்கு மிகப்பெரிய பங்கு உள்ளது. இந்த பள்ளி மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கையை பின்பற்றுவதாக தெரிந்து கொண்டேன். அது மிகவும் மகிழ்ச்சி அளிக்க கூடியதாக உள்ளது. இன்றைய போட்டி நிறைந்த உலகில் எந்த விதத்திலும் யாரும் பின்தங்கி இருக்கக்கூடாது. அவ்வாறு பின் தங்குபவர்களுக்காக யாரும் கவலை கொள்வதில்லை. எனவே இளம் தலைமுறையினர் தொழில்நுட்ப அறிவிலும், கல்வியிலும் முன்னணியில் இருக்க வேண்டிய சூழல் உள்ளது. 


கல்வி என்பது ஒருவரைக் காப்பாற்றுவது, ஒருவரது குடும்பத்தை காப்பாற்றுவது மட்டுமின்றி தேசத்தை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்வதிலும் முக்கிய பங்கு வகிக்க வேண்டும். தற்போது அமல்படுத்தப்பட்டுள்ள தேசிய கல்விக் கொள்கைக்கு முன்பு இரு முறை தேசிய கல்விக் கொள்கை அமல்படுத்தப்பட்டுள்ளது. அவை முந்தைய காலனி தாக்கம் கொண்ட கல்வி முறையில் சிறிதளவு மாற்றங்களை மட்டும் கொண்டு வந்ததே தவிர மிகப்பெரிய முன்னேற்றத்தை தரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


சமீப காலமாக தான் சர்வதேச அரங்கில் இந்தியா முக்கிய நாடாக கருதப்படுகிறது. இழந்த நமது பெருமையையும் தன்னம்பிக்கையும் மரியாதையும் கல்வி அறிவையும் மீட்டு வருகிறது. சர்வதேச நாடுகள் இந்தியாவை பார்க்கும் பார்வையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. சர்வதேச அளவில் உருவாக்கப்படும் அமைப்புகளில் இந்தியாவின் பங்கும் இருப்பும் முக்கியமாகியுள்ளது. ஜி-20 மாநாட்டினை இந்தியா தலைமை தாங்கி நடத்துவது இந்தியாவிற்கு பெருமையை சேர்த்துள்ளது. உலகில் சக்தி வாய்ந்த சைனா, அமெரிக்கா, ரஷ்யா உட்பட 20 நாடுகளை ஒருங்கிணைத்து ஜி20 மாநாட்டை இந்தியா நடத்துவது பெருமையாகும்.




அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் பொருளாதார சிக்கலில் சிக்கி தவித்து வரும் இந்த சூழலில் இந்தியா உலக பொருளாதாரத்தில் வேகமாக வளர்ந்து வரும் நாடாக உள்ளது. இதற்கு முக்கிய காரணம்  பிரதமர் நரேந்திர மோடியின் சீரிய முன்னெடுப்புகள் ஆகும். இந்தியாவிற்கான இலக்கை சரியாக நிர்ணயித்து அதனை நோக்கி இந்தியாவை செலுத்தி வருகிறார். நமது பாரத பிரதமர், உலக நாடுகளின் தலைமையாக இந்தியாவை உருவாக்க வேண்டும் என்ற லட்சிய கனவை நோக்கி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.


கோவிட் நோய் தொற்றால் உலக நாடுகள் பாதிக்கப்பட்டபோது, இந்தியா மட்டுமே கோவிட் தடுப்பூசிகளை, மருந்துகளை, உணவுகளை பிற நாடுகளுக்கு அதிக அளவில் வழங்கி உதவியது. கோவிட் தடுப்பூசிகளை பிற நாடுகள் விலை உயர்த்தி விற்று வந்தபோது, ஏழை மக்களுக்காக இலவசமாக இந்தியா வழங்கியது குறிப்பிடத்தக்கது. 120க்கும் மேற்பட்ட நாடுகள் இந்தியாவிடம் இருந்து கோவிட் தடுப்பூசியை பெற்று பயனடைந்துள்ளனர்.


ரஷ்யா உக்ரைன் போர் சூழலின் போது உலகமே இரண்டு துண்டுகளாக பிரிந்து இருந்தபோது, இந்தியா நடுநிலை வகித்து கருத்துக்களை தெரிவித்தது. இந்தியாவின் கருத்துக்களை கேட்க இரு நாடுகளும் தயாராகவே இருந்தன. மேலும் இந்தியாவின் வேண்டுகோளுக்கு இணங்க இரு நாடுகளும் போர் நிறுத்தம் செய்து அந்தந்த நாடுகளில் இருந்த இந்திய மாணவர்களை பத்திரமாக தாய் நாட்டிற்கு மீட்டுக் கொண்டு வர முடிந்தது. தற்போது நடைபெறும் ஜி20 மாநாட்டில் சர்வதேச அரங்கில் இந்தியா வளர்ச்சிக்கான வழிகாட்டும் என பிற நாடுகள் நம்புகின்றன.


உலகத்தில் மிகப் பெரும் பிரச்சனையாக வறுமை இருந்து கொண்டிருக்கும் போது பல நாடுகள் உணவை வீணாக்கிக் கொண்டிருக்கின்றன. எனவே சர்வதேச வளர்ச்சிக்கான பாதையை இந்தியா வகுக்க உள்ளது. 2047 ஆம் ஆண்டில் இந்தியாவின் 100வது சுதந்திர தின கொண்டாட்டத்தின் போது இந்தியா உலக நாடுகளுக்கு தலைமை தாங்கும் வகையில் இருக்க வேண்டும் என பாரத பிரதமர் குறிக்கோள் வைத்துள்ளார். அதற்கு நாம் ஒவ்வொருவரும் உறுதுணையாக இருக்க வேண்டும்.




இந்திய நாட்டின் இந்த வளர்ச்சியை நாம் காணும் காலத்தில் இருப்பதை எண்ணி பெருமை கொள்ள வேண்டும். நாம் செய்யும் ஒவ்வொரு செயலிலும் இந்தியாவை முன்னேற்றுவதற்காக ஒரு செயலை நாம் செய்ய வேண்டும். சில ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் மிகப்பெரிய பிரச்சினையாக இருந்த திறந்தவெளி கழிப்பறைகள் இன்று முற்றிலுமாக அகற்றப்பட்டுள்ளன. தற்போதைய பாரதப் பிரதமர் அவர்களின் ஆட்சி காலம் என்பது அரசை சார்ந்து மக்கள் இருக்க வேண்டும் என்ற நிலையை மாற்றி மக்களால் நடத்தப்படும் அரசாகவே இந்த அரசு உள்ளது.


சில ஆண்டுகளுக்கு முன்பு வெறும் 500 ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் மட்டுமே இருந்தன. இன்று ஆயிரத்திற்கு மேற்பட்ட ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் உள்ளன. இவை அனைத்தும் இளைஞர்களால் நிறுவப்பட்டு நடத்தப்பட்டு வருகிறது. பல்வேறு தொழில்நுட்பங்களை மாணவர்கள் உருவாக்கி வருகின்றனர். இந்தியாவில் புதிய நம்பிக்கை உருவாக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் ஒரே குடும்பமாக பார்க்கப்படுகிறது. முந்தைய காலகட்டத்தில் கல்வி மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் நாடு முன்னேறி இருந்தாலும், அவை அனைத்துமே ஐந்தாண்டு கால அரசியல் திட்டமாகவே இருந்தன. எதிர்காலத்திற்கான குறிக்கோளை உடைய அரசாக தற்போதைய அரசு உள்ளது.


உதாரணமாக தமிழ்நாடு இந்திய அளவில் வளர்ந்த மாநிலமாகவே உள்ளது. ஆனால் அதன் மண்டல வளர்ச்சியை பார்க்கும் போது சரிசம விகிதம் இருப்பதில்லை. தெற்கு, மேற்கு, கிழக்கு, வடக்கு ஆகியவற்றின் வளர்ச்சியில் சரிசம நிலை இல்லை. ஆனால் தற்போது தமிழ்நாடு, திரிபுரா என எந்த மாநில பேதமும் இன்றி மருத்துவம், கல்வி, சுகாதாரம், மின்சாரம், எரிசக்தி என அனைத்தும் அனைவருக்கும் வழங்கப்படுகிறது. ஐந்து லட்சம் ரூபாய் மருத்துவ காப்பீட்டை தரும் ஆயுஸ்மான் பாரத் திட்டம் அனைத்து மாநிலங்களிலும் சிறப்பாக செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்த மாற்றங்கள் தான் இந்தியா ஒரே குடும்பம் என உணர்த்த வைக்கிறது. மொழியாகவும் மதமாகவும் இனமாகவும் பிரிந்து இருந்ததால் அரசியல் கட்சியினர் லாபமடைந்தனர். ஆனால் தேசம் பின்னோக்கி சென்றது. தற்போது அந்த நிலை மாற்றப்பட்டுள்ளது. குறிப்பாக பாலின பேதம் தகர்க்கப்பட்டு ராணுவம் உட்பட அனைத்து துறைகளிலும் பெண்கள் சாதித்து வருகின்றனர். பெண்களுக்கான சுகாதாரம், ஊட்டச்சத்து, பாதுகாப்பு சிறப்பாக வழங்கப்படுகிறது. 


அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா தலைசிறந்த நாடாக உருவாகும் சூழலில் நமது கலாச்சாரம் மற்றும் ஆன்மீக கூறுகளையும் இழந்து விடாமல் அதற்கு மதிப்பளித்து அதனை போற்றும் வகையில் நாம் வளர்ந்திருக்க வேண்டும். அந்த வகையில் கலாச்சார கூறுகளை பாதுகாப்பதில் தமிழகம் சிறந்த மாநிலமாக விளங்குகிறது. தமிழ்நாட்டைச் சேர்ந்த திருவள்ளுவர், நாயன்மார்கள், ஆழ்வார்கள் என பலரும் சங்க இலக்கியத்தை பாதுகாத்து நமது பாரம்பரியமிக்க கலாச்சார பண்பாடுகளை பாதுகாத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது" எனத் தெரிவித்தார்.