கோவை அருகே உள்ள பூண்டி வெள்ளிங்கிரி ஆண்டவர் மலைக்கோவிலில், ஒரே நாளில் இரண்டாவது முறையாக பக்தர் மயங்கி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த சீனிவாசன் (47), சாமி தரிசனத்திற்காக வெள்ளிங்கிரி மலை ஏறியிருந்தார். அவர், போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட 3-வது மலைப் பாதையில் உள்ள ‘வாய்ச் சோலை’ பகுதியில் நேற்று மாலை சுமார் 6.45 மணியளவில் திடீரென மயங்கி விழுந்தார்.
இதுகுறித்து தகவல் கிடைத்த உடனேயே, ஆனைமலை புலிகள் காப்பகம் மற்றும் கோவை வனக்கோட்டத்தைச் சேர்ந்த வனத்துறையினர், டோலி தூக்கும் பணியாளர்களுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். உயிருக்கு போராடிக் கொண்டிருந்த சீனிவாசனை மீட்ட அவர்கள், டோலி மூலம் பாதுகாப்பாக பூண்டி மலையடிவாரத்திற்கு கொண்டு வந்து வருகின்றனர்.
இதற்கு முன்னதாக, இன்று காலை காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த சரவணன் என்ற பக்தரும் இதே 3-வது மலைப்பகுதியில் மயங்கிய நிலையில் மீட்கப்பட்டிருந்தார். ஒரே நாளில் இரு சம்பவங்கள் நிகழ்ந்துள்ளதால், மலையேறும் பக்தர்களிடையே அதிர்ச்சி நிலவுகிறது.
சம்பவம் குறித்து ஆலாந்துறை காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மலையடிவாரத்தில் மருத்துவக் குழுவினர் தயார் நிலையில் உள்ளனர்.
கோடை வெப்பம் மற்றும் ஆக்சிஜன் குறைபாடு காரணமாக இதுபோன்ற சம்பவங்கள் ஏற்படக்கூடும் என்பதால், பக்தர்கள் தேவையான முன்னெச்சரிக்கையுடன் மலையேற்றம் மேற்கொள்ள வேண்டும் என வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
