வடகிழக்கு பருவமழை வலுபெற்று வரும் நிலையில் தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை சற்று தாமதமாக தொடங்கிய நிலையில் அக்டோபர் மாதம் வரை 49% மழை குறைவாக பதிவானதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. நவம்பர் மாதம் தொடங்கியது முதல் தமிழ்நாட்டில் அனேக பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது.


தென்இந்தியப்பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும், கேரள கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், சேலம், நாமக்கல், திருப்பூர், கரூர், தேனி, திண்டுக்கல், மதுரை, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாளை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, தேனி, திண்டுக்கல், தென்காசி, மதுரை மாவட்டங்கள், கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என கணிக்கப்பட்டுள்ளது.





கோவை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. குறிப்பாக இரவு நேரங்களில் கன மழை பெய்து வந்தது. இதன் காரணமாக நீர் நிலைகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. இந்நிலையில் கோவை மாவட்டத்தில் நேற்றிரவு பரவலாக கனமழை பெய்தது. நேற்றிரவு 11 மணிக்கு பின்னர் ரேஸ்கோர்ஸ், பாப்பநாயக்கன் பாளையம், புலியகுளம், ரெட்பீல்டு, சுங்கம், ராமநாதபுரம், உக்கடம், பீளமேடு, சிங்காநல்லூர், கவுண்டம்பாளையம், செல்வபுரம், வெள்ளலூர், இடையர்பாளையம், குனியமுத்தூர், போத்தனூர், சுந்தராபுரம் உள்பட பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்தது. விடிய விடிய கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதன் காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி உத்தரவிட்டுள்ளார். இதேபோல கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி, குன்னூர், குந்தா, கோத்தகிரி ஆகிய பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் அருணா உத்தரவிட்டுள்ளார்.


இதனிடையே கோவை மாவட்டத்தில் கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் உள்ள சாலைகளில் வெள்ள நீர் தேங்கியுள்ளது. குறிப்பாக அவிநாசி சாலை மேம்பாலத்தின் அடியில் மழை நீர் தேங்கியுள்ளது. இதனால் அந்த வழியாக போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதேபோல லங்கா கார்னர் பகுதியில் உள்ள ரயில்வே மேம்பாலத்தின் அடியிலும் மழை நீர் தேங்கி இருப்பதால் போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. வெள்ள நீரை வெளியேற்றும் பணிகளில் மாநகராட்சி நிர்வாகத்தினர் ஈடுபட்டு வருகின்றனர். இதேபோல நெம்பர் 4 வீரபாண்டி பகுதியில் சாலைகளில் மழை நீர் தேங்கி இருப்பதால், அப்பகுதி முழுக்க வெள்ளக் காடாக காட்சியளிக்கிறது. கணுவாய் பகுதியில் பெய்த மழை காரணமாக அப்பகுதியில் உள்ள ஓடையில், வெள்ளம் கரை புரண்டு ஓடி வருகிறது.




வடவள்ளி மருதமலை சாலையில் உள்ள ஐஓபி காலனி பகுதியில் உள்ள தரைப்பாலம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதால், அப்பகுதியில் போக்குவரத்து தடை பட்டுள்ளது. அப்பகுதி மக்கள் வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சின்னவேடம்பட்டி குப்புசாமி நகர் பகுதியில் மழைநீர் வீடுகளுக்குள் புகுந்ததால், பொது மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். அப்பகுதியில் முறையாக சாக்கடை கட்டாததே மழை நீர் வீடுகளுக்குள் வர காரணம் என பொதுமக்கள் குற்றம்சாட்டினார். தொடர்ந்து மழை பெய்து வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.