கோவை சரவணம்பட்டி அருகே உள்ள விஸ்வநாதபுரம் பகுதியைச் சேர்ந்தவர் உதயகுமார். 48 வயதான இவர், வழக்கறிஞராக பல ஆண்டுகளாக பணி புரிந்து வந்தார். இரத்தினபுரி பகுதியில் இவரது அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இவரது மனைவி நித்தியவள்ளி தனியார் மருத்துவமனை ஒன்றில் மருத்துவராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் நேற்று வழக்கு ஒன்று தொடர்பாக பொள்ளாச்சி வரை செல்வதாக உதயகுமார் தனது மனைவியிடம் கூறிவிட்டு மதியம் கிளம்பியுள்ளார்.


8 தனிப்படைகள் விசாரணை


தனக்கு சொந்தமான காரில் அவர் கிளம்பிய நிலையில், அவருடன் மேலும் சிலரும் அந்த காரில் பயணித்ததாக கூறப்படுகிறது. இதனிடையே பொள்ளாச்சி செல்லும் சாலையில் உள்ள மயிலேறிபாளையம் பிரிவு அருகே வந்த போது, நெடுஞ்சாலையில் இருந்து பிரிந்து செல்லும் சாலையில் அந்த கார் பயணித்துள்ளது. சிறிது தூரத்தில் கோழிப்பண்ணை ஒன்றின் அருகே காரில் இருந்தவர்கள் உதயகுமாரை வெளியே இறக்கி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் சரமாரியாக அவரை வெட்டி உள்ளனர். இதில் பலத்த காயமடைந்து, ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உதயகுமார் உயிரிழந்தார். இதன் பின்னர் அவரை படுகொலை செய்த நபர்கள், உதயகுமாரின் காரில் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.




இதுதொடர்பாக அவ்வழியாக சென்றவர்கள் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற செட்டிபாளையம் காவல் துறையினர் உதயகுமாரின் உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவ இடத்திற்கு சென்ற கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் நேரில் ஆய்வு செய்தார். உதயகுமாரின் உடல் மீட்கப்பட்டு, பிரேதப் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் குற்றவாளிகளை கைது செய்வதற்காக 8 தனிப் படைகள் அமைக்கப்பட்டு, கொலைக்காக காரணம் குறித்தும் காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். வழக்கறிஞர் உதயக்குமார் கொலைக்கு காரணமானவர் விரைந்து கைது செய்ய காவல் துறையிர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வழக்கறிஞர்கள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். கோவை அருகே பட்டப்பகலில் வழக்கறிஞர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.


கொலைக்கான காரணம்


தனிப்படை காவல் துறையினர் கொலையாளிகளை தேடி வந்த நிலையில் கோவை ரத்தினபுரியைச் சேர்ந்த அய்யனார் என்கிற செல்வம் (26), கோவை கணபதி பகுதியைச் சேர்ந்த கௌதம் என்கிற விருமாண்டி (20), கோவை நல்லாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அருண்குமார் (26), கோவை சங்கனூர் பகுதியைச் சேர்ந்த அபிஷேக் (20) ஆகிய நால்வர் கோவில்பாளையம் காவல் நிலையத்தில் நள்ளிரவில் சரண் அடைந்து உள்ளனர். இதையடுத்து நால்வரையும் காவல் துறையினர் கைது செய்தனர். இதுதொடர்பாக கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “இந்த கொலை வழக்கில் 8 தனிப்படைகள் அமைத்து தேடுதல் வேட்டை நடத்தபட்டதில், 12 மணி நேரத்தில் 4 பேரை கைது செய்துள்ளோம். அவர்களிடம் விசாரணை மேற்கொண்டதில், இவர்கள் நான்கு பேரும் கோவையை சேர்ந்தவர்கள். அய்யனார் என்ற செல்வம் மற்றும் கௌதம் ஆகியோர் வழக்கறிஞர் உதயகுமாருடன் காரில் சென்றுள்ளனர். அப்போது வழக்கறிஞர் உதயகுமாருக்கு கொடுத்த 30 லட்சம் பணத்தை அய்யனார் திருப்பி கேட்டதால் வாக்குவாதம் ஏற்பட்டது. அய்யனார் கொடுத்த பணத்தை திரும்ப கொடுக்காமல் உதயகுமார் ஏமாற்றி இருக்கின்றார்.


வாக்குவாதம் முற்றவே செட்டிபாளையம் அருகே காரை நிறுத்தி, அய்யனாரின் நண்பர்களான அருண்குமார் மற்றும் அபிஷேக் ஆகிய இரண்டு பேரை வரவழைத்து, நான்கு பேரும் சேர்ந்து அரிவாளால் வழக்கறிஞர் உதயகுமாரை வெட்டி கொலை செய்துள்ளனர். இந்த கொலை வழக்கில் கார், இரு சக்கர வாகனம், அரிவாள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பணம் கொடுக்கல், வாங்கல் பிரச்சனை மட்டுமே இந்த கொலைக்கான காரணம். இந்த வருடம் கொலை வழக்குகள் குறைந்துள்ளன. சோஷியல் மீடியாவை கண்காணிக்கத் தனி குழுக்கள் உள்ளது. கல்லூரிகளில் மாணவர்களை கண்காணிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் போதை பொருள் விற்பனை செய்பவர்களை கைது செய்து வருகிறோம்” எனத் தெரிவித்தார்.