கோவையில் தனியார் குடோனில் பதுங்கியுள்ள சிறுத்தை கூண்டு வரை வந்தும் சிக்காமல் நான்காவது நாளாக வனத்துறையினருக்கு போக்கு காட்டி வருகிறது. கோவை குனியமுத்தூர் அருகேயுள்ள சுகுணாபுரம், மைல்கல் சுற்றுவட்டார பகுதிகளில் சிறுத்தை நடமாட்டம் இருந்து வந்தது. சிறுத்தை குடியிருப்பு பகுதிகளில் நடமாடியதால் பொது மக்கள் அச்சம் அடைந்தனர். சிறுத்தை நடமாட்டம் குறித்து அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்து வந்தனர். இதையடுத்து வனத்துறையினர் கூண்டு அமைத்தும், கண்காணிப்பு கேமரா பொருத்தியும் சிறுத்தையை பிடிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் பி.கே.புதூர் பகுதியில் உள்ள பழைய குடோன் ஒன்றில், கடந்த 17 ம் தேதி சிறுத்தை ஒன்று பதுங்கியிருப்பதாக அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து வனத்துறையினர் மேற்கொண்ட சோதனையில் சுமார் மூன்று வயது மதிக்கத்தக்க ஆண் சிறுத்தை பதுங்கி இருப்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து சிறுத்தையை பிடிக்கும் பணியில் வனத் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.




குடோன் நுழைவு வாயிலில் இரண்டு கூண்டுகள் அமைத்து அதற்குள் மாமிசம் வைத்து சிறுத்தையை கூண்டிற்குள் வரவழைத்து பிடிக்க வனத்துறையினர் திட்டமிட்டனர். ஆனால் முதல் நாள் முயற்சி வெற்றி பெறாத நிலையில், கடந்த இரண்டு நாட்களாக சிறுத்தையை பிடிப்பதற்கான பணி தொடர்ந்தது. பல்வேறு முயற்சிகளை வனத் துறையினர் மேற்கொண்ட நிலையிலும், சிறுத்தை கூண்டில் சிக்காமல் போக்கு காட்டியது. இதனால், மின் விளக்குகள் அமைத்து இரவு நேரத்தில் சிறுத்தையை பிடிக்கும் பணியில் ஈடுபட்டனர். குடோனில் சிறுத்தையின் நடவடிக்கைகளை கண்காணிக்க, ட்ரோன் கேமரா பறக்க விடப்பட்டது. ட்ரோன் கேமரா பழைய கழிவுப் பொருட்களில் சிக்கிக் கொண்டதால் அந்த முயற்சி தோல்வியில் முடிந்தது. இதனால் 10 அடி உயர கம்பத்தில், சிசிடிவி கேமரா பொருத்தி, கண்காணிக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டனர். இன்று நான்காவது நாளாக சிறுத்தையை பிடிக்கும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.




இதனிடையே சிசிடிவி கேமராக்களில் இன்று அதிகாலையில் சிறுத்தையின் நடவடிக்கைகள் பதிவானது. அந்த காட்சிகளை வனத்துறையினர் வெளியிட்டுள்ளனர். அதில் எவ்வித பயமுமின்றி சிறுத்தை சர்வ சாதாரணமாக குடோனுக்குள் உலாவும் காட்சிகள் பதிவாகியுள்ளது. மேலும் சிறுத்தையை பிடிக்க வைக்கப்பட்ட கூண்டு வரை வந்த சிறுத்தை, அதற்குள் செல்லாமல் கடந்து சென்றதும் தெரியவந்தது. சிறுத்தையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்காமல் கூண்டு வைத்து பிடிக்க வனத்துறையினர் திட்டமிட்டுள்ளதால், சிறுத்தையை பிடிப்பதில் காலதாமதம் ஏற்பட்டு வருகிறது. குடோனில் 6 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி சிறுத்தையின் நடமாட்டத்தை வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.