கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள பில்லூர் அணை அமைந்துள்ளது. இந்த அணையில் இருந்து எடுக்கப்படும் நீர் கோவை மாநகர மக்களின் குடிநீர் தேவைக்கு பயன்படுத்தப்படுகிறது. இந்நிலையில் நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக நடப்பாண்டில் மூன்றாவது முறையாக பில்லூர் அணை நிரம்பியுள்ளது. ஏற்கனவே நடப்பாண்ட்டில் இரண்டு முறை முழு கொள்ளளவை பில்லூர் அணை எட்டிய நிலையில், மூன்றாவது முறையாக அணை மீண்டும் நிரம்பியுள்ளது. மீண்டும் தென்மேற்கு பருவ மழை காரணமாக அணையின் நீர் பிடிப்பு பகுதிகளான நீலகிரி மாவட்டம் அப்பர் பவானி, அவலாஞ்சி, குந்தா மற்றும் கேரளாவின் அட்டப்பாடி, மன்னார்காடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வருகிறது. இதனால் நேற்று இரவு முதல் பில்லூர் அணைக்கான நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து, இன்று காலை நிலவரப்படி சுமார் 20 ஆயிரம் கன அடி தண்ணீர் வரத்து இருந்தது.


இதன் காரணமாக நேற்று வரை 85 அடியாக இருந்து வந்த பில்லூர் அணை, இன்று காலை 93 அடியாக உயர்ந்தது. அதனை தொடர்ந்து மீண்டும் தண்ணீர் வரத்து அதிகரித்ததன் காரணமாக தற்போது 20 ஆயிரம் கன அடிதண்ணீர் வினாடிக்கு வந்து கொண்டிருப்பதால் அணை 100 அடியில் 97 அடி வரை நிரம்பியது. இதனையடுத்து அணையின் பாதுகாப்பு கருதி பில்லூர் அணையில் இருந்து அணைக்கு வரும் நீர் வரத்தான 20 ஆயிரம் கன அடி தண்ணீர் முழுவதுமாக வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், ஆற்றின் கரையோரம் வசிக்கக்கூடிய மக்கள் பாதுகாப்பாக இருக்க மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆற்றல் தண்ணீர் அதிக அளவில் வருவதால் ஆற்றில் இறங்கி குளிக்கவோ துணி துவைக்கவோ வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் வருவாய்த்துறை மூலம் தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகிறது.




நிரம்பிய ஆழியார் அணை


இதேபோல கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியார் அணையில் முழு கொள்ளளவு எட்டியது. மேற்கு தொடர்ச்சி மலைகளில் அமைந்துள்ள வால்பாறை, சின்னக்கல்லார், பெரிய கல்லார் சோலையார் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர் கனமழை பெய்து வருவதால் ஆழியார் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது. இதையடுத்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆழியார் ஆற்றங்கரையோரத்தில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்திருந்தனர். இந்நிலையில் நீர் வரத்து அதிகரிப்பு காரணமாக ஆழியார் அணை 120 அடி கொள்ளளவை முழுமையாக எட்டியது. இதையடுத்து அணையின் ஒன்பது மதகுகளில் இருந்து 1133 கன அடி தண்ணீர் வெளியேற்றும் செய்யப்பட்டது. வெளியேற்றப்படும் தண்ணீர் ஆழியார் ஆற்றில் கரைபுரண்டு ஓடி வருகிறது. இந்நிலையில் தொடர் மழை காரணமாக பாலாற்றில் ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டு கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் அங்கலகுறிச்சி அருகே மலையடிவாரத்தில் ஆற்றின் மையப்பகுதியில் அமைந்துள்ள பாலாற்றங்கரை ஆஞ்சநேயர் கோயிலுக்கு செல்லும் பாலத்தின் மீது தண்ணீர் செல்கிறது. இன்று ஆடி வெள்ளி என்பதால் பக்தர்கள் பாலாற்றங்கரை ஆஞ்சநேயர் கோயிலுக்கு அதிகளவு வழிபாடு செய்ய வருகை புரிவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பக்தர்களின் பாதுகாப்பு கருதி ஆஞ்சநேயர் கோயிலுக்கு செல்ல கோயில் நிர்வாகம் சார்பில் தடை விதிக்கப்பட்டுள்ளது.