கடந்த சில தினங்களாக தமிழ்நாட்டில் உள்ள வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக பல்வேறு போலி வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரப்பப்பட்டு வருகிறது. இதனால் வடமாநில தொழிலாளர்கள் பலரும் அவர்களது சொந்த ஊருக்கு திரும்பி வருவதாகவும் இதனால் தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக, பல்வேறு தொழில் அமைப்பினர் தெரிவித்து வருகின்றனர்.


இந்நிலையில் கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பினர் கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடியை சந்தித்து, வட மாநில தொழிலாளர்களுக்கு இடையே நிலவும் அச்சத்தை போக்கி, நம்பிக்கை ஊட்டும் வண்ணம் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என மனு அளித்துள்ளனர். 


இது குறித்து பேட்டி அளித்த அக்கூட்டமைப்பின் தலைவர் ஜேம்ஸ்,  ”கடந்த சில தினங்களாகவே வட மாநில தொழிலாளிகள் தமிழகத்தில் தாக்கப்படுவதாக பீகார் சட்டமன்ற உறுப்பினர் பேசியதன் விளைவாக இங்குள்ள வட மாநில தொழிலாளர்களை அவர்களது குடும்பத்தினர் அவர்களது ஊர்களுக்கு திரும்பி வரவேண்டும் என கட்டாயப்படுத்துகின்றனர். பல்வேறு தொழிற்சாலைகளில் பணியாற்றி வரும் வடமாநில தொழிலாளர்கள் ஊருக்கு செல்ல வேண்டும் என நெருக்கடி கொடுத்து வருகிறார்கள். பல்வேறு தொழிலாளர்கள் அவர்களது ஊருக்கு திரும்பி செல்கின்றனர். 




கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து தொழில்களிலுமே வட மாநில தொழிலாளர்களின் பங்களிப்பு என்பது பெரும் அளவு உள்ளது. பவுண்டரி, குறுந்தொழில் கூடங்களில் 75% த்திற்கும் மேல் பணிபுரிந்து வருகிறார்கள். வட மாநில தொழிலாளர் இல்லையென்றால் இங்கு தொழில்கள் முடக்கப்படும் என்கின்ற சூழ்நிலை இருக்கிறது. இந்த நிலையில் பீகார் சட்டமன்றத்தில் எந்தவித முகாந்திரமும் இல்லாமல் சட்டமன்ற உறுப்பினர்கள் அவ்வாறு கூறியதன் விளைவாக இது நடைபெற்று வருகிறது. இது ஒரு பொய்யான தகவல். இதனை பூதாகரமாக மாற்றி உற்பத்தி தொழில் முடக்குகின்ற அளவிற்கு நெருக்கடியை கொடுத்து வருகிறார்கள்.  


உடனடியாக தமிழக அரசு பீகார் அரசிடம் பேசி பீகாரில் இருக்கக்கூடிய குடும்பத்தினர்களுக்கு நம்பிக்கை அளிக்கக்கூடிய நடவடிக்கையை தமிழக அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும். கோவை மாவட்டத்தில் வடமாநில தொழிலாளர்கள் அதிகமாக வசிக்கக்கூடிய பகுதிகளில் மாவட்ட நிர்வாகம் காவல்துறை மூலம் இந்தி பேசுகின்றவர்கள் மூலம் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து இந்தியில் பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டும். தற்போது ஹோலி பண்டிகை வர உள்ள நிலையில் வடமாநிலத் தொழிலாளர்கள் அவர்களது சொந்த ஊருக்கு செல்வது வழக்கமாக இருக்கின்ற போதிலும். தற்பொழுது அச்சத்தின் காரணமாக அவர்கள் செல்வது எங்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. 




இதுபோன்று வடமாநில தொழிலாளர்கள் தொடர்ந்து அவர்கள் ஊர்களுக்கு திரும்புவார்களேயானால் கோவை மட்டுமின்றி தமிழகம் முழுவதும் தொழில்துறை உற்பத்தி துறை மிகவும் பாதிக்கப்படும். சமூக வலைத்தளங்களில் தவறான கருத்துக்களை பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். சமூக வலைத்தளங்களில் அரசு சார்பில் இந்தி மொழியில் அவர்களுக்கு எடுத்து கூறுவது போன்ற நடவடிக்கைகளை தீவிர படுத்த வேண்டும்” எனத் தெரிவித்தார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண