கோவையை தொடர்ந்து நீலகிரி, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் அம்மா உணவகங்களில் திமுக சார்பில் இலவசமாக உணவு வழங்கப்படும் என அமைச்சர்கள் சக்கரபாணி மற்றும் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளனர்.


ஏழை, எளிய மக்களின் பசியாற்றுவதில் அம்மா உணவகங்கள் பெரும் பங்காற்றி வருகின்றன. கொரோனா தொற்று பரவல் காரணமாக கடைகள் உள்ளிட்டவை அடைக்கப்பட்டுள்ள நிலையில், அம்மா உணவகங்கள் பலருக்கும் பசியாற உதவி வருகின்றன. இந்நிலையில் கொரோனா ஊரடங்கில் சாலைகளில் வசிப்போர், ஏழை எளிய மக்கள் மற்றும் பொதுமக்கள் பசியாறும் வகையில் கோவை மாவட்டத்தில் உள்ள 8 அம்மா உணவகங்களிலும் திமுக சார்பில் இன்று முதல் இலவசமாக உணவு வழங்கப்பட்டு வருகிறது. கோவை மாநகராட்சி பகுதிகளில் 5 அம்மா உணவகங்களும், பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், வால்பாறை ஆகிய பகுதிகளில் உள்ள 3 உணவகங்களும் செயல்பட்டு வருகின்றன.

கோவை மசக்காளிபாளையம் பகுதியில் உள்ள அம்மா உணவகத்தில் உணவு மற்றும் உணவுப் பொருட்கள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி மற்றும் வனத் துறை அமைச்சர் ராமச்சந்திரன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். மேலும் ஏழை, எளிய மக்களுக்கு உணவு வழங்கி இலவச உணவு வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தனர். பின்னர் அமைச்சர்கள் சக்கரபாணி மற்றும் ராமச்சந்திரன் இருவரும் கூட்டாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தனர். அப்போது பேசிய அவர்கள், ”கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்று உச்சத்தை தொட்டுள்ள நிலையில், தடுப்பு நடவடிக்கைகளில் கோவை  மாவட்டத்துக்கு என  தனி ஐஏஎஸ் அதிகாரி நியமிக்கப்பட்டு உள்ளார். தடுப்பு நடவடிக்கைகளை பார்வையிட சுகாதாரத்துறை அமைச்சர் மற்றும் சுகாதாரத் துறைச் செயலாளார் ஆகியோர் கோவை வர உள்ளனர்.  கோவை மாவட்டத்தில் உள்ள 15 அம்மா உணவகங்களில் ஏழை எளிய மக்கள் பசியாறும் வகையில் திமுக சார்பில் உணவு வழங்கப்பட்டு வருகிறது. தொற்று பாதிப்பு அதிகமுள்ள நீலகிரி, திருப்பூர் மற்றும் ஈரோடு ஆகிய மாவட்டங்களில் உள்ள அம்மா உணவகங்களிலும் திமுக சார்பில் இலவசமாக உணவு வழங்கப்படும்” என அவர்கள் தெரிவித்தனர்.


இதையடுத்து கோவை மாவட்டம் சின்ன வேடம்பட்டி, பெரியநாய்க்கன் பாளையம் பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள புதிய கொரோனா சிகிச்சை மையங்களை அமைச்சர்கள் துவக்கி வைத்தனர். மேலும் ஆரம்ப சுகாதார நிலையங்கள், தனியார் தொழிற்சாலைகளில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி மையங்களிலும் அமைச்சர்கள் ஆய்வு செய்தனர்.


சட்டமன்ற தேர்தல் வெற்றிக்கு பின்னர் அம்மா உணவகத்தின் மீது திமுகவினர் சிலர் தாக்குதல் நடத்தியதும், பின்னர் அவர்கள் கட்சியில் இருந்து இடை நீக்கம் செய்யப்பட்டதும் நடைபெற்றது. இந்நிலையில் மக்களின் பசியாற்ற அதிமுக ஆட்சியில் துவக்கப்பட்ட அம்மா உணவகங்களில் திமுகவினரே இலவசமாக உணவு வழங்க முன் வந்திருப்பதை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.