சென்னையில் நடைபெற்ற நிகழ்சி ஒன்றில் பேசிய அமைச்சர் உதயநிதி, “சனாதனம் சமத்துவத்திற்கும், சமூக நீதிக்கும் எதிராக உள்ளது. அது முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும்” என பேசியிருந்தார். இதன் மூலம் இந்து மக்களுக்கு எதிரான இனப்படுகொலைக்கு உதயநிதி அழைப்பு விடுப்பதாக பாஜக குற்றம்சாட்டியது. தொடர்ந்து, பாஜகவை சேர்ந்த பல தலைவர்களும், இந்து அமைப்பினரும் உதயநிதிக்கு கடும் எதிர்ப்புகளை பதிவு செய்து வருகின்றனர்.


மேலும் உதயநிதி ஸ்டாலின் மீது வழக்கும் தொடரப்பட்டுள்ளது.‌ இதனிடையே உத்திர பிரதேச சாமியார் பரமஹம்ஸ் ஆச்சாரியா அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். மேலும் உதயநிதி ஸ்டாலின் தலைக்கு ரூபாய் 10 கோடி விலை நிர்ணயம் செய்தும், அவரது புகைப்படத்தை தீ வைத்து கொளுத்தியது சர்ச்சையை ஏற்படுத்தியது.


உத்தர பிரதேச சாமியார் பரமஹம்ஸ் ஆச்சாரியாவை கண்டிக்கும் விதமாக தமிழக முழுவதும் திமுகவினர் பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டம் பொள்ளாச்சி புதிய பேருந்து நிலையம் முன்பு  திமுகவினர் சாமியார் புகைப்படத்தை செருப்பில் அடித்தும், தீ வைத்து எரித்தும் எதிர்ப்பை தெரிவித்தனர். சாமியாருக்கு எதிராக கோஷங்கள் எழுப்பிய திமுகவினர், சாமியார் உருவ பொம்மைக்கு தீ வைத்து எரித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.




இதேபோல உத்தர பிரதேச சாமியார் பரமஹம்ஸ் ஆச்சாரியா மீது சட்டரீதியான குற்ற வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். அப்போது பேசிய தபெதிக பொதுச்செயலாளர் கு.இராமகிருட்டிணன், ”அந்த சாமியார் மிகவும் ஆணவத்துடன் பேசி உள்ளது, கொலை வெறி அறிவிப்பு. கொலையை தூண்டுவதற்கு சொல்லப்பட்ட செய்தி. கலவரத்தை உருவாக்கும் செய்தி. எனவே உடனடியாக அந்த சாமியார் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். உதயநிதி ஸ்டாலின் சனாதனத்தைப் பற்றி என்ன கருத்து கூறி இருக்கிறார் என்று விளக்கம் அளித்தாலும், அதனை அரசியலுக்கு தவறாக பயன்படுத்துகின்ற நோக்கத்தோடு அமித்ஷா உட்பட அகில இந்திய பாஜகவினர் தவறான பிரச்சாரத்தை உதயநிதி மீது செய்து வருகிறார்கள்.


சனாதனம் என்பது மூடநம்பிக்கையை பரப்புகிறது. பெண்களின் உரிமையை பறிக்கிறது. பெண்களை அடிமைப்படுத்துகிறது, சாதி வேறுபாடு வர்ணங்களை கற்பிக்கிறது. எனவே அப்படிப்பட்ட சனாதனம் வேண்டாம் என்ற கருத்தை தான் தெளிவாக உதயநிதி பதிவு செய்துள்ளார். வடநாட்டில் இது போன்ற அநாகரீகமான செயல் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு கலைஞர் கருணாநிதி இருக்கும் பொழுது நடைபெற்றது. கலைஞரின் தலைக்கு ஒரு கோடி ரூபாயை அப்போது ஒரு சாமியார் அறிவித்தார். ஆனால் அந்த சாமியார் கலைஞருக்கு முன்பே உயிரிழந்து விட்டார். சனாதனத்தை உதயநிதி புதிதாக விமர்சிக்கவில்லை. அம்பேத்கர் தொடங்கி அரசியல் சட்டமே சனாதனத்தின் படி பேசக்கூடாது, எனவும் எழுதக்கூடாது எனவும் கூறுகின்ற நிலையில் சனாதனத்தை விமர்சிப்பதும் எதிர்ப்பதும் இந்தியாவில் வாடிக்கையாக உள்ளது.




அனைத்து மாநிலங்களிலும் அமைச்சர் உதயநிதி மீது புகார் மனுக்கள் அளிக்கப்பட்டு வருகிறது ஆனால் தமிழ்நாட்டில் மட்டும்தான் சாமியாரின் மீது நாங்கள் புகார் மனு அளித்துள்ளோம். இனி அனைத்து மாவட்டங்களிலும் தொடர்ந்து அளிக்கப்படும். கடந்த காலங்களில் அம்பேத்கர் பெரியார் இதை எதிர்த்து போராட்டத்தை நடத்தியுள்ளார்கள்.   சனாதனத்தை ஆதரிப்போம் என்று சொன்னாலே தீண்டாமையை ஆதரிக்கின்றோம் என்று அர்த்தம். பெண்களை அடிமைப்படுத்துவோம் என்று அர்த்தம். சூத்திரனுக்கு எதைக் கொடுத்தாலும் கல்வியை தர வேண்டாம் என்று சொல்லுவது சனாதனம் எனவும் கல்வி மறுப்பை சரி என்று சொல்லுவது சனாதனம். இந்தியா கூட்டணி என்பது, அரசியலுக்காக மோடியின் மக்கள் விரோத செயல்களுக்காக உருவாக்கப்பட்டது. அந்த வகையில் அவர்கள் இந்த கருத்திற்கு மாறுபடலாம். தமிழ்நாட்டில் பாஜகவை ஆதரிக்கும் அதிமுக கூட வடநாட்டில் சனாதனத்தை ஆதரிப்பது போல இங்கே ஆதரிக்க முடியாது” எனத் தெரிவித்தார்.