திருப்பூரில் இருந்து ஜார்கண்ட் மாநிலம் செல்வதற்காக ஜார்கண்ட் மாநில ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் கோவை விமான நிலையத்திற்கு வருகை தந்தார். அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், ”ஜாதிகளில் உயர்வு தாழ்வு ஒரு போதும் இல்லை.  இந்து மதமோ, சனாதான தர்மமோ இதை வலியுறுத்துவதில்லை. பல்வேறு தொழில்களை செய்து கொண்டிருந்தவர்கள் ஜாதிகளாகப் பிரிந்து இருக்கிறார்கள். காலம் காலமாக இருக்கின்ற பாரம்பரியத்தை குறை சொல்வது என்பது திமுகவிற்கு வாடிக்கையாகி விட்டது. அவர்கள் இன்னும் 1952 லேயே இருக்கிறார்கள். காலம் மாறி வருகிறது,  பாரம்பரியமும் அவருடைய பெருமையும் காக்கப்பட வேண்டும் என தமிழர்கள் விரும்புகின்றார்கள். தேவையில்லாதவற்றை தொடாமல் தமிழகத்தின் முன்னேற்றத்தில் திமுக அரசு கருத்தைச் செலுத்துவதும், கவனத்தைச் செலுத்துவதும் திமுகவிற்கு நல்லது, தமிழ்நாட்டிற்கும் நல்லது. திமுகவில் எல்லோரும் சேர்ந்து தான் பாரம்பரியத்துக்கு எதிராக இருக்கிறார்கள். உதயநிதி பேசினால் அதை எதிர்த்து பேசக்கூடிய அளவிற்கு இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் இருப்பார் என எதிர்பார்ப்பது சத்தியம் இல்லை. ஒட்டு மொத்த திமுகவும் தன்னை மாற்றிக் கொள்ள வேண்டும்.


அதிபராக வேண்டும் என மோடி சொன்னாரா? அடிக்கடி தேர்தல் என்பது ஒட்டுமொத்த வளர்ச்சியை பாதிக்கும். எல்லா அமைப்புகளுக்கும் ஓரே நேரத்தில் தேர்தல் என்பது இந்த தேசத்தினுடைய முன்னேற்றத்தை விரிவுபடுத்தும். ஒரே நாடு ஒரே தேர்தலில் என்ன குறை கண்டு வேண்டாம் என்று சொல்கிறார்கள்? ஒரே நேரத்தில் தேர்தல் நடந்தால் முடிவுகளை எடுப்பதற்கு எளிதாக இருக்கும். எந்த கட்சியாக இருந்தாலும், எந்த தலைவராக இருந்தாலும் அது சாத்தியம் அடிக்கடி தேர்தல் வரும் பொழுது, பல்வேறு விதமான சமாதானங்களை செய்ய வேண்டிய நிலை இருக்கும். அது நாட்டின் வளர்ச்சிக்கு உகந்ததாக இருக்காது.


திமுக அரசு ஆளுநரிடம் பகை வளர்த்துக் கொண்டிருக்கிறது. காசு எதிர்பார்க்காத நல்ல ஆளுநர் இவர். இதைவிட என்ன வேண்டும் தமிழ் மீதும், தமிழர் மீதும், தமிழகத்தின் மீதும் அக்கறை கொண்டிருக்க கூடிய ஆளுநர் தமிழகத்திற்கு கிடைத்திருக்கிறார். இவர்கள் தேர்தல் வாக்குறுதி கொடுத்தனர் என்பதற்காக நீட் விலக்கை அவர் அமல்படுத்த முடியுமா? முடியாது என்று தெரிந்தே நீட் விலக்கு கொண்டு வருவதாக கூறி விட்டு, இப்போது பழியை ஆளுநர் மீது தூக்கிப் போடுகிறார்கள். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டோம் என்பது, நமக்கு சர்வாதிகாரத்தை தந்து விடாது. அரசியல் சாசனத்தில் எது சொல்லப்பட்டு இருக்கிறதோ, உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலுக்கு உட்பட்டு எது இருக்கிறதோ அது மட்டும் தான் கவர்னரால் முடியும்” எனத் தெரிவித்தார்.


சனாதானத்தை ஒழிப்போம் என்பதில் உறுதியாக இருப்பதாக உதயநிதி ஸ்டாலினின் கருத்து குறித்த கேள்விக்கு, “திமுக ஒழிய போகின்றது என்பதை இது காட்டுகின்றது” எனக் காட்டதாக பதில் அளித்தார். தொடர்ந்து பேசிய அவர், “சிலிண்டர் விலை குறைப்பு என்பதை ஏழை மக்கள் காலம் காலமாக கேட்டு வருகிறார்கள். அதற்கு உரிய நேரம் வரும் பொழுது பொருளாதார நிலையை மனதில் வைத்து, அதன் பலன் சென்றடைய வேண்டும் என மோடி சிலிண்டர் விலையை குறைத்துள்ளார். இதில் அரசியல் செய்கின்றனர் என்றால், இவர்களுக்கு மக்கள் நலனில் அக்கறை இல்லை என்று புரிந்து கொள்ள முடிகின்றது.  சீமானை போன்றவர்களுக்கு சமுதாயத்தின் மீது எங்கே இருக்கிறது அக்கறை? இஸ்லாமியர்களை விடுதலை செய்கிறார்களா? இஸ்லாமிய தீவிரவாதிகளை விடுதலை செய்கிறார்களா? என்பதற்கு  கூட வித்தியாசம் தெரியாமல் இருப்பது தமிழகத்தின் நலனுக்கு மிகப்பெரிய கேடு இந்தியா கூட்டணியில் எல்லா கட்சிகளும் ஒன்றாகி கொண்டு இருக்கின்றார்கள் என கேட்கின்றீர்கள், இது மோடி, அமித்ஷா, நட்டா ஆகியோருக்கு தெரியும். இதை நான் சொல்ல வேண்டியதில்லை. அரசியல் தொடர்பான இந்த கேள்வியை பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலையிடம் கேளுங்கள்” எனத் தெரிவித்தார்.