கடந்த சில மாதங்களாக மற்ற மாவட்டங்களை காட்டிலும், கோவையில் கூடுதலாக கொரோனா தொற்று பாதிப்புகள் ஏற்பட்டு வந்தது. இதன் காரணமாக, தமிழ்நாட்டில் தினசரி கொரோனா பாதிப்புகளில் தொடர்ந்து முதலிடத்தில் நீடித்து வந்தது. இதனிடயே கடந்த இரண்டு நாட்களாக தினசரி கொரோனா பாதிப்பில் சென்னை முதலிடத்தை பிடித்தாலும், கோவையில் கொரோனா பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக ஊரடங்கில் ஊடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதேபோல கேரள மாநிலத்தில் இருந்து வருபவர்களுக்கு இரண்டு தவணை தடுப்பூசி அல்லது கொரோனா நெகட்டிவ் சான்று இருந்தால் மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது.


இந்நிலையில் கடந்த ஒன்றாம் தேதி முதல் 9 முதல் 12 ம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கு வகுப்புகள் துவங்கப்பட்டன. அதேபோல கடந்த ஒன்றாம் தேதி முதல் கல்லூரிகளும் இயங்கி வருகின்றன. கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடித்து வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் பள்ளியில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கொரோனா தொற்று பாதிக்காத வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பள்ளி, கல்லூரி வளாகம் மற்றும் வகுப்பறைகள் கிருமி நாசினி மூலம் சுத்தம் செய்யப்படுகிறது. சுகாதாரத் துறை சார்பில் மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கொரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டு வருகின்றன. கோவை சரவணம்பட்டியில் உள்ள கே.ஜி. செவிலியர் கல்லூரி விடுதியில் உள்ள 46 மாணவிகளுக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்ட சம்பவம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.




கோவை சரவணம்பட்டி அருகே கே.ஜி. செவிலியர் கல்லூரி மற்றும் விடுதி உள்ளது. கல்லூரி செயல்பட துவங்கியதை அடுத்து, பிற மாவட்டம் மற்றும் வெளி மாநில மாணவிகள் கல்லூரிக்கு வந்துள்ளனர். இந்நிலையில் கேரள மாநிலத்தில் இருந்து வந்து, விடுதியில் தங்கிப் படிக்கும் மாணவிகள் மூலமாக கொரோனா நோய்த் தொற்று பரவியதாக தெரிகிறது. இதையடுத்து கல்லூரி மாணவிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 46 மாணவிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து கொரோனா பாதித்த மாணவிகளுக்கு சிறப்பு மையங்களில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கேரள மாநிலத்தில் இருந்து வந்த மாணவிகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளாமல் விடுதியில் தங்க வைத்து, விதிமீறி செயல்பட்டதாக கல்லூரி நிர்வாகத்திற்கு கோவை மாநகராட்சி நிர்வாகம் 10 ஆயிரம் அபராதம் விதித்துள்ளது.


இதனிடையே அனைத்து கல்லூரி விடுதிகளிலும் வெளி மாநிலங்களில் இருந்து வந்து தங்கி படிக்கும் அனைத்து மாணவ, மாணவிகளும் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியிருப்பது அவசியம் என கோவை மாநகராட்சி ஆணையாளர் அறிவுறுத்தியுள்ளார். மேலும் மாணவர்களை 10 நாட்கள் விடுதிகளில் தனிமைப்படுத்த வேண்டுமெனவும், மாணவ, மாணவிகளை நேரடியாக விடுதிகளில் தங்க அனுமதிக்கும் கல்லூரி நிர்வாகங்கள் மீது உரிய ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படுவதுடன், அபராதம் விதிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.