கோவையில் இன்று 2056 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. மொத்த தொற்று பாதிப்பு 2 இலட்சத்தை நெருங்கியுள்ளது.


சென்னையை விட கோவையில் அதிக கொரோனா பாதிப்புகள் பதிவாகி வருகின்றன. இதனால் தமிழ்நாட்டில் தினசரி கொரோனா பாதிப்புகளில் கோவை முதலிடத்தில் நீடித்து வருதிறது. இதன் காரணமாக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்புகளும் அதிகரித்து வந்தது. மே மாதத்தில் உச்சத்தை அடைந்த தொற்று பாதிப்புகள் தற்போது படிப்படியாக குறைந்து வருகிறது. கொரோனா பாதிப்புகள்  குறைந்து வரும் நிலையில், குணமடைபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.


கோவை மாவட்டத்தில் இன்று 2056 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது. நேற்று 2236 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. நேற்றைய தினத்தை விட 180 பேருக்கு குறைவாக தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் இதுவரை கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்து 99 ஆயிரத்து 660 ஆக உயர்ந்துள்ளது. மருத்துவமனைகள் மற்றும் சிகிச்சை மையங்களில் 18 ஆயிரத்து 600 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று கொரோனா தொற்றில் இருந்து 4612 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால்  குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்து 79 ஆயிரத்து 371 பேராக உயர்ந்துள்ளது.அதேசமயம் கொரோனா தொற்றால் இன்று 31 பேர் உயிரிழந்தனர். இதனால் கோவை மாவட்டத்தில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1689 ஆக உயர்ந்துள்ளது.




கடந்த 1 ம் தேதி தினசரி பாதிப்பு 3332 பேருக்கு பாதிப்பு ஏற்பட்ட நிலையில், இன்று 1276 பேருக்கு குறைவாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அன்று 1936 பேராக இருந்த குணமடைந்தவர்கள் எண்ணிக்கை, இன்று 2676 பேர் கூடுதலாக குணமடைந்துள்ளனர். அன்று சிகிச்சையில் இருந்தவர்களின் எண்ணிக்கை 30 ஆயிரத்துக்கும் மேல் இருந்த நிலையில், இன்று 18 ஆயிரமாக குறைந்துள்ளது. இது கொரோனா பாதிப்பில் இருந்து கோவை படிப்படியாக மீண்டு வருவதை காட்டுகிறது. அதேசமயம் கடந்த ஒன்றாம் தேதி 32 ஆக இருந்த உயிரிழப்புகள், இன்று 31 ஆக இருக்கிறது.


ஈரோடு, திருப்பூர், நீலகிரி நிலவரம்


கொரோனா பாதிப்பில் ஈரோடு தொடர்ந்து இரண்டாவது இடத்தில் நீடிக்கிறது. இன்றும் சென்னையை விட ஈரோட்டில் அதிக கொரோனா பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. இன்று 1365 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள நிலையில், 11 பேர் உயிரிழந்துள்ளனர். 1921 பேர் குணமடைந்துள்ள நிலையில், 12 ஆயிரத்து 520 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மொத்த பாதிப்புகள் 73 ஆயிரத்து 612 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழப்புகள் 486 ஆக உயர்ந்துள்ளது.


திருப்பூர் மாவட்டத்தில் இன்று 853 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 13 பேர் உயிரிழந்துள்ளனர். 836 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 17 ஆயிரத்து 498 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நீலகிரி மாவட்டத்தில் இன்று 419 பேருக்கு கொரோனா பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. இன்று உயிரிழப்புகள் இல்லாத நாளாக அமைந்துள்ளது. 585 பேர் குணமடைந்துள்ளனர். அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்புகளை விட குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது மக்களிடம் நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.