கோவை குனியமுத்தூர் பகுதியில் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “கள்ளக்குறிச்சி உயிரிழப்பு விவகாரம் 63 பேர் உயிரிழந்து உள்ளனர். அதன் உண்மை கண்டறிய அரசியல் கட்சிகள் பல்வேறு ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.


பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவின் கோரிக்கை சட்டமன்றத்தில் நிராகரிக்கப்பட்டுள்ளது. அதிமுகவின் கோரிக்கையை ஏற்க வேண்டும். 63 பேர் உயிரிழப்பு குறித்து விவாதிக்க வேண்டும். அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் சஸ்பென்ட் திரும்ப பெற வேண்டும்.  முழுமையான விவாதம் தான் சரியான பாதைக்கு கொண்டு செல்ல முடியும். முதல்வர் கவலை கொள்வது மட்டும் போதாது. நிரந்தர தீர்வு வேண்டும்.


மது விலக்கே தீர்வு


கள்ளக்குறிச்சி விவகாரத்தில் புதிய தமிழகம் கட்சி சார்பிலும் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளோம். தமிழகத்தில் பூரண மதுவிலக்கு ஒன்றே தீர்வாகும். ஜீலை 6ம் தேதி மதுவிலக்கு குறித்து ஆலோசனை கூட்டம் என் தலைமையில் நடைபெறவுள்ளது. அதில் பங்கு பெறும் அமைப்புகள் குறித்து விரைவில் தெரிவிக்கிறேன். நாடாளுமன்றத்தில் இல்லாத மரபுகளை தமிழகத்தை சேர்ந்த உறுப்பினர்கள் ஏற்படுத்தியுள்ளனர். உறுதிமொழி தாண்டி ஒருசிலர் பெயர்கள், முழக்கம் எழுப்பி உள்ளனர். இது பாலஸ்தீனம், இந்து இரஸ்டிரம் போன்ற முழக்கம் வருவதற்கு காரணமாக அமைந்து உள்ளது. கோடிக்கணக்கான மாணவர்களின் எதிர்க்கலாம் கேள்வி குறியாக மாற்றும் நிலை இருக்க கூடாது. இப்போது உள்ள தேர்வு அமைப்பு கலைக்கப்பட வேண்டும். சட்டத்தின் அடிப்படையில் தேர்வு ஆணையம் இருக்க வேண்டும்.


நீட் தேர்வு விவகாரம்


நீட் தேர்வை முதலில் ஆதரித்தவன் நான். ஆனால் அது வணிக நோக்கில் செயல்பட தொடங்கி உள்ளது. ஆனால் மாணவர்களின் உண்மையான திறமை அடிப்படையில் செயல்பட வேண்டும். நீட் தேர்வில் மோசமான நிலை உருவாகி உள்ளது. நீட் பயிற்சி நிலையங்கள் விதிமுறைகள் மீறி செயல்படுகின்றனர். நீட் தேர்வுகளில் வெற்றி பெறுபவர்களின் புகைப்படங்களை தடை செய்ய வேண்டும்.  நீட் தேர்வில் கோடிக்கணக்கில் செலவு செய்வதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். ஆங்கிலத்தில் இருந்து சட்டங்கள் ஹிந்தியில் உள்ளது. அனைத்து மொழி பேசும் மக்கள் பேசும் அளவிற்கு அதை வழிவகை செய்ய வேண்டும்.  சட்டத்தின் பெயர்கள் ஹிந்தியில் அனைவரும் உச்சரிக்க முடியாது. வழக்கறிஞர்கள் கோரிக்கைகள் நியமானது” எனத் தெரிவித்தார்.