கோவை விமான நிலையத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், ”கர்நாடகாவில் காங்கிரஸ் தேர்தல் வெற்றிக்கு முதல்வர் ஸ்டாலின் செல்கின்றார். ஆனால் காவிரி தண்ணீர் விவகாரத்தில் உரிய நெருக்கடியை அந்த கட்சிக்கு கொடுக்கவில்லை. இஸ்லாமிய சிறைக் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும். திமுக, அதிமுக உள்ளூர் எதிரி, பா.ஜ.க, காங்கிரஸ் வெளியூர் எதிரி. முதலில் வெளியூர் எதிரிகளை உள்ளே விடுவது தவறு. உள்ளூர் எதிரிகளை எப்பவேணும் என்றாலும் பார்த்து கொள்ளலாம்” எனத் தெரிவித்தார்.


நீட் விவகாரம் குறித்த கேள்விக்கு, “தரமான மருத்துவரை தேர்வு செய்ய அமெரிக்க நிறுவனத்தை எதற்கு அழைக்க வேண்டும்? எல்லா மாநிலங்களுக்கும் தேர்விற்கு சூப்பர்வைசர்கள் வருகிறார்கள். அவர்கள் வாசலில் நின்று கொண்டு மாணவர்களை பார்த்து எழுத அனுமதிக்கிறார்கள். தேர்வு எழுதியவனை கேள்வி கேட்மால் பதில் சொல்ல தெரியவில்லை” எனப் பதிலளித்தார். தொடர்ந்து பேசிய அவர், “ஐந்து வயதில் இருந்து அரசியல் களத்தில் இருக்கிறேன். அண்ணாமலை அதிகாரியாக இருந்து வந்தவர். கட்சத்தீவு, காவிரி, முல்லை பெரியார் இதில் எல்லாம்  உங்கள் நிலைப்பாடு என்ன என  அண்ணாமலை சொல்ல வேண்டும். தமிழ் தேசியம் ஒன்று இல்லை என்றே சொன்னால், அடிப்படையில் தமிழ்நாடு என்றாலே தமிழ் தேசியம் தானே? தமிழ் தேசியம் என்று இல்லை என்றால் மோடி போகும், ஒவ்வொரு நாட்டிலும் போய் தமிழைப் பற்றி ஏன் பேசுகிறார்? கர்நாடகாவில் இருக்கும் பொழுது கன்னடத்தில் பிரவுட் கன்னடியன் எனப் பேசி விட்டு, கர்நாடக பாஜக தலைவராக வேண்டியதுதானே? எதற்கு இங்கே வந்தீர்கள்? நான் மோடி, அமித்ஷா ஆகியோருடன் சண்டை போட்டுக் கொண்டிருக்கும் பொழுது குறுக்க மறுக்க எதற்காக வருகிறீர்கள்? ஓரமாக நில்லுங்கள்.


என் கட்சியில் நான் முடிவு எடுக்கிறேன், நீங்கள் முடிவு எடுக்க முடியுமா? இந்த கட்சி நான் உருவாக்கியது. நீங்கள் இன்னும் எத்தனை நாளைக்கு பாஜக தலைவராக இருப்பீர்கள் ரெண்டு வருஷம் இருப்பீங்களா? பொன் ராதாகிருஷ்ணன் போல இதுக்கு முன்னாடி இருந்த பாஜக தலைவர்கள் எல்லாம் எங்கே? அண்ணாமலை தமிழ் நாட்டுக்கு ஒரு மேஸ்திரி, நான் அப்படி கிடையாது. நான் ராஜா மாதிரி என்னால் முடிவு எடுக்க முடியும். நாடாளுமன்ற தேர்தலில் 20 தொகுதியில் ஆண்களையும், 20 தொகுதியில் பெண்களையும் நிறுத்த என்னால் முடியும். திமுக அதிமுகவால் இது போன்ற முடிவு எடுக்க முடியுமா? 2024 மோடி வந்தால் இந்தியாவே இருக்காது. இந்தியாவில் ராணுவம், தொடர்வண்டி, கல்வி, மருத்துவம், இன்சூரன்ஸ் என எல்லாம் தனியாருக்கு கொடுக்கப்பட்டு விட்டது. இந்திய நாட்டுக்கு என விமானம் கூட கிடையாது. காங்கிரஸ்க்கும், பிஜேபிக்கும் நாட்டை விற்பதில் தான் போட்டி. இதில்  மோடி நன்றாக வியாபாரம் செய்கிறார். ஒரு இரண்டு, மூன்று நாளைக்கு என்னை விட்டு விடுங்கள்” எனத் தெரிவித்தார்.