கோவை மாநகர காவல் துறையில் துப்பறியும் மோப்ப நாய் பிரிவு கடந்த 1965-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து கடந்த 2001-ம் ஆண்டு முதல் மோப்ப நாய்களுக்கு பயிற்சி அளிக்கும் சிறப்பு மையம் தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இங்கு தற்போது 7 மோப்ப நாய்கள் உள்ளன. போதை பொருட்களை கண்டறிவதற்காக கோவைக்கு தற்போது புதிதாக பெல்ஜியம் மெலானாய்டு வகையை சேர்ந்த மதனா என பெயரிடப்பட்ட 8 மாதம் ஆன மோப்ப நாய் சேர்க்கப்பட்டதால் மோப்ப நாய் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்து உள்ளது. 


கொலை, கொள்ளை போன்ற குற்றச் சம்பவங்கள் நடைபெறும் போது குற்றவாளிகளை அடையாளம் காண காவல் துறைக்கு உதவியாக மோப்ப நாய்கள் பயன்படுத்துவது வழக்கம். குற்றச் சம்பவம் நடைபெறும் இடத்திற்கு மோப்ப நாய் வரவழைக்கபட்டு அங்கு கிடைக்கும் அடையாளங்களை வைத்து குற்றவாளிகளை கண்டுபிடிக்க மோப்ப நாய்கள் பயன்படுத்தப்படுகிறது. நாயின் வேகத்திற்கு ஏற்ப ஓடும் வகையில் ஆண் காவலர்கள் மோப்ப நாய்களுக்கு பயிற்சி அளித்து கையாண்டு வருகின்றனர். இந்நிலையில் தமிழகத்தில் முதல் முறையாக கோவை மாநகர காவல் துறையில் மோப்ப நாய்களை கையாள்வதற்காக இரண்டு பெண் காவலர்களை நியமிக்கப்பட்டுள்ளனர்.




திருப்பூரைச் சேர்ந்த கவிப்பிரியா (25), தேனியைச் சேர்ந்த பவானி (26) ஆகிய இரண்டு பெண் காவலர்கள், தற்போது பயிற்சி பெற்று வருகின்றனர். ஆறு மாதப் பயிற்சிக்குப் பிறகு, மோப்ப நாய்களைக் குற்ற சம்பவம் நடக்கும் இடங்களுக்கு அழைத்துச் செல்வார்கள். இதில் காவலர் கவிப்பிரியா திருப்பூர் மாநகரில் உள்ள செல்லம் நகரை சார்ந்தவர். பிஎஸ்சி (இயற்பியல்), பிஎட், பிஏ (இந்தி) மற்றும் மனித வளத்தில் டிப்ளமோ படித்துள்ளார்.    கோவை காவலர் பயிற்சி பள்ளியில் பயிற்சி பெற்றுள்ளார். பயிற்சிக்குப் பிறகு, கோவை நகர ஆயுதப் படைப் பிரிவில் பணியாற்றி வந்தார்.


இது குறித்து அவர்கள் கூறுகையில், ”நாங்கள் கடந்த 2022-ம் ஆண்டு கோவை மாநகர ஆயுதப்படை பிரிவில் பணியில் சேர்ந்தோம். எங்களுக்கு செல்லப்பிராணிகள் மிகவும் பிடிக்கும். பயிற்சியில் இருந்த போது, ​​கோவை மாநகரில் உள்ள துப்பறியும் நாய் படை மற்றும் நாய்பயிற்சி மையத்தைச் சேர்ந்த ஒரு குழுவினர் மோப்ப நாய்களை வரவழைத்து, அவற்றின் திறன்களைக் காட்டினர். இந்த நேரத்தில் தான்  துப்பறியும் நாய்களைக் கையாள விரும்புகிறீர்களா என அதிகாரிகள் கேட்டார்கள். உடனே, நாய்களைக் கையாளும் விருப்பத்தைத் தெரிவித்தோம். இதனைத்தொடர்ந்து இந்த பிரிவில் சேர்த்தனர். 




மாநகர காவல் ஆணையர் அலுவலக கட்டிடத்தில் அமைந்துள்ள துப்பறியும் நாய் படை மற்றும் நாய் பயிற்சி மையத்தில் பெண் காவலர்  கவிப்பிரியாவுக்கு மோப்ப நாய் வில்மாவிற்கு பயிற்சி அளிக்கும் பணியும் (குற்றம் மற்றும் கொலை குற்றவாளிகளை கண்டறியும் நாய்),  பெண் காவலர் பவானிக்கு மோப்ப நாய் மதனாவிற்கு பயிற்சி அளிக்கும் பணியும் (போதைப்பொருளை கண்டறியும் பணி) வழங்கப்பட்டுள்ளது.  இவர்களுக்கு மே 1ம் தேதி முதல் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. மோப்ப நாய் பிரிவில் சேர்ந்து நாய்களுக்கு அதிகாரிகளின் சொல்லுக்கு கீழ்ப்படிதல், போதை பொருட்களை கண்டறிவது, கொலை, கொள்ளை சம்பவங்களில் துரத்திச்சென்று மோப்பம் பிடிப்பது போன்ற பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது” எனத் தெரிவித்தனர்.  


இதுகுறித்து கோவை மாநகர காவல் ஆணையர் வி.பாலகிருஷ்ணன் கூறுகையில், ”ஆண்  காவலர்கள் மட்டுமே துப்பறியும் நாய்களைக் கையாள்பவர்களாக பணிபுரிந்து வருகின்றனர். பெண் காவலர்களுக்கு வாய்ப்பு வழங்க முடிவு செய்து, இரண்டு பெண் காவலர்களை தேர்வு செய்து மோப்ப நாய்களைக் கையாள்பவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.  இதே போன்று காவல் ஆணையரின் அதிவிரைவு  படையிலும் மூன்று பெண் காவலர்கள் நியமிக்கப்பட உள்ளனர்” எனத் தெரிவித்தார்.