கோவையில் பெரியார் சிலை அவமதிப்பு - கண்டனம் தெரிவித்து பல்வேறு அமைப்புகள் ஆர்ப்பாட்டம்

அடையாளம் தெரியாத நபர்கள் பெரியார் சிலைக்கு செருப்பு மாலை அணிவித்தும், காவி பொடி தூவியும் அவமரியாதை செய்த பின்னர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

Continues below advertisement

கோவை வெள்ளலூர் பகுதியில் உள்ள பெரியார் சிலைக்கு செருப்பு மாலை அணிவித்தும், காவி பொடி தூவியும் அவமரியாதை செய்யப்பட்டதை கண்டித்து பல்வேறு அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கோவை வெள்ளலூர் பேருந்து நிலையம் பகுதியில் பெரியார், அண்ணா, காமராஜர், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரின் சிலைகள் உள்ளன. அப்பகுதியில் திராவிடர் கழகத்தினர் நடத்தி வரும் பகுத்தறிவு படிப்பகம் முன்பாக பெரியார் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த 9 ம் இரவு கொரோனா பரவல் காரணமாக ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு அமலபடுத்தப்பட்டு இருந்ததால், அப்பகுதியில் மக்கள் நடமாட்டம் இன்றி காணப்பட்டுள்ளது. இதனைப் பயன்படுத்தி நள்ளிரவில் அடையாளம் தெரியாத நபர்கள் பெரியார் சிலையை அவமரியாதை செய்துள்ளனர். பெரியார் சிலைக்கு செருப்பு மாலை அணிவித்தும், காவி பொடி தூவியும் அவமரியாதை செய்த பின்னர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

Continues below advertisement


பெரியார் சிலை அவமதிப்பு செய்யப்பட்டு இருப்பதை பார்த்த அப்பகுதி மக்கள், திராவிடர் கழகத்தினருக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து பெரியார் சிலை முன்பு திராவிடர் கழகத்தினர் பெரியார் சிலையை அவமரியாதை செய்தவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கக் கோரி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்து வந்த போத்தனூர் காவல் துறையினர், உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை அடுத்து திராவிடர் கழகத்தினர் போராட்டத்தை கைவிட்டனர். பெரியார் சிலை அவமதிக்கப்பட்டது குறித்து போத்தனூர் காவல் நிலையத்தில் திராவிடர் கழகத்தினர் புகார் அளித்தனர். இந்த புகாரின் பேரில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் பெரியார் சிலைக்கு அருகில் பொருத்தப்பட்டு இருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை அடிப்படையில் அடையாளம் தெரியாத நபர்களை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.


இதனிடையே பெரியார் சிலை அவமதிக்கப்பட்டதற்கு பல்வேறு அரசியல் கட்சியினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யக்கோரி திக, தபெதிக உள்ளிட்ட பல்வேறு அமைப்பினரும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் வெள்ளலூர் பகுதியில் உள்ள அனைத்துக் கட்சி சார்பில் பெரியார் சிலையை அவமதித்தவர்களை மீது கடும் நடவடிக்கை எடுக்கக் கோரி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் கழகம், திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் கலந்து கொண்டனர். இந்துத்துவா அமைப்பை சேர்ந்தவர்கள் பெரியார் சிலைக்கு அவமரியாதை செய்து இருப்பதாகவும், இதேபோல தொடர்ந்து பெரியார் சிலைகள் அவமதிக்கப்பட்டு வருவதாகவும் கூறிய ஆர்ப்பாட்டக்காரர்கள், குற்றவாளிகள் மீது காவல் துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தினர்.

 

பேஸ்புக் பக்கத்தில் தொடர

 

ட்விட்டர் பக்கத்தில் தொடர

 

யூடிபில் வீடியோக்களை காண

Continues below advertisement