COIMBATORE: கோவை கார் வெடிப்பு சம்பவம்: 20க்கும் மேற்பட்ட இடங்களில் மீண்டும் களமிறங்கிய என்.ஐ.ஏ!
கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக மீண்டும் என்.ஐ.ஏ அதிகாரிகள் 20க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக மீண்டும் என்.ஐ.ஏ அதிகாரிகள் 20க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை உக்கடம் அருகே கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பாக கடந்த 23ம் தேதியன்று அதிகாலை மாருதி கார் ஒன்று வெடித்துச் சிதறியது. இதில் காரில் இருந்த நபர் உடல் கருகி உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக உக்கடம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதனிடையே காவல் துறையினர் நடத்திய முதல் கட்ட விசாரணையில் காரில் இருந்த சிலிண்டர் வெடித்ததில் கார் இரண்டாக உடைந்து சிதறியதும், அப்பகுதியில் ஏராளமான ஆணிகளும், கோலி குண்டுகளும் இருந்தது கண்டறியப்பட்டது. பின்னர் காரில் சிலிண்டர் வெடித்து உயிரிழந்தவர் உக்கடம் ஜி.என். நகர் கோட்டை புதூர் பகுதியை சேர்ந்த ஜமேசா முபின் என்பதும், 2019 ம் ஆண்டில் இவரிடம் தேசிய பாதுகாப்பு முகமை அமைப்பினர் அவரிடம் விசாரணை நடத்தியதும் தெரியவந்தது.
Just In




கார் வெடிப்பு தொடர்பாக காவல் துறையினர் நடத்திய புலன் விசாரணை முடிக்கப்பட்டு, தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளிடம் வழக்கு தொடர்பான அனைத்து கோப்புகளும் ஒப்படைக்கப்பட்டன. மேலும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளுக்கு உதவ 2 ஆய்வாளர்கள், 4 உதவி ஆய்வாளர்கள் உள்ளிட்ட காவல் துறையினர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தேசிய புலனாய்வு முகமை விசாரணை:
இதனைத் தொடர்ந்து தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கார் வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட 6 பேரும் கோவை சிறையில் இருந்து, சென்னை சிறைக்கு மாற்றப்பட்டுள்ளனர். கோவை சிறையில் இருந்த 6 பேரும் பாதுகாப்புடன் சென்னை பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அழைத்து செல்லப்பட்டனர். 6 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காவலில் எடுத்து விசாரணை செய்ய என்.ஐ.ஏ அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
இதையடுத்து, கோவை சிறையில் இருந்த 6 பேரும், சென்னை பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இந்நிலையில், 6 பேரையும் வரும் 22ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில் என்.ஐ.ஏ மீண்டும் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். கோவையில் 20க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை செய்து வருகின்றனர். தடை செய்யப்பட்ட அமைப்பினர், ஆதரவாளர்கள் வீடுகளில் சோதனை நடத்தி வருகின்றனர்.