கோவை கார் வெடிப்பு வழக்கில் 20 இடங்களில் என்.ஐ.ஏ சோதனை ; முழு விபரம் இதோ..!

கார் வெடிப்பு சம்பவத்தில் தொடர்பில் இருந்தவர்கள், தடைசெய்யப்பட்ட இயக்கங்களின் ஆதரவாளர்கள் ஆகியோரின் வீடுகளில் இந்த சோதனையானது நடத்தப்படுகின்றது.

Continues below advertisement

கோவை உக்கடம் அருகே கோட்டை ஈஸ்வரன் கோயில் முன்பாக கடந்த 23ம் தேதியன்று அதிகாலை மாருதி கார் ஒன்று வெடித்துச் சிதறியது. இதில் காரில் இருந்த நபர் உடல் கருகி உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக உக்கடம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதனிடையே காவல் துறையினர் நடத்திய முதல் கட்ட விசாரணையில் காரில் இருந்த சிலிண்டர் வெடித்ததில் கார் இரண்டாக உடைந்து சிதறியதும், அப்பகுதியில் ஏராளமான ஆணிகளும், கோலி குண்டுகளும் இருந்தது கண்டறியப்பட்டது. பின்னர் காரில் சிலிண்டர் வெடித்து உயிரிழந்தவர் உக்கடம் ஜி.என். நகர் கோட்டை புதூர் பகுதியை சேர்ந்த ஜமேசா முபின் என்பதும், 2019 ம் ஆண்டில் இவரிடம் தேசிய பாதுகாப்பு முகமை அமைப்பினர் அவரிடம் விசாரணை நடத்தியதும் தெரியவந்தது.

Continues below advertisement

இதையடுத்து ஜமேசா முபின் வீட்டை சோதனையிட்ட காவல் துறையினர் 75 கிலோ வெடி மருந்துகளை கைப்பற்றினர். இவ்வழக்கில் தொடர்புடைய உக்கடம் பகுதியை சேர்ந்த முகமது தல்கா முகமது அசாருதீன், முகமது ரியாஸ், பெரோஸ் இஸ்மாயில், முகமது நவாஸ் இஸ்மாயில் ஆகிய 5 பேரை உக்கடம் காவல் துறையினர் கைது செய்து விசாரணை நடத்தினர். மேலும் 5 பேர் மீதும் உபா சட்டத்தில் கீழ் வழக்குப்பதிவு செய்து நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர். ஆன்லைனில் வெடி மருந்துகளை வாங்கிக் கொடுத்ததாக கோவை வின்செண்ட் சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்த ஜமேசா முபினின் உறவினரான அப்சர்கான் (28) என்பரிடம் காவல் துறையினர் கைது செய்தனர். இதனால் இவ்வழக்கில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆறாக உயர்ந்துள்ளது.


இதனிடையே கைது செய்யபப்ட்ட 5 பேரிடம் காவல் துறையினர் கஸ்டடியில் எடுத்து 3 நாட்கள் தனித்தனியாக விசாரித்தனர். மேலும் அவர்களது வீடுகளிலும் சோதனை நடத்தினர். இதனிடையே சம்பவம் நடந்த கோவிலுக்கு அருகே ஜமேசா முபின் ஒரு மாதம் முன்பு வரை வசித்துள்ளார் என்பதும், அப்துல் மஜீத் வீட்டில் ஒரு மாதத்திற்கு முன்பு வரை வசித்து வாடகைக்கு வசித்து வந்ததும் தெரியவந்துள்ளது. மேலும் ஜமேசா முபின் வீட்டில் இருந்து சில சந்தேகத்திற்குரிய ஆவணங்கள் மற்றும் குறிப்புகளை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.

கார் வெடிப்பு தொடர்பாக காவல் துறையினர் நடத்திய புலன் விசாரணை முடிக்கப்பட்டு, தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளிடம் வழக்கு தொடர்பான அனைத்து கோப்புகளும் ஒப்படைக்கப்பட்டன. மேலும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளுக்கு உதவ 2 ஆய்வாளர்கள், 4 உதவி ஆய்வாளர்கள் உள்ளிட்ட காவல் துறையினர் நியமிக்கப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.


இந்நிலையில் கோவை கோட்டை மேடு, உக்கடம், பொன்விழா நகர், ரத்தினபுரி உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். கார் வெடிப்பு சம்பவத்தில் தொடர்பில் இருந்தவர்கள், தடைசெய்யப்பட்ட இயக்கங்களின் ஆதரவாளர்கள் ஆகியோரின் வீடுகளில் இந்த சோதனையானது நடத்தப்படுகின்றது. உக்கடம் கோட்டை மேடு பகுதியில் சனோபர் என்பவரின் வீட்டில் என்... அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை, கொச்சின் ஆகிய பகுதிகளில் இருந்து வந்துள்ள அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அப்பகுதிகளில் காவல் துறையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

Continues below advertisement
Sponsored Links by Taboola