கோவை ரயில் நிலையம் அருகே உள்ள அரசு மருத்துவமனையில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். இந்த நிலையில் கோவை அரசு மருத்துவமனையில் நேற்று இரவு பயிற்சி டாக்டர்கள் நோயாளிகளுக்கு மருத்துவ பணி செய்து கொண்டிருந்தனர். அப்போது இரவு 1 மணி அளவில் மருத்துவ கல்லூரி முதல்வர் அலுவலகம் அருகே வட மாநில வாலிபர் ஒருவர் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கே மருத்துவ சிகிச்சை பணியில் இருந்த பயிற்சி பெண் டாக்டர் அவர் தங்கியிருந்த அறைக்கு செல்ல முயன்ற போது, திடீரென அந்த வட மாநில வாலிபர் அவர் அணிந்திருந்த உடையை அகற்றி நிர்வாணமாக நின்று உள்ளார். பயிற்சி டாக்டர் அதிர்ச்சி அடையவே அவரிடம் வாலிபர் தவறாக நடக்க முற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் அலறியடித்த பயிற்சி பெண் டாக்டர் அங்கிருந்து உதவி கேட்டு ஓடினார். அப்போது அங்கு பாதுகாப்புக்கு நின்ற பாதுகாவலர்கள் அந்த வாலிபரை மடக்கி பிடித்தனர்.


பயிற்சி மருத்துவர்கள் போராட்டம்


இது குறித்து பந்தய சாலை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து வந்த காவல் துறையினர் அந்த வாலிபர் பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதனிடையே இன்று காலை பணிக்கு வந்த மற்ற பயிற்சி மருத்துவர்களுக்கு இந்த தகவல் தெரியவந்தது. அவர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் திடீரென சம்பவம் நடந்த இடம் அருகில் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தங்களுக்கு பணியின் போது பாதுகாப்பு வேண்டும், பயிற்சி மருத்துவர்கள் பெண்கள் 80 பேர், ஆண்கள் 70 பேர் இருக்கிறார்கள். ஆனால் பயிற்சி பெண் மருத்துவர்களுக்கு போதிய கழிப்பிட வசதி போன்ற வசதிகள் இல்லை. இதனால் பல சிரமங்களை சந்திக்க வேண்டியது உள்ளது என கூறி ஒரு மணி நேரத்திற்கு மேலாக தர்மாவில் ஈடுபட்டனர்.


கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்


இந்த தகவல் அறிந்து வந்த மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் நிர்மலா பயிற்சி மருத்துவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவர் கூறியதாவது, “பயிற்சி மருத்துவர்கள் உயர் கோபுர விளக்கு வசதி, கழிப்பிட வசதி மற்றும் பாதுகாப்பு உறுதி கேட்டு உள்ளார்கள். கோவை அரசு மருத்துவமனையில் அனைத்து வசதிகளும் உள்ளன. மேலும் கழிப்பிட வசதி உள்ளிட்டவை குறித்து பொதுப்பணித்துறை அதிகாரியிடம் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். பாதுகாவலர்கள் இரவு நேரத்தில் கூடுதல் ரோந்து பணி செய்ய உத்தரவு போடப்பட்டுள்ளது. எனவே பயிற்சி மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபடுவதை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும்” எனத் தெரிவித்தார். இதையடுத்து பயிற்சி மருத்துவர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.