கோவை மாவட்டத்தில் கொரோனா பாதிப்புகள் குறைந்து வருகிறது. இருப்பினும் மற்ற மாவட்டங்களை விட கூடுதலாக பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன. இதன் காரணமாக தமிழ்நாட்டில் தினசரி கொரோனா பாதிப்புகளில் தொடர்ந்து முதலிடத்தில் நீடித்து வருகிறது. கோவையில் இன்று தினசரி கொரோனா பாதிப்பு 400 க்கும் கீழ் குறைந்துள்ளது. இன்று 385 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்புகள் உறுதியாகியுள்ளது. இதனால் கோவை மாவட்டத்தில் இதுவரை கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை இரண்டு இலட்சத்து  23 ஆயிரத்து 277 ஆக உயர்ந்துள்ளது. மருத்துவமனைகள் மற்றும் சிகிச்சை மையங்களில் 3651 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். குணமடைபவர்களின் எண்ணிக்கை குறைவதால், சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இன்று கொரோனா தொற்றில் இருந்து 291 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால்  குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 2 இலட்சத்து 17  ஆயிரத்து 541 பேராக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றால் இன்று 4 பேர் உயிரிழந்தனர். இதனால் கோவை மாவட்டத்தில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2085 ஆக உயர்ந்துள்ளது. கோவையில் கொரோனா தொற்று விகிதம் 3.8 சதவீதமாக குறைந்துள்ளது.


ஈரோடு,  திருப்பூர், நீலகிரி நிலவரம்


ஈரோடு மாவட்டம் தினசரி கொரோனா பாதிப்பில் தொடர்ந்து இரண்டாவது இடத்தில் நீடித்து வருகிறது. ஈரோட்டில் இன்று தொற்று பாதிப்புகள் 300 க்கும் கீழ் குறைந்துள்ளது. இன்று 288 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. 256 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், 3647 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா தொற்று பாதிப்பால் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை. ஈரோடு மாவட்டத்தின் மொத்த கொரோனா பாதிப்புகள் 91082 ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 86826 ஆகவும், மொத்த உயிரிழப்புகள் 609 ஆகவும் உயர்ந்துள்ளது.


திருப்பூர் மாவட்டத்தில் இன்று தொற்று பாதிப்புகள் 200 க்கும் கீழ் குறைந்துள்ளது. இன்று 197 பேருக்கு இன்று கொரோனா பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. 258 பேர் குணமடைந்துள்ள நிலையில், 1765 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா தொற்று பாதிப்பால் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை. திருப்பூரின் மொத்த கொரோனா பாதிப்புகள் 84457 ஆகவும், குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 81911 ஆகவும் உள்ளது. உயிரிழப்புகளின் எண்ணிக்கை 781 ஆகவும் உள்ளது.


நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று பாதிப்புகள் சற்று அதிகரித்து வருகிறது. இன்று 110 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.112 பேர் குணமடைந்துள்ள நிலையில், 859 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தொற்று பாதிப்பால் இன்று ஒருவர் உயிரிழந்தார். நீலகிரி மாவட்டத்தின் மொத்த பாதிப்புகள் 28986 ஆகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 27961 ஆகவும் உயர்ந்துள்ளது. மொத்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை 166 ஆக உயர்ந்துள்ளது.


கொரோனா தொற்று பாதிப்புகள் அதிகமுள்ள மேற்கு மாவட்டங்களில், தொற்று பாதிப்புகள் குறைந்து வருவது மக்களிடையே நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.